Saturday, March 13, 2010

Meghe Dhaka Tara (1960)- Bengali

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 11:09 PM 26 comments

 

Meghe_Dhaka_Tara poster

 

பெண்களைப் பற்றிய நமது பொதுவான கருத்து என்ன? அவர்களை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? பெண்களைப் பற்றிய நமது பார்வை, சமீபத்திய காலங்களில் தான் சற்றே மாறத் தொடங்கியுள்ளது. எத்தனையோ பெண்கள் தங்களது குடும்பத்துக்காக உழைத்து உழைத்துத் தேய்ந்துபோவதை நாம் பார்க்கிறோம். சாலையில் நடந்துசெல்லும்போதே, நம்மைக் கடந்து செல்லும் இப்படிப்பட்ட பெண்களை மிகச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். தங்களது சந்தோஷத்தைத் தொலைத்து நிற்கும் இந்தப் பெண்களைப் பற்றி நாம் என்றாவது யோசித்திருப்போமா? அவர்கள் வாழ விரும்பிய உலகத்தை அவர்கள் அடைந்திருப்பார்களா என்ற கேள்வி, கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 

Ritwik_ghatak ரித்விக் கட்டக். வங்காளத்தில் பிறந்த ஒரு திரைப்பட மேதை. தமிழகமும் இன்னபிற மாநிலங்களும், பத்தி பத்தியாக எதுகை மோனை நிரம்பிய அலங்கார வசனங்கள் அடங்கிய செயற்கையான திரைப்படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த அறுபதுகளில், பல அருமையான திரைப்படங்களை இயக்கியவர். ஒருவகையில் சொல்லப்போனால், சத்யஜித் ரேக்கு முன்னரே, ரியலிசத் திரைப்படங்களை எடுக்கத் துவங்கியவர். ஆயினும், இவரது புரட்சிகர மனநிலையினால், திரையுலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர். இவரது முதல் திரைப்படமான ‘நாகரிக்’, 1952விலேயே எடுத்துமுடிக்கப்பட்டது. ரேயின் பதேர் பாஞ்சாலியோ, 1955ல் தான் வெளியிடப்பட்டது. ஆனால், 1952ல் எடுத்து முடிக்கப்பட்ட நாகரிக், கட்டக் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது (1976).  மட்டுமல்லாது, ரேயின் படங்கள் அடைந்த வெற்றி, இவருக்கு அமையவில்லை. எனவே, ஒரு காலகட்டத்தில், படமெடுப்பதை நிறுத்திக்கொண்டு,  புனேவின் திரைப்படக் கல்லூரியில் விரிவுரைகள் வழங்கத் தொடங்கினார்.  இருப்பினும், திரைப்படங்கள் மேல் கொண்ட காதலால், மேலும் இரண்டு அருமையான படங்களை வழங்கிவிட்டு, தனது ஐம்பதாவது வயதில், நோய்வாய்ப்பட்டு, இறந்தார். இப்படியாக, ஒரு திரைப்படமேதையாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு மனிதன், கேட்பாரற்று மாண்டுபோனான்.

 

ஆனால், அவரது மாணவரான ஜான் ஆப்ரஹாமினால் கட்டக்கின் புகழ் மெல்ல மெல்லப் பரவத் துவங்கியது. இன்று, உலக அளவில் ஒரு மிக முக்கியமான திரை ஆளுமையாக மதிக்கப்படுபவர் ரித்விக் கட்டக்.

 

இவர் எடுத்த ஒரு ட்ரையாலஜியின் முதல் படமே இந்த ‘மேகே தக்க தாரா’. மேகங்களினால் சூழப்பட்டிருக்கும் நட்சத்திரம் என்று பொருள். இதன் அடுத்த இரண்டு படங்கள்: கோமல் கந்தார் மற்றும் சுபர்ணரேகா (விமர்சனம் வெகு விரைவில்).

 

இப்படத்தைப் பற்றி நமது சாரு, தனது ‘சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்’ புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். உலக சினிமாவில் செழியனும்.

