அண்மையில் எழுதியவை

Wednesday, January 18, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 6:30 PM 14 comments

கருந்தேள் டைம்ஸ் 5 - SOPA & PIPA


கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது. திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே போதும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இப்போது இதனை மறுபடி எழுத நினைத்தது, நண்பர் பாலகிருஷ்ணன், SOPA & PIPA பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று கேட்டதால்தான். எழுதத் துவங்குமுன்னர் அவற்றைப் பற்றி முதலில் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? ஆகவே அவற்றைப் பற்றி விரிவாக இணையத்தின் உதவியால் படித்தேன். அப்படி நான் படித்தவற்றைப் பற்றி முடிந்த அளவில் எளிமையாக எழுத முயல்கிறேன். இவற்றைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்வதே நோக்கம். எங்காவது தவறு ஏதாவது இருப்பின், நண்பர்கள் அவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். திருத்தி விடலாம்.


SOPA & PIPA என்றால் என்ன?

SOPA என்பது, Stop Online Piracy Act என்பதன் சுருக்கம். அதுபோலவே, PIPA என்பது, Protect IP Act  என்று பொருள்படும்.


இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், இன்னொரு விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் விவாதிப்போம். அதிலேயே இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிய தகவல்களும் எளிதில் புரிந்துவிடும்.

Piracy.

மீடியா பைரஸி என்பது தற்போது வெகு தீவிரமாகப் பரவிவிட்ட ஒரு விஷயம். ஒரு படம் வெளியானால், அன்றே அதன் டாரண்ட் ஃபைல் அப்லோட் செய்யப்பட்டுவிடுகிறது.  அதேபோல, பாடல்களும். இப்படிப்பட்ட மீடியா பைரஸியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பல இணையதளங்கள் உலகெங்கும் இருக்கின்றன. எல்லோருக்கும் Isohunt  பற்றித் தெரிந்திருக்கும். அதுபோலவே piratebay, kickasstorrents போன்ற தளங்கள். இவற்றில், முறையாகக் காப்புரிமை பெறப்படாத திரைப்படங்கள், டாக்குமென்ட்ரிக்கள், பாடல்கள், வீடியோக்கள், மென்பொருட்கள் ஆகியவை இறைந்து கிடக்கின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

இதனால் என்ன பிரச்னை என்பதும் அத்தனைபேருக்கும் தெரிந்த ஒன்றுதான். முறையாகக் காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய், இப்படிக் காப்புரிமை பெறாமல் அதே பொருளைத் திருட்டுத்தனமாக வெளியே விடுவதன் மூலம் குறைகிறது. இதுதான் மூலகாரணம். மட்டுமல்லாமல், முறையாகக் காப்புரிமை பெறப்படாமல் உருவாக்கப்படும் இதுபோன்ற விஷயங்கள், அப்பட்டமான திருட்டேயன்றி வேறில்லை என்ற காரணமும் சேர்ந்துகொள்கிறது (காப்புரிமை பெறாமல் காப்பியடிப்பதன் தீமைகள் பற்றி நண்பர்களுக்கு நன்கு தெரியும் அல்லவா? தமிழ்த்திரையுலகில் ஒவ்வொரு மாதமும் வரும் ஏதாவது ஒரு படத்தின் மூலம் அதனைக் கவனித்துக்கொண்டே இருக்கிறோமே? கமல் அடித்த காப்பிகளைப் பற்றி நான் எழுதுகையில்,  'இட்லிகளை ஒரே போன்று தயாரிப்பதில்லையா? தோசை மாவு ஒன்றுதானே? ஹா ஹூ' என்று 'அவசர' அறச்சீற்றம் அடைந்து பொங்கி, காமெடியனாக மாறிய சில பிரபல பதிவர்களுக்கு இப்போதாவது இது புரிந்திருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்). 

இப்படிக் காப்புரிமை பெறாமல் திருட்டுத்தனம் செய்த வலைத்தளங்களை முடக்க அமெரிக்க அரசும் நிறுவனங்களும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ISPக்களிடம் சென்று, இப்படி இந்தத் திருட்டு வலைத்தளங்களைத் தொடர்பு கொண்டு தரவிறக்குபவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கும் வேலையை அமெரிக்க அரசு கொஞ்ச காலம் முயன்றது. ஆனால் அந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை மூடுவதும் பலனளிக்கவில்லை. காரணம், இவற்றில் பல தளங்கள், வெளிநாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தன.

மண்டையைப் பிய்த்துக் கொண்ட அமெரிக்க அரசு, சில செனட்டர்களின் உதவியால் கொண்டுவந்திருக்கும் மசோதாக்களே இந்த இரண்டும். இவை இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றின் மீதான விவாதங்கள் இனிதான் நிகழ இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவற்றைப் பற்றி விரிவாக இனி பார்ப்போம்.


SOPA & PIPA  எப்படி செயல்பட இருக்கின்றன?


இந்த இரண்டு மசோதாக்களும், இரண்டு வகையான வழிமுறைகளை, சட்டவிரோதமான மீடியா காப்புரிமை மீறலுக்கு எதிராகப் பரிந்துரைக்கின்றன. முதல் வழியில், அமெரிக்க சட்டத்துறை, சம்மந்தப்பட்ட ISPக்களுக்கு, சட்டவிரோதமான இப்படிப்பட்ட காப்புரிமை மீறக்கூடிய வலைத்தளங்களை அடியோடு block  செய்யுமாறு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கமுடியும். அதாவது, இப்படிக் கற்பனை செய்துகொள்வோம். இந்தியாவில் ஆர்டெல் நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் பிறப்பிக்கும் ஆணை ஒன்றின்படி, குறிப்பிட்ட சில வலைத்தளங்களைத் தனது சந்தாதாரர்கள் access  செய்யமுடியாமல் அந்நிறுவனம் தடை செய்ய வேண்டும். இது ஒரு வழி. இந்த வழியில் ஒரு பிரச்னை இருக்கிறது. வலைத்தளங்களின் பெயரை மட்டுமே block செய்யவேண்டும் என்பது இந்த மசோதாக்களில் உள்ள ஒரு விஷயம். ஆகவே, அந்த வலைத்தளங்களின் IP அட்ரஸ்கள் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஐபி அட்ரஸையும் block  செய்ய வேண்டும் என்று இந்த மசோதாக்கள் ஆரம்ப காலத்தில் குரல் கொடுத்தாலும், அவற்றால் எழக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை மனதில் கொண்டு, அந்த கோஷத்தைக் கைவிட்டுவிட்டன.

இரண்டாம் வழிமுறையின்படி, காப்புரிமையை முறையாகப் பெற்றிருக்கும் நிறுவனங்களோ அல்லது மனிதர்களோ, சட்டவிரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வலைத்தளம் ஒன்றுக்குக் கிடைக்கக்கூடிய அத்தனை உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கமுடியும். அதாவது, குறிப்பிட்ட வலைத்தளம் ஒன்றுக்கு வெளியேயிருந்து கிடைக்கும் பண உதவிகள், விளம்பரங்கள் ஆகியவற்றை நிர்ப்பந்தப்படுத்தி நிறுத்த முடியும். மட்டுமல்லாமல் கூகிள் போன்ற search engineகளையும் அந்தத் தளங்களைத் தனது தேடுதலில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று நிர்ப்பந்தப்படுத்தவும் முடியும். அதாவது, அந்த வலைத்தளத்தை ஊரை விட்டே ஒதுக்கிவைக்கக்கூடிய முயற்சி இது.

இந்த இரண்டு மசோதாக்களில், SOPAவே மிகவும் தீவிரமான மசோதா என்று சொல்லப்படுகிறது. SOPAவினால் எந்த வெளிநாட்டு வலைத்தளத்தையும் இப்படிக் கேள்வி கேட்க முடியும். உதாரணத்துக்குத் தமிழில் ஒரு வலைத்தளத்தில் யாராவது ஏதாவது பின்னூட்டத்தில் டாரண்ட் தளம் ஒன்றின் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இது அமெரிக்காவில் இருக்கும் ஏதாவது ஒரு சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தெரிய வந்தால், அமெரிக்க அரசின் நீதிமன்ற உத்தரவு, இந்தத் தமிழ் வலைத்தளத்தின் மீது பாயும். அப்படிப்பட்டதொரு தீவிரமான, கடுமையான மசோதா இந்த SOPA. இதனுடன் ஒப்பிடும்போது PIPA என்பது தீவிரத்தன்மை குறைந்ததொரு மசோதா என்றுதான் சொல்லவேண்டும். PIPA கேள்விகேட்பது, காப்புரிமை மீறலுக்கேன்றே செயல்படும் தளங்களை மட்டுமே.

SOPA & PIPAவின் தீமைகள்

இப்போது இதனைப் படித்துவந்த நண்பர்களுக்கு எளிதாக இவற்றின் தீமைகள் புரிந்திருக்கும். ஏதாவது ஒரு நிறுவனம் நினைத்தால், போட்டி நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிதில் முடக்கிவிடமுடியும். போட்டி நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறுகிறது என்று ஏதாவது ஒரு லின்க்கையோ அல்லது வேறு ஏதாவதையோ சுட்டிக்காட்டி, அதன் வலைத்தளத்துக்கு வந்துகொண்டிருக்கும் விளம்பரங்களையும் பணத்தையும் எளிதில் முடக்கி, அந்தத் தளத்தைத் தனிமைப்படுத்திவிட முடியும். ஒருவேளை அப்படிச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய் என்றால், சம்மந்தப்பட்ட நிறுவனம் இதனை  நிரூபிப்பதற்குள் உயிரே போய்விடும்.

அதேபோல், தனது தளங்களை மக்களே உபயோகிப்பதுபோல் இதுவரை இருந்துவந்த Wikipedia , Youtube போன்ற தளங்கள் இதனால் கொடும் பாதிப்புக்கு உள்ளாகவும் நேரிடும்.  ஒவ்வொரு சந்தாதாரரும் எதனை அப்லோட் செய்கிறார்கள் என்பதனைக் கண்கொத்திப் பாம்பு போல கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இவை தள்ளப்பட்டுவிடும்.