 

படத்தின் கதையைப் படிக்கப் படிக்க உங்களுக்கு இக்கதை வெகுவாகப் பரிச்சயமுள்ள கதையாகத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், இங்குள்ள ‘இயக்குநர் சிகரம்’ (!!!??) பாலசந்தர், இப்படத்தை ஈயடிச்சாங்காப்பி அடித்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தை ஏற்கெனவே எடுத்தாயிற்று.  இப்படத்தைப் பார்க்க நேர்ந்தபோது, அதிர்ந்து போனேன். ஒரு அழகான உலகப் படத்தைக் காப்பி அடிப்பது அப்போதே ஆரம்பித்துவிட்டது போலும். அவர் ஆரம்பித்து வைத்ததை, அவரது சிஷ்யர்கள் பலரும் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

meghe dhaka tara_2 நீதா, அழகிய உள்ளம் படைத்த ஒரு பெண். மிகவும் ஏழைக்குடும்பத்தில், தந்தை ஆசிரியராக இருக்க, அண்ணன் எந்த வேலையும் செய்யாமல், பாடகனாவதற்கு முயன்றுகொண்டிருக்க, தம்பியும் தங்கையும் கலூரியில் படித்துக் கொண்டிருக்க, குடும்பத்தைத் தனது சம்பளத்தால் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண்.  அவள், வீட்டிற்கு வரும் வழியில், அவளது செருப்பு அறுந்துவிடுகிறது. அதை சரி செய்ய அவளிடம் பணமில்லை. ஒரு பின்னை எடுத்து, செருப்பைச் சரி செய்துகொள்கிறாள். இதனை அவளது அண்ணன் பார்க்கிறான். அவனுக்குத் தங்கையின் மீது கொள்ளைப்பாசம். என்றாவது ஒரு நாள், தான் ஒரு பெரிய பாடகனாகி, தங்கையை நன்றாகப் பார்த்துக் கொள்வது அவனது லட்சியம்.

 

வீட்டிற்கு வரும் நீதாவை, தம்பி தங்கை இருவரும் நச்சரித்து, அவளிடம் இருக்கும் எல்லாப்பணத்தையும் வாங்கிக்கொண்டுவிடுகின்றனர்.

 

ஒரு நாள், நீதாவின் தந்தை காலை முறித்துக் கொண்டு விட, குடும்பப் பாரத்தின் அத்தனை சுமையும் நீதாவின் தலை மேல் விழுகிறது. இதன் காரணமாக, நீதாவால், அவலது காதலனான சனத்தை அடிக்கடி பார்த்துப் பேச முடிவதில்லை. ஒரு நாள், சனத் நீதாவின் தங்கையிடம் ஆற்றங்கரையில் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருப்பதை நீதா பார்த்து விட்டு, மனமுடைந்து போகிறாள். அவளது தாயாரோ, நீதா சனத்தை மணந்துகொண்டுவிட்டால், குடும்பத்துக்கு வரும் பணம் நின்றுவிடும் என்று யோசித்து, சனத்தை நீதாவின் தங்கைக்கே மணம் செய்துகொடுத்து விடுகிறாள்.

 

நீதாவின் தம்பியும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு வேலைக்குச் சேர்ந்துவிடுகிறான். நீதாவின் அண்ணனும், பாம்பேயில் ஒரு இசைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைப்பதால், அங்கு சென்று விடுகிறான். நீதாவையும் தன்னுடன் வந்துவிடும்படி இறைஞ்சுகிறான். ஆனால் தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு வரமுடியாது என்று நீதா மறுத்துவிடுகிறாள்.

 

காலம் செல்லச் செல்ல, எந்தத் துணையும் இல்லாததால், நீதா ஒரு இயந்திரமாக மாறிவிடுகிறாள். அவளது தங்கை கர்ப்பம் அடைந்து, வீட்டிற்கு வருகிறாள். தம்பியின் கை ஒரு விபத்தில் அரைபட்டு, அவனும் வீட்டிற்கு வந்துவிட, இப்பொழுது அனைவருக்காகவும் சம்பாதித்துப்போடும் ஒரு மெஷினாக மாறுகிறாள் நீதா.

 

சில நாட்களில், அவளது அண்ணன் ஊர் திரும்புகிறான். ஒரு பெரிய பாடகனாகிவிட்ட அவன், தனது தங்கையைப் பார்ப்பதற்கே அங்கு வருகிறான்.  வீட்டிற்கு வரும் அவன், தங்கையின் நிலையைப் பார்த்து திடுக்கிடுகிறான். நடைப்பிணமாகிவிட்ட நீதா, எவரையும் கவனிக்காமல், ஒரு அறையில் அடைந்து கிடக்கிறாள். அவளுக்கு முற்றிய காசநோய் வேறு. எவரும் அவளைக் கவனிப்பதில்லை.

 

அன்று இரவு நீதாவைத் தேடி வரும் அவளது தந்தை, நீதாவின் தங்கையின் குழந்தைக்கு அவளது அறையை ஒதுக்குவதாக அவளது தாயும் தங்கையும் முடிவெடுத்திருப்பதாகவும், அவளை வீட்டை விட்டுத் துரத்துவதற்குள், அவளாகவே எங்காவது ஓடிவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் கூறி, இயலாமையோடு அவளை வெளியே ஓடச் சொல்கிறார். இயந்திரம் போல் வெளியே வரும் நீதா, கால் போன போக்கில், கொட்டும் மழையில் ஓடத்துவங்குகிறாள். சத்தம் கேட்டு வெளியே வரும் அண்ணன், அவளை அரவணைத்து, உள்ளே அழைத்துச் செல்கிறான்.

 

meghe dhaka tara_3 மறுநாள், அவளை நைனிடாலில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சேர்க்கிறான். நீதா மெதுவே குணமடைந்து வருகிறாள்.  அப்பொழுது, பல வருடங்களுக்கு முன், தனது அண்ணனிடம், அவன் பெரிய பாடகனாகும்போது, தன்னை நைனிடாலுக்குக் கூட்டிச் செல்லும்படிக் கேட்டதை நினைவுகூரும் நீதா, அவனுக்கு நன்றி சொல்கிறாள். திடீரென்று நீதாவின் கதறல், மலையெங்கும் எதிரொலிக்கிறது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களையும் அந்த அலறல் வெளிக்கொணர்கிறது. தான் ஏன் இப்படி ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக அவள் கதறுகிறாள். விடை சொல்ல இயலாத அண்னனின் கண்ணிலிருந்து கண்ணீர்த்துளிகள்.

 

சில நாட்கள் கழித்து, அண்ணன் நடந்து சென்றுகொண்டிருக்கிறான். அப்போது, ஒரு பெண்ணின் செறுப்பு அறுந்துவிடுவதையும், அவள் ஒரு பின்னின் துணை கொண்டு அதனைச் சரி செய்துகொள்வதையும் காண்கிறான். அப்பெண், இவன் அதனைக் கண்டுவிட்டதால், ஒரு சங்கடமான சிரிப்பை உதிர்த்துவிட்டு, வேகமாகச் சென்றுவிடுகிறாள்.

 

தன் தங்கையின் நினைவு மனதில் பீறிக்கொண்டு எழுவதைத் தடுக்க முடியாத அண்ணன், முகத்தை மூடிக்கொண்டு, அழத்துவங்குகிறான். படம் முடிகிறது.

 

ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் வாழ்க்கையை நமது முகத்தில் அறைவதைப் போல் சொல்லும் இப்படம்,  ரித்விக் கட்டக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று. இப்படம் வெளிவந்த காலகட்டத்தை சற்று எண்ணிப்பாருங்கள். இந்தியாவில் இப்படி ஒரு படம், 1960ல் வெளிவந்திருப்பது, குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். அருமையான நடிப்பும், சிறந்த திரைக்கதையும் இப்படத்தின் விஷேஷங்கள். இப்படத்தில் ஒரு டூயட் கூட இல்லை.  இடம்பெறும் ஓரிரண்டு பாடல்களும் பின்னணியில் ஒலிப்பவையே.

 

நமது குடும்பத்திலேயே கூட இப்படி ஒரு பெண் இருந்திருக்கக்கூடும். நம்மைச் சுற்றிய சமுதாயத்தில், எத்தனையோ நீதாக்கள் வாழ்கின்றனர்.   இவர்களுக்கெல்லாம், எது தான் விடிவு? மனதைக் கிழிக்கும் துயர உண்மை இது

 

பி.கு – எவ்வளவு தேடியும் இதன் ட்ரைலர் கிடைக்கவில்லை. எனவே, படத்தை டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளவும்.

 

.

26 comments:

அடேங்கப்பா.. இருக்கற படம் பாக்க இந்த ஜென்மம் போதாது போல..: )

--

உடனே நம்ம பக்கம் வரணும்னு இல்ல பார்ட்டி, நீங்க வேலைய பாருங்க, படம் பத்தி எழுதுங்க அத படிக்கத்தான் நான் வர்றேன். நேரமிருக்கும்போது வந்தா போதும்..:)) இன்னும் ஹாலி, வினோத், பப்புவோடதே முழுசா படிக்கல..:))

அப்ப அவள் ஒரு தொடர்கதை இதோட உல்டா போல இருக்கே தல... சே யாரையுமே நம்ப முடில.. ஆனா கே.பா. இந்தப்படத்தை அப்படியே உருவாக திரைக்கதைல கொஞ்சம் மாற்றம் பண்ணிருக்காரு... ஜெய்கணேண் பாத்திரம் மட்டும மாறுபடுகிறது. தங்கை பாத்திரம் அப்படியே இருக்கிறது.