SOPA & PIPA வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்


இப்போது இந்த இரண்டு மசோதாக்களை எவர் எவர் ஆதரிப்பார்கள் என்பதும், எதிர்ப்பாளர்கள் யாராக இருக்கமுடியும் என்பதும் எளிதாகப் புரிந்துவிடுகிறது அல்லவா? திரைப்பட தயாரிப்பாளர்கள், ஆடியோ நிறுவன முதலாளிகள், டிவி நிறுவனங்கள், புத்தகப் பதிப்பாளர்கள், காப்புரிமை சம்மந்தமாக அடிக்கடி வழக்கு போடக்கூடிய நிலையில் இருக்கும் சில நிறுவனங்கள் (மேக்கப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்) ஆகியவை இந்த மசோதாக்களை பலமாக ஆதரிக்கின்றன.

பிரபல வலைத்தளங்களான EBay, Craigslist, Google, Mozilla, Twitter போன்ற தளங்கள் இந்த மசோதாக்களை முற்றிலும் எதிர்ப்பதற்கான அறிக்கையில் கையெழுத்தைப் பதித்திருக்கின்றன. இவற்றில் விக்கிபீடியா வெளிப்படையாகவே இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முழுதும் இயங்காமல் இருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.


SOPA & PIPA வின் தற்போதைய நிலைமை

இவற்றுக்கான வலுவான எதிர்ப்பில் சுதாரித்துக்கொண்ட இந்த மசோதாக்களில் இருந்து தற்போது வலைத்தளங்களின் பெயர்களை block  செய்யும் சங்கதி தூக்கப்பட்டுவிட்டது என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய விஷயம். SOPA, மேலும் அதில் திருத்தம் செய்யும் பொருட்டு,  தற்போது நிறுத்தியே வைக்கப்பட்டு விட்டது.  PIPA வைப் பற்றிய ஒட்டு மட்டும் வரும் 24 ம் தேதி அமெரிக்க செனட்டில் துவங்க இருக்கிறது.

இதுவே இவற்றைப் பற்றிய தற்போதைய செய்தி. இனிமேலும் இவற்றைப் பற்றிய புதுத் தகவல்களைத் திரட்டித் தர முயல்கிறேன்.

குறிப்பு - இந்தக் கட்டுரை, http://goo.gl/BhdWW   இந்தத் தளத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்றே சொல்லும் அளவுக்கு, அதில்தான் அத்தனை தகவல்களையும் எடுத்தேன்.


Monday, January 9, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 10:58 PM 9 comments

திரைக்கதை எழுதுவது 'இப்படி' - 13



சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது - கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம். 

Chapter 8 - The Two Incidents

Incident (சம்பவம்): ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சி அல்லது நிகழ்வு. 

ஜோ எஸ்டெர்ஹாஸ் (Joe Eszterhas) என்று ஒரு புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஹாலிவுட்டில் உண்டு. இவரது சிறந்த திரைக்கதைகள்: Basic Instinct, Sliver, Showgirls, Flashdance, Jade முதலியன. இவரைப் பற்றிய ஒரு சம்பவத்தோடு இந்த அத்தியாயத்தைத் துவக்குகிறார் சிட் பீஃல்ட். 

ஜோ எஸ்டெர்ஹாஸின் திரைக்கதைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில், ஜோவின் திரைக்கதைகளின் பாணியைக் கண்டறியும் பொறுப்பு, சிட் ஃபீல்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. அதாவது, ஜோவின் திரைக்கதைகளில் உள்ள அந்த பிரத்யேகத்தன்மை என்ன? எதனால் அவை தனிப்பட்டுத் தெரிகின்றன? எப்படி அவற்றைப் பிற திரைக்கதைகளில் இருந்து தனியே அடையாளம் காணமுடியும்? 

ஜோவின் திரைக்கதைகளை ஒவ்வொன்றாக இவ்விதம் படிக்க ஆரம்பித்தார் சிட் ஃபீல்ட். அப்படிப் படிக்கப்படிக்க, ஜோவின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதாவது, ஜோவின் திரைக்கதைகள், நிஜவாழ்வில் நிஜமான மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பற்றியே அமைந்திருந்தன. சாதாரண மனிதர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தார் ஜோ என்பது சிட் ஃபீல்டின் கணிப்பு. 

ஜோவின் பெரும்பான்மையான திரைக்கதைகளின் பாணி என்னவெனில், தொடங்கும்போதே ஒரு action சீக்வென்ஸ்; அந்த சம்பவத்தில், படம் பார்க்கும் ஆடியன்ஸை நேரடியாக ஈடுபடுத்துவது; அதனால் திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகரிப்பது என்றவாறே அவை இருந்தன. அதாவது, இதுதான் ஜோவின் டெம்ப்ளேட். 

உதாரணமாக, Basic Instinct திரைப்படத்தின் திரைக்கதை எப்படி ஆரம்பிக்கிறது என்று எழுதியுள்ளார் சிட் ஃபீல்ட். அதனை இப்போது பார்க்கலாம்.

'இருட்டு... எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல்' என்று தொடங்குகிறது அந்தத் திரைக்கதை. 'ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையின் மேல் உறவு கொள்கிறார்கள். சுவர்களிலும் படுக்கைக்கு மேலே உள்ள கூரையிலும், கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் மேஜையின் மீது ஒரு கண்ணாடி. அதில் கொக்கேய்னின் சிதறல்கள். ரொமாண்டிக்கான பாடல் ஒன்று டேப்பில் இழைந்துகொண்டிருக்கிறது'.

இப்படித் தொடங்குகிறது திரைக்கதை. 

இறுக்கமான, வேகமான, காமம் ததும்பும் காட்சி அது. காட்சி விளக்கப்படப்பட, வார்த்தைகள் குறைகின்றன. 'அவன் அவளுக்குள் இருக்கிறான். கைகள் மேலே கட்டப்பட்டிருக்கின்றன. மல்லாந்து, கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கிறான்...அவன்மேல் அவள்...தீவிரமாக அசைந்துகொண்டிருக்கிறாள்..அவளுக்காக அவன் தாபத்தில் துடிக்கிறான்...அவளை நோக்கி எழ முயல்கிறான்...அவனது தலை பின்னே சாய்கிறது...தலையைப் பின்னால் இழுப்பதால் அவனது தொண்டை வெளுக்கிறது...அவளும் துடிப்பில் பின்னால் வளைகிறாள்...அவளது இடுப்பு அவன்மேல் தீவிரமாக இயங்குகிறது...அவளது மார்புகள் விம்முகின்றன...'

காமத்தின் உச்சத்தில் இதன் பின் நடப்பது என்ன? 

'அவளது முதுகு, பின்னால் வளைந்துகொண்.....டே இருக்கிறது... கைகளை விரிக்கிறாள்... அவளது வலதுகை, திடீரென்று அவன்மேல் இறங்குகிறது....கத்தியின் மின்னும் வெளிச்சம்...அவனது தொண்டை வெளுத்திருக்கிறது...அவன் துடிக்கிறான்... அவளைநோக்கி வேகமாக எழ முயல்கிறான்...துடிக்கிறான்....எழ முயல்கிறான்...அவளது கையில் இருக்கும் கத்தி மேலும் கீழும் இயங்குகிறது...மேலும்... கீழும்...மேலும்... கீழும்... 

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். இரு உடல்கள்... காமம்... ரத்தம்.. இசை...

இந்தக் காட்சியைப் படித்தவுடன், மேலும் மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வெறி சிட் ஃபீல்டுக்கு ஏற்பட்டதாக அவர் சொல்கிறார்.  படிக்கப்படிக்க, திரைக்கதையின்பால் மேலும் மேலும் தூண்டப்பட்டிருக்கிறார். திரைக்கதையின் இந்த முதல் பக்கம் நமக்குத் தெரிவிக்கும் விஷுவல் action  அவரை அந்தத் திரைக்கதையின் ரசிகராக மாற்றிவிட்டது. 

சிட் ஃபீல்டைப் பொறுத்தவரையில், படிக்கும் நபரின் கழுத்தை இறுக்கிப் பிடித்து, திரைக்கதையின் மேல் ஈடுபாடு கொள்ளச் செய்வது இப்படிப்பட்ட திரைக்கதைகள்தான் என்று சொல்கிறார். பொங்கும் உணர்ச்சி, தீவிரமான காமம், கோரமான ஒரு கொலை.. மொத்தத்தில், பேரழிவு ஒன்று. இத்தகைய தொடக்கம் இருந்தால், எந்தத் திரைக்கதையும், ஆடியன்ஸை வெகுவாகத் தன்பால் ஈர்த்துவிடும் அல்லவா? 

இங்கே ஒரு வார்த்தை. இது, சிட் ஃபீல்ட் கொடுக்கும் ஏராளமான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. இதுதவிர, லார்ட் ஆஃப் த ரிங்ஸ், மேட்ரிக்ஸ், டெர்மினேட்டர் ஆகிய பல படங்களின் திரைக்கதைகளையும் அவர் சிலாகித்து எழுதியிருக்கிறார். ஆகவே, சிட் ஃபீல்ட்  பாராட்டிய ஒரே காரணத்துக்காக, பேஸிக் இன்ஸ்டிங்ட் போன்ற திரைக்கதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்று நாம் முடிவுகட்டிவிடக்கூடாது. பேஸிக் இன்ஸ்டிங்ட்டில் இருப்பது போன்ற வேகம், நமது திரைக்கதைகளில் இருக்கவேண்டும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும்  பாடம். 

பேஸிக் இன்ஸ்டிங்ட்டில், மேலே சொன்ன சம்பவம் நிகழ்ந்தபின்னர் என்ன ஆகிறது?

போலீஸ் துறையில் இருக்கும் கதாநாயகன் மைக்கேல் டக்ளஸ் இந்தக் கொலையைத் துப்பறிய வருகிறார் . அதன்பின் டக்ளஸுக்கும் கதாநாயகி ஷரோன் ஸ்டோனுக்கும் உறவு ஏற்படுகிறது. கதாநாயகியின் மேல் பைத்தியமாகவே ஆகிப்போகிறான் கதாநாயகன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

ஆகவே, இந்தத் திரைக்கதையின் பிரதான சம்பவமாக, தொடக்கத்தில் வரும் கொலை இருக்கிறது என்பதை சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார். இந்தத் துவக்கக் காட்சியும் படத்தின் கதையும் இப்படியாக, நேரடியான தொடர்பில் இருக்கின்றன. ஒப்பனிங் காட்சி இல்லையெனில் படமே இல்லை. 

படத்தின் துவக்கக் காட்சியான இந்தக் கொலையும், கதாநாயகன் தனது இச்சைகளுக்குப் பணிந்து நடப்பதுமான படத்தின் மீதிக் கதையும், கதாபாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் சம்பவம் ஆகிய இரண்டு விஷயங்களை நன்றாகவே புரிய வைக்கின்றன என்கிறார் சிட் ஃபீல்ட். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் பார்த்த ஒரு மேற்கோள் நினைவு இருக்கிறதா?
What is character but the determination of incident? And what is incident but the illumination of character?
கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால்  விளக்கப்படுவது அல்லவா? 
ஒரு சம்பவத்துக்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் எப்படி எதிர்வினை புரிகிறது என்பதை விளக்காமல், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிப் படம் பார்க்கும் மக்களுக்குப் புரியவைக்க முடியாது.

உதாரணத்துக்கு, தெருவில் ஒரு முதியவரை ஒரு ஆள், மாட்டை அடிப்பது போல் அடித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனைத் தாண்டிச் செல்லும் ஒரு கதாபாத்திரம்,

1. அவனுடன் சேர்ந்துகொண்டு அந்த முதியவரை அடிக்கிறது
2.தலையைக் குனிந்துகொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றுவிடுகிறது
3. 'அவரை விட்றா' என்று ஆவேசமாக அலறிக்கொண்டே அவனை அடி புரட்டி எடுக்கிறது

இந்த மூன்று கதாபாத்திர விளக்கங்களில், கதாநாயகன், வில்லனின் அடியாள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் யார் யார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறதல்லவா?

இதுதான் - 'கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா?'  என்பதன் விளக்கம். 

அதேபோல், இன்னொரு சம்பவம்.

இங்கே, படத்தின் கதாநாயகன், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனுடைய நன்னடத்தைக்கு சோதனை வரும் நேரத்தில், பாசிடிவாகவேதான் நடந்துகொள்வான். அதுவே வில்லனாக இருந்தால், கட்டாயம் தீய செயல்களை மட்டுமே புரிவான். இதுதான் 'சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால்  விளக்கப்படுவது அல்லவா?' என்பதற்கு உதாரணம். அதாவது, கதாபாத்திரத்தின் குணம் என்னவோ, அதைப்பொறுத்து, அக்கதாபாத்திரத்தின் எதிர்வினைகள் அமைகின்றன. 

இதையே பேஸிக் இன்ஸ்டிங்ட்டுக்குப் பொருத்திப் பார்த்தால், படத்தின் துவக்கத்தில் நடக்கும் கொலையால், கதாநாயகியை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரிக்கு, அவள்மேல் பைத்தியம் ஏற்படுகிறது (கதாநாயகனின் குணம்). அதனாலேயே படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சம்பவங்கள் அமைகின்றன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட். 

படத்தின் துவக்கத்தில் நிகழும் கொலை - அந்தச் சம்பவம் - Inciting  incident  என்று அழைக்கப்படுகிறது. Incite என்ற ஆங்கில வார்த்தைக்கு, 'தூண்டுதல்' என்பது பொருள். அதாவது, படத்தின் கதையைத் தூண்டும் ஒரு சம்பவமே inciting  incident என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், கொலைக்குப்பின்னர் என்ன ஆகிறது? படத்தின் கதை துவங்குகிறது. அதாவது, கதையின் முக்கியமான பகுதி. ஆகவே, இந்த முக்கியமான பகுதி, Key  incident  என்று அழைக்கப்படுகிறது. 

எனவே, திரைக்கதைக்கு பலமான ஒரு ஓப்பனிங் கொடுப்பதே inciting  incident  என்பது சிட் ஃபீல்டின் விளக்கம். இந்த inciting  incident  மூலம், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு, படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு - ஈர்ப்பு - ஏற்படுகிறது. ஒரு  திரைப்படத்தின் ஒப்பனிங் காட்சி இப்படி அமைந்துவிட்டால், அதுவே அப்படம் சுவாரஸ்யமாகச் செல்வதற்கு ஒரு காரணம்.
 
Inciting  incident  மற்றும் Key  incident  ஆகிய இரண்டு சம்பவங்களே, ஒரு திரைக்கதையின் பிரதான சம்பவங்கள்.

இந்த அடிப்படையில், ஒருசில தமிழ்ப்படங்களைப் பார்ப்போமா?

காக்க காக்க - இந்தப் படத்தின் inciting  incident, சூர்யா தூக்கி எறியப்படும் முதல் காட்சி. சூர்யா ஏன் தூக்கி எறியப்பட்டார்? என்ற கேள்வியின் பின்னர்தான் படத்தின் கதையே இருக்கிறது. Key incident என்பது, படத்தில் அதன்பின் என்ன நடக்கிறது என்பதே. 

விக்ரம் - Inciting incident  எது? அக்னிபுத்திரன் என்ற ராக்கெட் கடத்தப்படுவதே. அதன்பின் என்ன ஆகிறது என்பது Key incident.

ஒரு சிறந்த action  படத்துக்கோ அல்லது த்ரில்லர் படத்துக்கோ அல்லது ஒரு மர்மப் படத்துக்கோ, இந்த inciting  incident  என்பது அவசியம் தேவை என்கிறார் சிட் ஃபீல்ட்.

இந்த இரு சம்பவங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்கள் - அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தொடரும்...

Saturday, January 7, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:47 AM 10 comments

LOTR: The Series - 19 - Edoras & Rohirrim




முன்குறிப்பு- இந்தக் கட்டுரைகள், தொடர்ச்சியாக இல்லாமல், நான்-லீனியராக இருப்பதை நண்பர்கள் அவதானித்திருக்கலாம். அப்படி எழுதுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. நோக்கம் என்னவென்றால், ஆரம்ப சில கட்டுரைகள் தவிர்த்து, எந்தக் கட்டுரையைப் படித்தாலும் அது புரியவேண்டும் என்பதே. அதாவது, சென்ற கட்டுரையான ஜான் ஹோவ் மற்றும் அலன் லீ பற்றிய கட்டுரையை, இந்தக் கட்டுரைத்தொடரிலேயே முதன்முறையாகப் படித்தாலும், அது புரியவேண்டும். அதன்பின் அங்கொன்று இங்கொன்று எனப் படித்தாலும், சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் ஏற்படக்கூடாது என்பதால்தான் இப்படி எழுதப்படுகின்றன. ஆனால், ஈ-புக் வெளிவரும் நேரத்தில், மேலும் விடுபட்டவைகளையெல்லாம் சேர்த்து, கலர்ஃபுல்லாகக் கொண்டுவரவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

எடோராஸ் என்பது, ரோஹான் என்று அழைக்கப்படும் நாட்டின் தலைநகரம். White  Mountains  என்றழைக்கப்படும் மலைகளின் பள்ளத்தாக்கு ஒன்றில், ஒரு மலையின் மீது கட்டப்பட்ட நகரம் இது. இந்நகரை உருவாக்கியவரின் பெயர், ப்ரெகோ (Brego). ரோஹான் நாட்டின் இரண்டாவது மன்னர். காண்டோர் (Gondor) நாட்டின் வடக்கே அமைந்துள்ள பிராந்தியம் இது. ஏற்கெனவே ரோஹான் பற்றி மிகச்சுருக்கமாகப் பார்த்திருந்தாலும், இந்தக் கட்டுரையில் ரோஹான் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரிவாகப் பார்த்துவிடலாம். அது, இப்படங்களைப் புரிந்துகொள்ள உதவும். 

மிஸ்டி மலைகளுக்கும் வெள்ளை மலைகளுக்கும் (White Mountains) இடையில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அமைந்த இடமே ரோஹான். ஐஸன் ஆறு இதன் மேற்கு எல்லையாகவும், மிடில் எர்த்தையே கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிக்கும் ஆண்டூய்ன் ஆறு இதன் கிழக்கு எல்லையாகவும் அமைந்திருக்கின்றன. இந்த இடத்தில் வாழும் மனிதர்கள், ரோஹிர்ரிம் என்று அழைக்கப்பட்டனர். இதற்கு அர்த்தம் - குதிரை வீரர்கள் எனப் பொருள்படும் 'Horse Lords' என்பதாகும். ஆயினும், ரோஹானின் குடிமக்கள், தங்களை 'இயோர்லிங்காஸ்' (Eorlingas) என்றே அழைத்துக்கொண்டனர். இதற்குப் பொருள் - ரோஹானின் முதல் மன்னனான இயோர்லின் மக்கள் என்பது.

ரோஹான் எப்படி உருவானது?

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை நடப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னர், ஸிரியன் (Cirion) என்ற பெயருடைய காண்டோரின் அமைச்சர் - இவர்தான் அப்போது காண்டோரை ஆண்டுகொண்டிருந்தவர் - ஒரு போரை சந்திக்கவேண்டி வந்தது. இந்தப் போரில், அவர் தோல்வியடையும் நிலையில், அவரது உதவிக்கு வந்துசேர்ந்தது, இயோர்லின் கீழ் அமைந்த படை ஒன்று. இதன் காரணமாகப் போரில் வென்ற ஸிரியன், இயோர்லின் வீரத்தை மெச்சி, அவருக்கு அளித்ததே இந்த ரோஹான் நிலப்பரப்பு. இந்தப் போருக்காக கான்டோர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸிரியனின் பெரும்படை, லாத்லாரியனைக் கடக்கும் வேளையில், லாத்லாரியனிலிருந்து பெரும் மேகம் ஒன்று, இப்படைகளுக்கு மேலாகவே காண்டார் வரை துணைவந்தது. இந்த மேகத்தால் தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை ஸிரியனின் படை பெற்றது. ஆகவே, போரில் இக்கூட்டணி வென்றதற்கு இதுவும் ஒரு காரணம் (லாத்லாரியனில் வாழ்ந்து வந்த எல்ஃப்கள் இவ்விதமாக மறைமுக உதவி புரிந்தனர்) . இப்படியாக, ரோஹான் நாடு உருவானது. ஸிரியனின் சந்ததியினர், அந்நாட்டை ஆண்டுவந்தனர்.

இதற்குப் பலநூறு ஆண்டுகள் கழித்து, தெங்கெல் (Thengel) என்ற மன்னன் ரோஹானை ஆண்டுவந்ததிலிருந்து, நமக்குத் தேவையான கதை ஆரம்பிக்கிறது.

தெங்கெல் மன்னன் ரோஹானை ஆண்டபோதுதான், அவரது பிராந்தியத்திற்குள் இருக்கும் ஐஸங்கார்டை, ஸாருமான் என்ற மந்திரவாதி ஆக்கிரமித்தார். ரோஹானின் படையான ரோஹிர்ரிமை  அவ்வப்போது தாக்கி, இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்திருந்தார் இந்த ஸாருமான். அந்த நேரத்தில்தான் தெங்கெல் மன்னர் மரணமடைந்து, அவரது மகன் ரோஹானை ஆளும் பொறுப்பை ஏற்றார்.

ரோஹானின் இந்தப் புதிய மன்னனின் பெயர் - தியோடன்.

தியோடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பல வருடங்கள் கழிந்தபின், ஸாருமான் சாரோனின் பிடியில் விழுந்த நேரம். தியோடனின் மந்திரியான க்ரிமாவை தனது பிடியில் போட்டுக்கொண்டு, க்ரிமாவின் மூலமாகத் தியோடனை மெல்ல மெல்லத் தன்வசப்படுத்தினார் ஸாருமான். இதனால் ரோஹானின் படைகள் பலம்பெறுவதை ஸாருமானால் தடுக்க முடிந்தது. ரோஹானின் படைகள் வளராமல் போனால், பிற்காலத்தில் சாரோன் காண்டார் மீது போர் தொடுக்கையில், உதவிக்கு ஒருக்கால் ரோஹான் சென்றால், அதனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது ஸாருமானின் கணக்கு. ஆகவே, தனது ஆட்களான ஆர்க்கள் (Orcs) என்றழைக்கப்பட்ட பூதங்களை வைத்து, உருக் - க்ஹாய்களை உருவாக்கத் துவங்கினார் ஸாருமான். இந்த உருக்-க்ஹாய்களை வைத்து, ரோஹானின் எல்லைப்புறங்களில் காவல் காத்துவந்த படைகளை அழித்தார். உருக்-க்ஹாய்களைக் கொல்ல நினைத்த தியோடனின் மகனான தியோட்ரெட், ஸாருமானால் பீடிக்கப்பட்ட தியோடனால் தடுக்கப்பட்டான்.

இதன்பின்னர் நடந்ததெல்லாம் LOTR விசிறிகளுக்குத் தெரிந்திருக்கும்.

ரோஹான் நிர்மாணிக்கப்பட்ட விதம்


Mount Sunday என்று ஒரு மலை உண்டு. கேண்டர்பரியில். எடோராஸ் நகரத்தை நிர்மாணிக்க ஜாக்ஸன் முடிவுசெய்த இடம். முன்னதாக, அலன் லீயும் ஜான் ஹோவும் எடோராஸ் பற்றி வரைந்துகொடுத்த ஸ்கெட்ச்கள் ஜாக்ஸனிடம் இருந்தன. தனது ஆர்ட் டிபார்ட்மெண்ட்டின் உதவியை நாடிய ஜாக்ஸன், ஆர்ட் டிபார்ட்மெண்ட்டின் தலைவரான Dan Hannah விடம் லொகேஷன் பார்க்கச் சொல்லி உத்தரவிட்டார். குறிப்புகளின்படி, பெரிய மலையில், எடோராஸ் அமைந்திருக்க வேண்டும். அங்கேயே அதன் அரண்மனையும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது, நிறைவேற்றுவதற்கு மிகச் சிக்கலான விஷயம்.

மௌண்ட் சண்டேயில் முகாமிட்ட குழுவினர், முதலில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரு சாலையை அதன் அடிவாரத்தில் அமைத்தனர்.  அதன்பின், மலையுச்சியில் கட்டிடங்களை அமைக்கும் பணி துவங்கியது. இந்த இடத்தின் பிரச்னை என்னவென்றால், இருபுறமும் பெரிய மலைகள் இருந்ததனால், நடுவில் அகப்பட்டுக்கொண்ட இப்பிரதேசத்தில், மிகப்பலமான காற்று வீசியதுதான். சில தருணங்களில், அங்கு நிற்பதே முடியாத காரியமாக இருந்தது.

அத்தனை சிக்கல்களையும் மீறி, மௌண்ட் சண்டேயின் மீது எடோராஸின் செட் அமைக்கப்பட்டபோது, எட்டு மாதங்கள் கழிந்துவிட்டிருந்தன.

இவ்வளவு நாட்கள் ஆனதற்கு இன்னொரு காரணம், டோல்கீன், தனது புத்தகங்களில்,எடோராஸின் ஒவ்வொரு அடியையும் வர்ணித்து எழுதியிருந்ததே. அத்தனை தத்ரூபமாக இந்த இடத்தை உருவாக்க, மிக நீண்ட காலம் தேவைப்பட்டது.படத்தில் எடோராஸ் அரண்மனையைக் காட்டும்போது கவனித்தால், அரண்மனையின் உட்புறத்தில் அத்தனை அழகாக வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்படிருப்பதைக் காணலாம்.

எட்டு மாதங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய செட்டில், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடந்தது? ஜஸ்ட் மூன்றே வாரங்களில், மூன்று பாகங்களுக்குமான படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது. அதன்பின், பிரம்மாண்டமான அந்த செட், முற்றிலுமாகக் கலைக்கப்பட்டது.

இந்த வீடியோவைக் கவனியுங்கள். எடோராஸ் நிர்மாணிக்கப்பட்ட அதிசயத்தைக் காணலாம்.


தொடரும் . . .

Wednesday, January 4, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 4:27 PM 12 comments

Sherlock Holmes 2:A Game of Shadows (2011) - Part 2

 பாகம் இரண்டு 

 

பாகம் ஒன்று  - Sherlock Holmes 2: A Game of Shadows (2011)

சென்ற கட்டுரையில், பொதுவான ஷெர்லக் ஹோம்ஸின் குணாதிசயங்களையும், இத்திரைப்படத்தில் அவரை சரியான அளவில் சித்தரிக்கவில்லை என்பதையும், இன்னும் சில விஷயங்களையும் பார்த்தோம். இப்போது, இந்தத் திரைப்படத்தில் என்னென்ன தகவல்கள் ஹோம்ஸைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகின்றன என்பதையும், அவைகள் எந்தெந்தக் கதைகளில் வருகின்றன என்பதையும், திரைப்படத்தில் வரும் இதர கதாபாத்திரங்களைப் பற்றிய விரிவான தகவல்களையும், மேலும் சில விபரங்களையும் முடிந்தவரை சுவாரஸ்யமாகப் பார்க்க முயலலாம். 

ஷெர்லக் ஹோம்ஸ்: குணாதிசயங்கள் 

ஷெர்லக் ஹோம்ஸ், பலவித உணர்வுகளின் கலவை. பொதுவாக, ஏதாவது கேஸ் ஒன்றைத் துப்பறிகையில், நாட்கணக்கில் உணவே அருந்தாமல், மிகத்தீவிரமாக விபரங்கள் சேகரிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதேபோல், எதையாவது யோசிக்கையில், புகையிலையைப் புகைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் பேசாமல் இருக்கும் மனிதர் அவர். இதனாலேயே, தாழிடப்பட்டிருக்கும் அவரது அறையைத் திறந்துகொண்டுவரும் வாட்ஸன், அங்கே நிலவும் புகைமண்டலத்தைப் பார்த்து, ஹோம்ஸைப் பலமுறை திட்டிய நிகழ்ச்சிகள் உண்டு. 

இதுதவிர, துப்பாக்கி சுடுவதிலும், குத்துச்சண்டையிலும், வயலின் வாசிப்பிலும் வித்தகரான ஹோம்ஸுக்குப் பெரிதும் உவகை தரக்கூடிய விஷயம் என்னவெனில், தனது கேஸ்களில், எந்தத் தடயமும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசாரின் முன் நின்றுகொண்டு, தான் கண்டுபிடித்திருக்கும் விஷயங்கள் பற்றிப் பேசுவதே. போலீஸ் துறையினரின் இயலாமையை இப்படித் தீர்த்துவைப்பது ஹோம்ஸின் பிடித்தமான விளையாட்டு. அடிக்கடி இப்படி ஹோம்ஸுக்கு முன் அவமானம் அடைவது, லெஸ்ட்ரேட் என்ற இன்ஸ்பெக்டர். 

ஹோம்ஸின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை, Sherlock  தொலைக்  காட்சி சீரீஸிலும் சரி, இந்தத் திரைப்படங்களிலும் சரி, சிறப்பாகவே காட்டியுள்ளனர். ஹோம்ஸின் மூளைக்குள் நடக்கும் படுவேகமான - துல்லியமான அனாலிசிஸ், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எப்படிப் புரியும்? Sherlock தொலைகாட்சி சிரீஸில், சம்பவம் நடந்த இடத்துக்கு ஹோம்ஸ் சென்றதுமே, அவரது மூளையில் பளிச்சிடும் விஷயங்களை, ஸ்க்ரீனிலும் காட்டுவார்கள். இதனால், பார்க்கும் ஆடியன்ஸ், ஹோம்ஸின் சிந்தனையைத் தொடர முடியும்.

அதேபோல், இந்தத் திரைப்படங்களில், ஒரு விஷயத்தை ஹோம்ஸ் யோசிப்பதை, மிகச்சிறப்பாகக் காட்டியிருப்பார்கள். எந்த விஷயமானாலும், அவற்றின் பல்வேறு பாதைகளில் ஹோம்ஸ் வேகமாகப் பயணித்து, ஒவ்வொரு பாதையின் முடிவையும் உடனடியாக அனலைஸ் செய்து, அவற்றில் சிறந்த முடிவைத் தேர்ந்தெடுத்து, அதனை செயல்படுத்துவார். இத்தனையும் ஒருசில வினாடிகளில் முடிந்துவிடும்.

உதாரணமாக, இந்த வீடியோவைப் பாருங்கள். இதில், மேலே சொன்ன ஹோம்ஸின் சிந்தனையோட்டம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 


தான் செய்யும் அசைவுகளுக்கு எதிராளியின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று கணித்து, ஒவ்வொரு ஸ்டெப்பாக மூளையிலேயே ஓட்டிப்பார்த்து, அதனை இம்மி பிசகாமல் செயல்படுத்தும் ஹோம்ஸின் ஜீனியஸ் இப்படிப்பட்டது. 

இந்தக் காட்சியை விட அட்டகாசமான ஒரு காட்சி, இரண்டாம் பாகத்தில் உண்டு. ஒரு சண்டையில், ஹோம்ஸ் தனது மூவ்மெண்டுகளை இவ்வாறாக யோசிக்கிறார்.

First, pillage the nest. Clip wings. Then, blunt his beak. Crack eggs, a pinch of salt, a touch of pepper...additional seasoning required. Breakfast is served.

இதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ஒரே நொடியில் எப்படி நிறைவேற்றுகிறார் ஹோம்ஸ் என்பதைப் படத்தில் கண்டு களிக்கலாம். படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. 

சுருக்கமாக - தான் எடுக்கும் முடிவுகள் சர்வநிச்சயமாக சரிதான் என்பது ஹோம்ஸின் அசைக்கமுடியாத நம்பிக்கை. கர்வம் என்றுகூடச் சொல்லலாம். 

Mycroft Holmes - இரண்டாவது ஹோம்ஸ்

ஷெர்லக் ஹோம்ஸுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவரது பெயர், மைக்ராஃப்ட் ஹோம்ஸ். இங்க்லாந்தின் அரசில் முக்கியப் பங்கு வகிப்பவர். ஹோம்ஸுக்கும் மைக்ராஃப்ட்டுக்கும் உள்ள பிரதான ஒற்றுமை - மைக்ராஃப்ட்டும் சிறந்த மூளை உடையவர். ஹோம்ஸை விட புத்திசாலி. ஜீனியஸுக்கும் ஜீனியஸ். இருவருக்கும் உள்ள பிரதான வேற்றுமை - உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து, தகவல்கள் சேகரிப்பது மைக்ராஃப்ட்டுக்குப் பிடிக்காத விஷயம். ஆகவே, ஒரு  தகவல் கிட்டங்கியாக - ஒரு கம்ப்யூட்டராக செயல்படுவதே மைக்ராஃப்ட்டின் வேலை. 

சில கேஸ்களில் ஹோம்ஸ், மைக்ராஃப்ட்டை கன்ஸல்ட் செய்ததுண்டு. இருக்கும் இடத்தை விட்டு அகலாத மைக்ராஃப்ட் கொடுக்கும் தகவல்கள், அந்த இடத்துக்கே சென்று புலனாய்வு செய்யும் அளவு துல்லியமாக இருக்கும். சரியாகவும் இருக்கும். 

மைக்ராஃப்டின் பழைய ஓவியம் ஒன்றை இணையத்தில் காண நேர்ந்தது. அதன்பின்புதான், ஷெர்லக் ஹோம்ஸ் பாகம் இரண்டில் ஸ்டீஃபன் ஃப்ரை (Stephen  Fry) என்ற நடிகரை ஒப்பந்தம் செய்த மாயம் விளங்கியது. அச்சு அசலாக அந்த ஓவியத்தைப் போலவே இவர் இருப்பதை இங்கே காணலாம். 


இந்தப் படத்திலும் மைக்ராஃப்ட் ஷெர்லக்குக்கு உதவுகிறார். மறைமுகமாக. எப்படி? படத்தில் பாருங்கள். குறிப்பாக, க்ளைமேக்ஸ்.

Sebastian Moran - உலகின் துல்லியமான துப்பாக்கி வீரர் 

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் பிறவி வில்லனான ப்ரொபஸர் மோரியார்ட்டியின் நம்பகமான வலது கை, இந்த செபாஸ்டியன் மோரான். இங்க்லான்ட் ராணுவத்தில் சேர்ந்து, இந்தியாவிலும் ஆஃப்கானிஸ்தானிலும் பணிபுரிந்துவிட்டு, காயம் காரணமாக ராணுவத்தை விட்டு விலகி, மோரியார்ட்டியிடம் சேர்ந்து, அவரது தலையாய கொலையாளியாக மாறிப்போனவரே இந்த செபாஸ்டியன் மோரான். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் துல்லியமாகச் சுட்டு எதிரியை வீழ்த்தும் திறமை கொண்டவர்.

இந்தப் படத்தை 'The Final Problem' சிறுகதையை வைத்து எடுத்திருப்பதை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் கண்டோம் அல்லவா? அக்கதையில், இப்படத்தின் நிகழ்வுகள் அத்தனையும் நடந்துமுடிந்தபின்பு, தப்பித்துப்போய், அதன்பின் ஷெர்லக்கைக் கொல்வதே வாழ்க்கை லட்சியமாக வாழும் மனிதர் இவர். மிக ஆபத்தான மனிதர்.

இந்தத் திரைப்படத்தில், செபாஸ்டியன் மோரான் பல காட்சிகளிலும் வருகிறார். இறுதியில் தப்பிக்கவும் செய்கிறார். ஆகவே, அடுத்த ஷெர்லக் ஹோம்ஸ் படத்தில் இவர் பிரதான பங்கு வகிப்பார் என நம்புகிறேன்.

Professor James Moriarty - ஹோம்ஸின் 'Other'

மோரியார்ட்டியைப் பற்றிய முதல் விவரணை, ஆர்தர் கானன் டாயலின் 'The  Final Problem' கதையில் வருகிறது. அக்கதையில், மோரியார்ட்டி, இங்க்லாந்தின் கிரிமினல்களுக்கெல்லாம் தலைவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது சாம்ராஜ்யத்தை ஹோம்ஸ் எப்படி அழிக்கிறார்; அதனால் ஹோம்ஸுக்கு நிகழும் ஆபத்து என்ன? என்பதைப் பற்றிய சிறுகதை அது. இக்கதையை கானன் டாயல் எழுதியது, ஹோம்ஸ் கதைகளை வரிசையாக எழுதிக்கொண்டிருந்த அலுப்பில் இருந்து விடுபடவே. ஆகவே, ஹோம்ஸுக்கு ஒரு எதிரியை சிருஷ்டித்த கானன் டாயல், அந்த இருவருக்கும் ஏற்ற முடிவினை இக்கதையில் அளித்தார். அது எப்படிப்பட்ட எதிர்வினையைக் கிளப்பியது என்றெல்லாம் ஹோம்ஸ் ரசிகர்கள் அறிவார்கள். அதனைப் பற்றிச் சொன்னால் இப்படத்தின் க்ளைமேக்ஸ் பற்றிச் சொல்லவேண்டியிருக்கும் என்பதால், இப்போது எதுவும் சொல்ல முடியாது.

மோரியார்ட்டியின் மீது ஹோம்ஸுக்கு இருந்தது, மரியாதை கலந்த எச்சரிக்கை உணர்வு. இந்தப் படத்தில் அது சரியாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் மோரியார்ட்டியை மூன்று முறை சந்திக்கிறார் ஹோம்ஸ். முதன்முறை சந்திக்கும்போது, வாட்ஸனைக் கொல்லப்போவதை ஹோம்ஸிடம் சொல்கிறார் மோரியார்ட்டி. இரண்டாம் முறை சந்திப்பதோ, மோரியார்ட்டியின் கைதியாக. அப்போதுதான் மோரியார்ட்டியின் திட்டமான உலகப்போரை உருவாக்குதல் ஹோம்ஸுக்குச் சொல்லப்படுகிறது. மூன்றாம் முறை இருவரும் சந்திப்பதுதான், மறக்கவே முடியாத இப்படத்தின் இறுதி நிமிடங்கள்.

இரண்டு ஜீனியஸ்கள் பொருதிக்கொள்வது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் இப்படத்தின் க்ளைமேக்ஸ். இருவருக்குமே ஒவ்வொருவர்களின் அடுத்த 'மூவ்' அத்துப்படி. ஆகவே, இருவரும் ஒருவரையொருவர் வெல்ல முயற்சிப்பது அட்டகாசம். குறிப்பாக, இருவரும் ஆடும் செஸ்.


 மோரியார்ட்டியின் கதாபாத்திரம், ஷெர்லக் ஹோம்ஸின் முதல் பாகத்தில் ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் (படத்தின் நடுப்பகுதி மற்றும் க்ளைமேக்ஸின் இறுதி நிமிடம்), முகம் தெரியாமல் வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.

Game of Shadows திரைக்கதை 

பொதுவாகவே, ஹாலிவுட் படங்களில் ஒரு திரைக்கதை டெம்ப்ளேட் உண்டு. அதாவது, திரைப்படத்தின் பின்பாதியில் ஏதாவது நடக்க இருக்கிறது என்றால், அச்சம்பவத்தோடு  தொடர்புடைய ஒரு விஷயத்தைப் படத்தின் முன்பாதியில் காட்டுவது. ஏனெனில், திடீரென்று ஒரு விஷயம் தொடர்பேயில்லாமல் நடக்கிறது என்பது அங்கே நடவாத காரியம். ஆகவே, முதலிலேயே ஒரு மிகச்சிறிய, முக்கியத்துவமே இல்லாத காட்சி ஒன்றில், பின்னால் நடக்க இருக்கும் பிரதான நிகழ்ச்சி ஒன்றோடு தொடர்புடைய சிறிய விஷயம் ஒன்று நடப்பதாகக் காண்பிப்பார்கள். அத்தனை ஹாலிவுட் படங்களிலும் இது தவறாமல் நடக்கும். அதேதான் இப்படத்திலும். இரண்டாவது பாதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்புடைய சிறிய நிகழ்ச்சிகள், படத்தின் முதல் பாதியில் வருகின்றன. அதேபோல், க்ளைமேக்ஸுக்குச் சற்று முன்பு, க்ளைமேக்ஸுக்குப் பெரிதும் தொடர்புடைய மிகச்சிறிய நிகழ்வு ஒன்றும் உண்டு. படம் பார்க்கும் நண்பர்கள் கவனிக்கலாம்.

படத்தின் திரைக்கதை, அலுக்காமல் நகர்கிறது. இருப்பினும், நான் கவனித்த ஒரே குறை, ஹோம்ஸை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜேம்ஸ்பான்ட் போலவே காட்டியிருக்கிறார் கை ரிட்சி. அது எனக்குப் பிடிக்கவில்லை. ஹோம்ஸ் துப்பறியும் விதம்தான் அவரது கதைகளுக்கு அழகு சேர்க்கும். முதல் படத்திலாவது சற்றுத் துப்பறிவார் ஹோம்ஸ். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ஹோம்ஸின் துப்பறியும் ஆற்றலைக் காட்டுவது மிகவும் குறைவே. இருந்தாலும், கதை நகரும் வேகம் அதனை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.

திரைப்படம் பார்க்கச் செல்லும் நண்பர்கள், அட்லீஸ்ட் நான்கைந்து ஷெர்லக் ஹோம்ஸ் சிறுகதைகளாவது படித்துவிட்டுச் சென்றால், கட்டாயம் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அவசியம் பாருங்கள்.

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி எழுத வேண்டும். படத்தை முதலில் பாருங்கள். அதன்பின் க்ளைமேக்ஸ் அனாலிசிஸ் வைத்துக்கொள்ளலாம். ஆகவே, விரைவில் மறுபடியும் ஷெர்லக் பற்றிப் பேசுவோம்.


Tuesday, January 3, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:03 AM 14 comments

Sherlock Holmes 2: A Game of Shadows (2011) - English




Let's begin the new year with Sherlock Holmes. 

முதலில், நண்பர்கள் இந்தக் கட்டுரைகளைப் படித்துவிடுதல் நலம்.
  

 ரைட். இப்போது, கட்டுரைக்குள் நுழையலாம்.

பாகம் ஒன்று - இரண்டு ஜீனியஸ்கள்

ஷெர்லக் ஹோம்ஸின் அதி தீவிர ரசிகர்கள்,கை ரிட்சியால் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தால், சற்றே மூட் அவட் ஆக வாய்ப்புகள் உண்டு என நினைக்கிறேன். இதற்குக் காரணம், ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை ஆர்தர் கானன் டாயல் சித்தரித்துள்ள விதமும், கை ரிட்சி அதனை முற்றிலும் எதிராகக் காண்பித்துள்ள விதமுமே. அப்படியென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன இவற்றில்?

முதலாவதாக, ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் கானன் டாயலால் சித்தரிக்கப்பட்டுள்ள ஹோம்ஸ் கதாபாத்திரம், 'majestic' என்று விளக்கப்படும் அளவு கம்பீரமான பாத்திரம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அங்கே இருக்கும் அத்தனைபேருக்கும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத குழப்பம் நிலவுகையில்,ஹோம்ஸ் மட்டும் தெளிவாக சிந்தித்துக்கொண்டிருப்பார். மிகப்பெரும்பாலும், முதல் தடயத்தைக் கண்ட அந்த நிமிடத்திலேயே குற்றவாளியை ஊகித்துவிடும் திறமை உடையவர் ஹோம்ஸ். அந்தக் கணிப்பு, 99 சதவிகிதம் சரியாகவே இருக்கும் (தனது கேஸ்களில் மிகச்சில முறைகள் மட்டுமே தோல்வியைத் தழுவிய ரெகார்ட் உடையவர் ஹோம்ஸ்). அதே சமயம், தனக்குத் தெரிந்ததை வெளியே சொல்லாமல், தன கூட வேலை செய்பவர்களை பயங்கரக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஹோம்ஸின் வழக்கம். தனது தொழிலின் மீதும் மூளையின் மீதும் ஹோம்ஸ் கொண்டிருக்கும் கர்வத்துடன் கூடிய அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம். அதே சமயம், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மத்தியில் படுகம்பீரமாகத் திகழும் நபர் அவர்.அவரை யாரும் குறைந்து மதிப்பிட்டு,கேள்விகள் கேட்டுவிட முடியாது.அவரை நெருங்கும்போதே தயக்கத்துடன் -ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனே மற்றவர்கள் அணுகுவது வழக்கம். காரணம், பயம் அல்ல. ஒரு ஜீனியஸை மிகச்சாதாரணமாக யாரும் அணுகிப் பேசிவிட முடியாதல்லவா? அதுதான் காரணம். Holmes demands an air of respect and authority where-ever he goes.  

 ஆனால், கை ரிட்சியின் இத்திரைப்படங்களிலோ, ஹோம்ஸ் கதாபாத்திரம், ஒரு காமெடியனைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுதான் படங்களின் வெற்றிக்குக் காரணம் என்று கை ரிட்சி வாதிடலாம். ஆனால், எப்படி அருள்மொழிவர்மர் காமெடியன் ஆக முடியாதோ, அப்படி ஹோம்ஸும் காமெடியன் ஆக வாய்ப்பே இல்லை என்பதே ஆர்தர் கானன் டாயலின் விசிறிகளின் கூற்று (அடியேனின் கூற்றும் தான்). அகவே, கானன் டாயலின் தீவிர விசிறிகளுக்கு, 2010ல் வெளிவந்த Sherlock என்ற தொலைக்காட்சி சீரீஸைப் பரிந்துரைக்கிறேன். அதில் வரும் ஹோம்ஸ் கதாபாத்திரமே நான் பார்த்த வரையில் முழுமையான கதாபாத்திரம்.

'The Final Problem' என்று ஒரு ஹோம்ஸ் சிறுகதை உண்டு. கதையின்மேல் க்ளிக் செய்து படிக்கலாம். இந்தக் கதையின் ஒருசில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு (குறிப்பாக, இதன் க்ளைமேக்ஸ்), அதை மசாலா தடவி நமக்குக் கொடுத்திருக்கிறார் கை ரிட்சி. அதுதான் இந்தப்படம்.

படத்தைப் பார்க்குமுன்னர், ஷெர்லாக்கின் பிரத்யேகத் திறமை என்ன என்று கொஞ்சம் அலசலாம். அது, படத்தைப் பார்ப்பவர்களுடைய சுவாரஸ்யத்தை மேலும் கூட்டக்கூடும்.

ஒருசிலருக்குப் பிறக்கும்போதோ அல்லது குழந்தைப்பருவத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்தோ, விசேடத் திறமைகள் பளிச்சிடத் துவங்கும். அந்தத் திறமையாலேயே அவர்கள் அதன்பின் எப்போதும் அறியப்படுவார்கள். அப்படிப்பட்ட விசேடத் திறமை கொண்டவர் ஹோம்ஸ். அந்தத் திறமையானது, வேட்டை நாய் போல அவரை எப்பொழுதும் பின்தொடர்ந்தே வந்திருக்கிறது.  அந்தத் திறமையால் ஷெர்லக் தனிப்பட்டுத் தெரிந்தாலும், அதனால் அவர் அடைந்த இன்னல்கள்தான் அதிகம்.

அதுதான் அவரது கவனிப்புத் திறன்.

பொதுவாக, நாம் உட்பட உலக மாந்தர்கள் செய்வது - looking. எதையுமே பார்ப்பதோடு சரி. ஆனால், ஹோம்ஸோ, எதையும் observe செய்பவர். ஒருமுறை எதையாவது கவனித்தாலே அது அவரது மூளையில் பதிந்துவிடும். அதுமட்டுமல்லாது, அந்தப் பொருளையோ நிகழ்ச்சியையோ தொடர்புபடுத்தி, சுற்றுப்புறங்களில் நடப்பவைகளை வரிசையாக ஒரு சங்கிலி போலக் கோர்த்து, அவரது மூளை செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அந்த முடிவுகளை மின்னல்வேகத்தில் அலசி, சரியானவற்றை எடுத்துக்கொள்வது ஹோம்ஸின் வழக்கம். அவரது பாஷையில் சொல்வதென்றால்:

when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. 
இந்த அலசும் திறனை வைத்தே ஹோம்ஸின் அத்தனை கதைகளும் அமைந்திருக்கும். இப்படமும்.

இதற்கு முன்னரே நாம் பார்த்திருக்கும் ப்ரொஃபஸர் மோரியார்ட்டி - ஹோம்ஸின் ஆஸ்தான வில்லன் - ஹோம்ஸின் ஜீனியஸுக்கு சளைக்காத மேதமையுடையவர் - இதில் வருகிறார். அதேபோல் இக்கதையின் இன்னொரு அறிமுகம், ஹோம்ஸின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான செபாஸ்டியன் மோரான் - உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவன். இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம், ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட். இவர்களைப் பற்றிய விபரங்கள், கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்.

ஆண்டு - 1891. ஹோம்ஸின் நண்பரான டாக்டர் வாட்ஸன், தனது குறிப்புகளைத் தட்டச்சு செய்வதில் கதை தொடங்குகிறது.  அது ஒரு மரண அஞ்சலி. Flashback.

ஹோம்ஸ் அறிமுகம். குறிப்பிட்டதொரு கேஸைத் துப்பறிந்து வருவதாகச் சொல்கிறார் ஹோம்ஸ். சில கொலைகள், சில பெரிய வியாபார ஒப்பந்தங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியன இக்கேஸில் அடக்கம். கேஸின் ஒரு நூலைப் பிடித்து, மோரியார்ட்டி அனுப்பிய ஒரு கடிதத்தைப் படித்து, அதன்மூலம் சிம்ஸா என்ற பெண்ணைச் சந்திக்கிறார் ஹோம்ஸ். அந்தக் கடிதத்தைக் கொண்டுவருவது, முந்தைய பாகத்தில் நமக்கு அறிமுகமான பெண் - ஐரீன் அட்லர் (ஹோம்ஸை இதுவரை ஜெயித்திருக்கும் ஒரே எதிரி).ஹோம்ஸிடம் கடிதம் மாட்டிக்கொண்டதை அறிந்த மோரியார்ட்டி, ஐரீனைக் கொன்றுவிடுகிறார்.

ஸிம்ஸாவின் அண்ணன் ஒரு தீவிரவாத கும்பலில் பிரதான அங்கம் வகிப்பதை ஹோம்ஸ் கண்டுபிடிக்கிறார். அவன் இருப்பது ஃப்ரான்ஸ். இதற்கிடையில், வாட்ஸனின் திருமணம். அப்போது ஹோம்ஸை முதன்முதலில் சந்திக்கும் மோரியார்ட்டி, வாட்ஸனைக் கொல்ல இருப்பதாக ஹோம்ஸிடம் சொல்கிறார். வாட்ஸன் திருமணமாகிப் போய்விட்டதாகவும், தங்கள் இருவருக்கும் இனி சம்மந்தம் இல்லை என்றும் ஹோம்ஸ் சொல்வதை மோரியார்ட்டி பொருட்படுத்துவதில்லை.அதனால் வாட்ஸனுடன் மாறுவேடத்தில் பயணிக்கும் ஹோம்ஸ், வாட்ஸனைக் காக்கிறார்.

ஹோம்ஸும் மோரியார்ட்டியும் மறுபடி சந்திக்கிறார்கள்.இம்முறை, ஹோம்ஸ்,மோரியார்ட்டியின் கைதி (எப்படி என்று படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்).  உலகப்போர் ஒன்றைத் தொடங்க இருப்பதே மோரியார்ட்டியின் நோக்கம் என்பது ஹோம்ஸுக்குப் புரிகிறது.

ஸ்விட்ஸர்லாந்தில் நடக்க இருக்கும் உலக நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தையில், மோரியார்ட்டி, அவரது நோக்கத்தை நிறைவேற்ற இருப்பது ஹோம்ஸுக்குத் தெரிகிறது. ஆஜராகிறார் ஸ்விஸ்ஸில் ஹோம்ஸ்.

மோரியார்ட்டியும் ஹோம்ஸும், இறுதி முறையாக, நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பது அனல் பறக்கும் க்ளைமேக்ஸ்.

எனக்கு அடிதடி,வெடிகுண்டு,ரத்தம் ஆகியன தெறிக்கும் க்ளைமேக்ஸ்களைவிட, இந்தப் படத்தில் வரும் க்ளைமேக்ஸ் போன்றவையே பிடிக்கும். அலட்டலில்லாத காட்சிகளில், அதிர வைக்கும் ஷாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. ஸீட் நுனி என்பதையும் மீறி, அத்தனை சுவாரஸ்யமாக இப்படத்தின் க்ளைமேக்ஸைக் கவனித்தேன். காரணம், ஹோம்ஸும் மோரியார்ட்டியும் இரண்டு மாபெரும் ஜீனியஸ்கள். அவர்கள் மோதிக்கொள்வது, இப்படித்தான் இருக்கவேண்டும். சும்மா துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்ளாமல், இருவருக்கும் பெரும் சொத்தாக இருக்கும் அபாரமான அறிவின் துணை கொண்டு இருவரும் மோதுவது அட்டகாசம்! இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள், க்ளைமேக்ஸை கவனியுங்கள். கிட்டத்தட்ட இதே போன்றதொரு க்ளைமேக்ஸ், ‘Sherlock' தொலைக்காட்சி சீரீஸின் இறுதியில் காணலாம். ஆனால், அதனைவிட இதுவே சிறந்தது.

இப்படத்தின் கதையில் ஒரு deep dive, திரைக்கதை, ஹோம்ஸ் துப்பறியும் விதம், மோரியார்ட்டி, மைக்ராஃப்ட், செபாஸ்டியன் மோரான் ஆகியவர்களின் character Bio போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள், இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் வர இருக்கின்றன. Brace yourselves !

'Sherlock Holmes 2: A Game of Shadows' திரைப்படத்தின் ட்ரெய்லர் இங்கே.


தொடரும்.....


Sunday, January 1, 2012

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:39 AM 11 comments

2011ன் சிறந்த பாடல்




2011 வருடத்தின் சிறந்த பாடல் எது?

இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி... அதென்ன வலைப்பூ? ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ?) படித்துவரும் நாற்பத்திரெண்டு லட்சத்து முப்பத்து ரெண்டு பேர், கடந்த 2011 ஜனவரி ஒன்றிலிருந்து நேற்று வரை அனுப்பிய எண்பத்தி நாலு லட்சத்து அறுபத்தி ரெண்டு மின்னஞ்சல்களை ஒன்று விடாமல் எண்ணி, படித்து, ஸ்பேம் க்ளிக்கிய அனுபவத்தில், மேலே சொன்ன கேள்வியைக் கடந்த நாலு நாள்களாக ஒரு கணம் விடாமல் யோசித்து வருகின்றேன். காரணம், இத்தனை லட்சம் வாசகர்கள் (எப்போது வாசகன் என்று ஒருவன் எழுத ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவன் நாசமாய்ப் போய் விடுகிறான் என்றார் பழைய சந்நியாஸி அலைஸ் ஓல்ட் மாங்க்) என்னை வினவிய அன்பின் பிரதிபலிப்பே. இதன் காரணமாக, கடந்த பதினோரு மாதங்களாக, இந்த ஆண்டு டிசம்பர் வரை வெளிவந்த நூற்றி சொச்சம் தமிழ்ப்படங்கள் (இதில் ஆங்கில சினிமாக்களை அட்டைக்காப்பி அடித்து வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ இத்யாதி படங்களும் சேர்க்கப்படுகின்றன) அத்தனையும் ஒன்றுவிடாமல் பார்த்து, அனலைஸ் செய்து, பிரித்து மேய்ந்து, கிழித்துத் தோரணம் கட்டி, கோலம் போட்டு, மாவிளக்கு வைத்து, இருப்பதிலேயே பெஸ்ட் என்று முடிவு கட்டிய பாடல்களின் வரிசை இதோ. இந்த லிஸ்டை ஆஸ்கருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன். இதன் காரணமாக, சிறந்த ஆஸ்கர் பரிசான நோபல் ப்ரைஸ் என்னைத் தேடி வரும் என்று எதிர்பார்க்கின்றேன். இதற்குக் காரணமான, சரக்கும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.

பின்குறிப்பு - 2011 ஜனவரியிலேயே நான் பார்த்த படங்களில், நரிதாஸ், பானை பிடிக்காதவள் துர்ப்பாக்கியசாலி, ஆயிரம் கதை வாங்கிய அபூர்வ குந்தாணி ஆகிய 2013ல் வந்த படங்களும் அடக்கம். இதற்குக் காரணம், திருட்டு டீவீடீக்களை எனக்கு அள்ளி வழங்கிய சுண்டல் கடை சுந்தரமே. 

பாடல் நிர் ஒன்று -     அடிடா அவள: மயக்கம் என்ன


பாடல் நிர் இரண்டு -  ஓட ஓட ஓட : மயக்கம் என்ன


பாடல் நிர் மூன்று -  கன்னித்தீவு பொண்ணா : யுத்தம் செய்


பாடல் நிர் நான்கு - ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா : சிறுத்தை


பாடல் நிர் ஐந்து- பெத்தவங்க பார்த்துவெச்ச பொண்ணை எனக்கு புடிக்கல - வேங்கை


பாடல் நிர் ஆறு - இச்சு இச்சு இச்சு இச்சு கொடு - வெடி


பாடல் நிர் ஏழு - கலாஸலா கலஸலா - ஒஸ்தி



இது தவிர, க்ரிடிக்ஸ் சாய்ஸாக, கீழ் வரும் பாடல்கள்.

பாடல் நிர் ஒன்று - மழை வரும் அறிகுறி (female) : வெப்பம் (the best song of 2011 - according to me)


பாடல் நிர் இரண்டு - நோ மணி நோ மணிடா : வானம்


பாடல் நிர் மூன்று - பிறை தேடும் : மயக்கம் என்ன



அம்புட்டுதேன். இந்த 2011ம் வருடத்தில், என்னைக் கவர்ந்த பாடல்களைக் கண்டு களியுங்கள். 2012 பட்டையைக் கிளப்ப, எனது மனமார்ந்த வாழ்த்துகள். Juz njoooooooooooooooooooooooooy n hv fun friends !!!!!


Tuesday, December 20, 2011

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 5:29 PM 8 comments

திரைக்கதை எழுதுவது 'இப்படி' - 12


Chapter 7 - Setting up the Story (contd..)

சென்ற கட்டுரையில், 'Chinatown' திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா? இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

முதல் பக்கத்தின் இரண்டாம் பத்தியிலேயே, பிரதான கதாபாத்திரமான Jack  Gittes  அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்படியே, அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய பல விஷயங்களையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

எப்படி?

'வெளியே நிலவும் சூட்டில்கூட, லினன் ஸூட் அணிந்திருக்கும் அந்தப் பாத்திரம், கேஷுவலாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது'. இது முதல் செய்தி. அதேபோல், 'தனது கைக்குட்டையால், மேஜையில் படிந்திருக்கும் அழுக்கினைத் துடைக்கிறது'. இந்தச் செய்தியானது, அந்தக் கதாபாத்திரம் மிகவும் கூர்த்த கவனிப்பு உடையது என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. இந்தத் தகவல் முக்கியமான ஒன்று. ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் செய்யும் தொழிலில் கூர்மையான கவனிப்பு மிக அவசியம்.

சிறிதுநேரம் கழித்து வெளியே செல்லும் அந்தப் பாத்திரம், மிக நேர்த்தியாக உடையணிந்திருக்கிறது. இதுபோன்ற விஷுவல் தகவல்களால், அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதில் எங்குமே அக்கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படவில்லை என்பது சிட் ஃபீல்ட் சொல்லும் இன்னொரு விஷயம். அதாவது, அக்கதாபாத்திரம் உயரமாக இருக்கிறதா, குள்ளமா, குண்டாக உள்ளதா ஆகிய எந்த விஷயங்களும் இல்லை. அதற்குப் பதில், அது எப்படி நடந்துகொள்கிறது என்பதைச் சொல்லியே அக்கதாபாத்திரத்தைப் பற்றிய புரிதலை நமக்குள் கொண்டுவந்துவிடும் வகையில் இந்தத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட். அதேபோல், Jack  Gittes  பாத்திரம், தன்னைப் பார்க்க வந்திருக்கும் மனிதனுக்கு, தன்னிடம் இருப்பதில் மலிவான விஸ்கி ஒன்றை ஊற்றிக் கொடுக்கிறது. இதனால் நாம் புரிந்துகொள்ளும் செய்தி? என்னதான் சிறிதளவு சூது இருப்பினும், பிறரைக் கவரும் வகையிலும், ஓரளவு பிறர் மேல் அன்புடனும் இருக்கிறது அந்தக் கதாபாத்திரம்.

திரைக்கதையின் நான்காவது பக்கத்தில், Jack  Gittes யார் என்ற செய்தி, விஷுவலாகக் காட்டப்படுகிறது -  'கண்ணாடியின் மேல், J.J. GITTES and Associates—DISCREET INVESTIGATION என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது' - என்ற வாக்கியத்தின் மூலம்.

திரைக்கதையின் முக்கியமான சம்பவம், பக்கம் ஐந்தில் சொல்லப்படுகிறது. அங்கேதான் மிஸஸ் மல்ரே என்ற பெண்மணி, ஜாக்கிடம் வந்து, தனது கணவருக்கு ஒரு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகவும், அதனை ஜாக் துப்பறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறாள். அதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்ச்சியால்தான் திரைக்கதையின் முதல் plot  point  நிகழ்கிறது (திரைக்கதையின் முப்பது நிமிடங்களில் நிகழும் இந்த முதலாவது ப்ளாட் பாயின்ட் என்னவெனில், நிஜமான மிஸஸ் மல்ரேவை ஜாக் சந்திப்பதே. அப்போதுதான், ஒரு மிகப்பெரிய சதிச்சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை ஜாக் உணர்கிறான். அதிலிருந்து மீள்வதற்காக ஜாக் செய்யும் விஷயங்களே மீதிக்கதை).

"என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன்" என்ற வார்த்தைகளே சைனாடௌன் திரைக்கதை செல்லும் போக்கினைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் அப்பெண்ணின் கணவரை ஜாக் பின்தொடர்கிறான். அப்படித் தொடர்வதால்தான் அந்த நகரில் நடைபெறும் மாபெரும் தண்ணீர் சம்மந்தப்பட்ட ஊழலைக் கண்டுபிடிக்கிறான். அதனால்தான் அப்பெண்ணின் கணவர் கொலை செய்யப்படுவதையும் கண்டுபிடிக்கிறான். இத்தனைக்குப் பிறகு, நிஜமான பெண்மணியை ஜாக் சந்திக்க நேர்கிறது. அப்போது, தன் கணவரைத் தொடர்ந்த குற்றத்துக்காக ஜாக்கின்மேல் போலீஸில் புகார் கொடுக்கப்போவதாகக் கூற, சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜாக், யாரோ ஒரு பெண்ணினால் அவன் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொள்கிறான். இயல்பிலேயே கர்வியான அவனால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் உண்மையைக் கண்டுபிடிப்பதில் மிகத் தீவிரமாக இறங்குகிறான்.

இப்படி ஒரு சரடில் கோர்க்கப்பட்ட சம்பவங்களாக இவை ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வதும், ஒவ்வொரு சம்பவத்துக்குமே முன்னர் நடந்த இன்னொரு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதுமே இத்திரைக்கதையை மிகச் சுவாரஸ்யமுடையதாகக் காட்டுகின்றன என்கிறார் சிட் ஃபீல்ட்.

இந்தத் திரைப்படத்தின் மைய இழையாக வரும் ஊழல், உண்மையில் 1900ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த உண்மைச் சம்பவம். அந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, 1937ல் கலிஃபோர்னியாவில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கிறது இத்திரைக்கதை.

ஆக, இந்தத் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களுக்குள்ளேயே பிரதான கதாபாத்திர அறிமுகம், திரைக்கதை செல்லப்போகும் பாதை, திரைக்கதையின் கரு ஆகிய அத்தனையுமே தெளிவாக எழுதப்பட்டிருப்பதைப்போல்தான் நாமும் நமது திரைக்கதைகளை எழுத முயல வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட். 

இத்துடன் சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமான 'Setting up the story' முடிவடைகிறது.

அடுத்த அத்தியாயத்தில், திரைக்கதைக்கு அவசியமான இரண்டு சம்பவங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அவை.....?

தொடரும் . . .

Friday, December 16, 2011

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:24 PM 1 comments

டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா - பாண்டிச்சேரி


நண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது. இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல் அனுப்பிய நண்பர் ரதியழகனுக்கு  நன்றிகள்.

இந்த விழாவில் வசந்தபாலன் உட்படப் பலரும் பேசிய ஆடியோ ஃபைலையும் அவர் அனுப்பியுள்ளார். அந்த ஃபைகளுக்கான டௌன்லோட் லின்க்குகள் இதோ.

http://www.2shared.com/file/bGMPK0Yi/Record000.html
http://www.2shared.com/file/0891B6LM/Record001.html
http://www.2shared.com/file/9crxmt-Y/Record002.html
http://www.2shared.com/file/HmkWFDKx/Record003.html
http://www.2shared.com/file/kDv5tWMe/Record004.html
http://www.2shared.com/file/95Gfk3zY/Record005.html
http://www.2shared.com/file/Ojv_oqyd/Record007.html
http://www.2shared.com/file/ogBiTHkB/Vasantha_balan.html

பாண்டிச்சேரியில் இருக்கும் நண்பர்கள், இந்த விழாவுக்குச் சென்று பயனுறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

updated on 17th Dec 2011 - இதோ - இன்றும் நாளையும் திரையிடப்படும் படங்களுக்கான நிகழ்ச்சி நிரல். 




Tuesday, December 13, 2011

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 5:12 PM 16 comments

சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா - சில குறிப்புகள்


நாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec  2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். என்னால் இயலாது. இருந்தாலும், நானும் ஒரு திரைப்பட விழாவை என்னளவில் கொண்டாட இருக்கிறேன். ஆகவே, என்னால் முடிந்தவரை இவற்றில் சில நல்ல திரைப்படங்களைப் பற்றி அவசியம் எழுத முயல்கிறேன்.

திரைப்பட அட்டவணை - (க்ளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கலாம் )







கொரியாவில் இருந்து ஒரே ஒரு படம் தான் இடம்பெறுகிறது (The Front Line). அது என்னைப்பொறுத்தவரை ஒரு பெரிய குறை. 

ஃப்ரான்ஸிலிருந்து பதினெட்டு படங்கள் கலந்துகொள்கின்றன. 

இவ்விழாவில் திரையிடப்படப்போகும் இரானியப் படங்கள் அனைத்துமே (ஒன்றிரண்டைத் தவிர்த்து) அருமையான படங்கள். தவற விடாதீர்கள்.  

678 என்ற எகிப்தியத் திரைப்படம், இந்தியாவில் பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பெரும் பிரச்னையான பாலியல் வன்கொடுமையைப் பற்றியது (பேருந்துகளில் கசக்கப்படும் பெண்கள் மற்றும் வன்கலவியால் பாதிக்கப்பட்டவர்கள்). கட்டாயம் இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள், நமது இந்தியாவுடன் இப்படத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.  

திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் அதிருஷ்டசாலி நண்பர்களுக்கு வயிற்றெரிச்சலுடன் கூடிய வாழ்த்துகள் :-) 



பி.கு 1 - திரைப்பட விழாவைப் பற்றிய விபரங்களுக்கு, திரைப்பட விழாவின் வலைத்தளத்தைப் பார்க்கலாம் - இங்கே.


பி.கு 2  - தமிழில் கலந்துகொள்ளும் படங்களில் எனது சாய்ஸ், ஆடுகளமும் அழகர்சாமியின் குதிரையும்.  
 

பி.கு 3 - இத்திரைப்பட விழாவில் இடம்பெறாத இரண்டு பிரதான இந்தியப் படங்கள்: ஆரண்ய காண்டம் மற்றும் Gandu. கூடவே, லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படமும் இடம்பெறவில்லை. அதைப்பற்றி இப்பதிவை வெளியிட்ட பின், நண்பர் மாமல்லன் கார்த்தி போட்ட பின்னூட்டத்தினால்  விரிவாகப் படித்தேன். இறையாண்மைக்கு எதிராக இருந்தது என்று சொல்லி நிராகரிக்கப்பட்ட படம் இது. நமது சென்சார் போர்டின் அயோக்கியத்தனத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. டண்டணக்கா படங்களுக்கெல்லாம் எந்த வெட்டையும்  தராமல், நல்ல படங்களை அமுக்குவதே இவர்களது வேலை. அப்படி அமுக்கப்பட்ட படம்தான் செங்கடல். அதன் கதையையும் விரிவாக வாசித்தேன். உண்மையில் நடப்பதைத்தான் அப்படம் சொல்கிறது. அது மக்களைச் சென்றடையவேண்டியதுதான் முறை. அப்படியிருக்க, இப்படத்தை ஒதுக்குவது மாபெரும் தவறே இன்றி வேறில்லை. அவரது பின்னூட்டத்தில் சொல்லியுள்ளபடி,  இது கயமைத்தனமேதான். இது வன்மையாக எதிர்க்கப்படவேண்டியது.

வெகு சீக்கிரம் செங்கடலைப் பற்றி இன்னமும் எழுத முயற்சிக்கிறேன்.