அந்த கட்டில் ஆடும் டயலாக் இருக்கான்னு தெரில...ஆனா நம்ம.கேபி. காப்பி அடிச்சிருந்தாலும்...ஒரு அருமையான படத்தை தந்திருப்பார்...

@ ஷங்கர் - படங்கள் ஒரு சமுத்திரம். . நாமெல்லாம் அதன் கரையில நின்னுகினு கிளிஞ்சல்கள மட்டுமே பொறுக்கிகினு இருக்கோம் . .இன்னும் தண்ணிலயே இறங்கல . .:-) (இது ஐன்ஸ்டைன் சொன்னது... சைன்ஸ் பத்தி. . கொஞ்சம் உல்டா பன்னிட்டேன் . . ஹீ ஹீ. . . கண்டிப்பா உங்க சைடு வருவேன் பாஸு .. . :-)

@ நாஞ்சில் - ஆமாங்க . .யாரையும் நம்ப முடில தான் . . நானும் ஃபர்ஸ்ட்டு அவள் ஒரு தொடர்கதை தான் பார்த்தேன் . . அப்பறமா இத பார்த்தா, அடிங் !! மண்ட காஞ்சி போனேன் . .என்ன கொடும இது !!

அட இது புதுசா இருக்கே?

நண்பரே,

உணர்சிகளை எழுத்தில் இழைந்து நீங்கள் தந்திருக்கும் இப்பதிவு அருமை. ஈயடிச்சான் விடயம் எனக்குப் புதிது, ஆனால் ஆச்சர்யப்படமாட்டேன்.

இந்த மாபெரும் காப்பி சரித்திரம் இங்க இருந்துதான் தொடருதா இல்ல இதுக்கு முன்னாடி யாராவது அகரம், ஆகரம்,இகரம், ககரம் இருக்காங்களான்னு பாக்கனும்.

தோழா கரையில இருக்கோம், இன்னும் சமுத்திரம் கண்டறியப்படல இப்படி சொன்னது ஐன்ஸ்டைன்னுக்கு தாத்தா நியூட்டன் தானே!?

இது ஆங்கிலமில்லாததால்.. நான் வெளிநடப்பு செய்கிறேன்.

நண்பா
மிக அருமையான விமர்சனம்
சுட்டி கிடைத்தால் தரவிறக்க வசதியாயிருக்கும்.
:)
ரியசில படங்கள் தான் பிடிக்கிறது கொஞ்ச நாளாக

பாலா ஃபாசிஸ்ட், ரேஸிஸ்ட்..

படம் செம ஃபீல். அந்த பொண்ணு கடைசில செத்து போயிருதா என்ன?

@ அண்ணாமலையான் - இது புதுசு தான். . ஏன்னா, இந்தப் படம் நிறைய பேருக்குத் தெரியாது. அதுனால, ‘சிகரம்’ இத ஈசியா சுட்டுருச்சு . . :-)

@ காதலரே - மிக்க நன்றி . . ஆம். இவர்கள் காப்பியடிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ? இதற்குப் பிறகும் ‘சிகரம்’ ‘சிகரமாகவே’ இருப்பது தான் ஆச்சரியம். .

@ தமிழினியன் - கரெக்டா சொன்னீங்க. . இது நியூட்டனே தான் . . நேத்து தூக்கக்கலக்கத்துல எழுதினப்போ மறந்துட்டேன் . . :-) ஹீ ஹீ . .

@ பாலா - எஸ்கேப் ஆயிட்டாருய்யா !! :-)

@ கார்த்திகேயன் - நண்பா . . சுட்டி கிடைக்கல . . தேடிப்பாக்குறேன் மறுபடி. . கிடைச்சா அனுப்பறேன் . . நானு டி வி டி ல பார்த்தேன் . . மிக்க நன்றி நண்பா . .

@ பப்பு - ஹா ஹா . . இதோ பாலா வராரு . . :-) அந்தப் பொண்ணு சாகுமா இல்லையாங்கறது நம்ம முடிவுக்கே உட்டுர்ராரு கட்டக். அது நாம அஸ்யூம் பண்ணிக்க வேண்டியது தான். . .

நாமெல்லாம் வங்காள மொழி படம் எங்க பாக்கப் போறோம்னு அவர் நினச்சிருப்பாரு, அதும் போக டப்பிங் பண்றதவிட ரீமேக் ரொம்ப ஈசியா இருந்துருக்கும் போல அந்த காலத்துல. இந்த படம் யூ டியூப்ல ஏற்க்கனவே பார்த்துட்டேன்

http://www.youtube.com/results?search_query=ritwik+ghatak

you can find most of his movies .

thx .

sid

அவரு அதே தான் நினைச்சிருப்பாரு :-) !! ஹாஹ்ஹா . . டப்பிங் பத்தி பயங்கர காமெடியா கருத்து சொல்லிட்டீங்க . . ஓ இது யூ ட்யூப்ல வேற இருக்கா? புது நியூசா இர்க்கே . .

@ sid - மிக்க நன்றி . . யூட்யூப் லின்க் குடுத்ததுக்கு . . அடிக்கடி வாங்க

ரொம்ப அற்புதமான சினிமா.மிகவும் அருமையானதொரு விமர்சனம். அவசியம் கவனிக்கப் படவேண்டிய சினிமா விமர்சகர்களுள் ஒருவர் கருந்தேள் ராஜேஷ் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.

அண்ணே காப்பி அப்பிடி இப்பிடின்னு ஏண்ணே பெரிய வார்த்தையெல்லாம். இப்ப நீங்க சொன்னதாலதான் என்னை மாதிரி கிராமத்தானுக்கெல்லாம் தெரியும் “சிகரம்” இப்படி பண்ணிருச்சேன்னு! ஒலகப் படத்த தழுவி எடுத்தாதான நல்ல படங்கள் தமிழ்ல வரும்(இது என்ற கருத்து!)....இல்லைனா பூராப் பேரும் அயல் சினிமாக்களை மட்டுமே பார்க்க வேண்டிதான்.தப்பிருந்தா திருத்திருங்கண்ணே..

அருமை..ஏற்கனவே விகடனில் படித்திருக்கிறேன்.
அதேப்போல் ’அவள் ஒரு தொடர்கதையின்’ நீட்சி தான் ’மனதில் உறுதி வேண்டும்’ இல்லையா..!!

@ மயில் - எனக்கு முன்னாடி எத்தனையோ அருமையான விமர்சகர்கள் உள்ளனர். . அவர்களின் காலடித்தடம் பின்பற்றிச் செல்லும் ஒரு வழிப்போக்கன் தான் நான். . உங்கள் பாராட்டை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் . .

நீங்க சொன்னது சரி தான் . . இவங்க உலகப்படங்கள இப்படி எடுக்குறது தான் நம்ம மாதிரி ரசிகர்களுக்கு நல்ல படங்களோட அறிமுகம் கிடைக்கும். . மிகச்சரி. . ஆனால், அப்படி எடுக்கும்போது, ஒரிஜினல் படத்துக்கு ஒரு நன்றி தெரிவித்து டைட்டில் கார்டில் போட்டால் ஒன்றும் குறைந்துபோய் விடாதில்லையா? அவள் ஒரு தொடர்கதைக்கு பாலசந்தர் பெற்ற பாராட்டுகளுக்கு முழுமுதல் சொந்தக்காரர் ரித்விக் கட்டக் அல்லவா? அதைத்தான் நான் சாடுகிறேன் . . மிக்க நன்றி . .

@ வினோத்கௌதம் - அப்படிச் சொல்லலாம். மனதில் உறுதி வேண்டும் - அவள் ஒரு தொடர்கதையின் நீட்சி தான். . நல்ல கருத்து.. நன்றி . .

உங்களுடைய இந்த‌ விமர்சனம்,படத்தை இன்றே பார்க்கனும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

http://mohanramanmuses.blogspot.com/2009/09/ritwik-ghatak-bengali-brecht.html

நண்பா உங்க ரித்விக் பத்தி படிக்க நேர்ந்தது,அப்புடியே பார்சல் போட்டுட்டேன்:)

அட. . இவரோட ப்ளாக்க இப்பொ தான் பார்க்குறேன் . . பரவாயில்லையே . . நல்லா எழுதிருக்காரு மனுஷன் . . :-)

இப்போதுதான் நேற்றைய சனிக்கிழமை இந்தியன் எச்ப்றேசில் இந்த படத்தை பற்றி எழுதுயிருன்தனர்..இந்த படத்தை பார்க்க வேண்டுமென டைரியில் பெயர் எழுதி வைத்து கொண்டேன்.(கஜினி போல் பெயர்களை அடிக்கடி மறந்து விடுவேன் என்பதால்)பல வேலைகள் இருந்ததால் தங்கள் வலைதளத்திற்கு வர இயலவில்லை.இங்கு வந்து பார்த்தல் அதே பெங்காலி படத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
.
.
அவர்கள் வாழ விரும்பிய உலகத்தை அவர்கள் அடைந்திருப்பார்களா என்ற கேள்வி, கேள்விக்குறியாகவே இருக்கிறது.///
.
அது முற்றிலும் உண்மை..படத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன்..நன்றி..

ட்ரைலர்
http://www.youtube.com/watch?v=7sfrI3UcPWY

கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .