Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !
ஏற்கெனவே இந்தத் தளத்தில், டூம்ப் ரெய்டர்: அண்டர்வேர்ல்ட் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அந்த வரிசையில், இதோ அடுத்த கம்ப்யூட்டர் கேம்.
சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், சரித்திரத்தில் எனக்கு சற்று ஆர்வம் உண்டு. அதனால், சரித்திர சம்பவங்கள் இடம்பெறும் கேம்களை அதிகமாக விளையாடுவேன். அண்டர்வேர்ல்ட் முடித்துவிட்டு ஆடத்துவங்கியது, ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா: த டூ த்ரோன்ஸ். சக்கையான கேம். முடித்துவிட்டு, ப்ரின்ஸின் மற்றைய கேம்களை எடுத்தால், அத்தனையும் ஒரே போல் இருந்ததால், அதனை டிலீட் செய்து விட்டு, இப்போது வாங்கியிருக்கும் கேம் தான் இந்த ‘அஸாஸின்’ஸ் க்ரீட்’.
புனிதப் போர்கள் நடந்த காலகட்டம். ஆண்டு 1191. இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள்.
புனிதப் போர் என்றால் என்ன? போரே அழிவுதான். இதில் புனிதப் போர் எங்கிருந்து வந்தது?
இக்கேள்விக்கு விடை கண்டால், அதுதான் இந்த கேம் நடக்கும் காலகட்டத்தின் முக்கியத்துவத்தையும், இன்னும் சில கேம்கள் (Age of Empires) மற்றும் சில படங்கள் (Kingdom of Heaven) ஆகியவற்றின் கதைக்களன்களையும் நமக்குத் தெளிவுபடுத்தும்.
பதினோராம் நூற்றாண்டு. மேலே சொல்லப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள், மொத்தமாக, அக்காலத்தில் புனித பூமி என்று அழைக்கப்பட்டு வந்தன. புனித பூமி என்பது ஏனெனில், அக்காலத்திய முக்கிய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம், ஜூதாயிஸம் மற்றும் பஹாய் மதம் ஆகிய அனைத்து மதங்களுக்கும் அந்த இடத்தில் பங்கிருந்ததேயாகும். இந்த ஒவ்வொரு மதத்துக்குமே அந்த இடம் சொந்தம் என்று சொல்லப்படும்படியான கதைகள் மற்றும் நிகழ்ச்சிகள், அந்த இடத்தில் நடந்திருந்தன. அந்த மதங்களின் புனித நூல்களுமே இந்த இடங்களைச் சொந்தம் கொண்டாடின.
கிறிஸ்துவர்கள் நிரம்பியிருந்த ஐரோப்பா, மற்ற மதங்கள் – குறிப்பாக இஸ்லாம் – நிரம்பியிருந்த இந்தப் புனித பூமியின் மேல் நடத்திய தாக்குதல்களே, புனிதப் போர்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிறிஸ்துவத்தை இந்த பூமியில் நிலைநாட்ட ஐரோப்பா செய்த முயற்சிகளின் பலனே இந்தப் போர்கள்.
கி.பி 1095ல் இருந்து, கி.பி 1291 வரை, மொத்தம் ஒன்பது போர்கள் நிகழ்த்தப்பட்டன. இந்தப் போர்களில் பெரும்பாலானவைகளுக்கு, போப்புகளின் பேராதரவும் ஆசிகளும் வேறு இருந்தது.
வரிசையாக நிகழ்ந்த இந்த யுத்தங்கள், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தின் இறுதியில் சொல்வது போல், அந்த பூமியில் அமைதி என்பதே இல்லாமல் செய்தன. மதங்களுக்கு இடையே நிகழ்ந்த அந்த யுத்தங்களில், மனிதர்கள் மாண்டனர்.
இப்படி இருக்க, அஸாஸின்’ஸ் க்ரீட் நடைபெறும் காலம்: மூன்றாவது புனிதப் போர். இப்போரைப் பற்றிப் பார்க்குமுன், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தைப் பார்த்துவிடுவது உத்தமம். ஸலாஹத்தின் (ஸலாதீன்) என்ற பேரரசன், முஸ்லிம்களின் தரப்பில் போரிட, முதலாம் ரிச்சர்ட் (Richard the Lionheart) என்னும் மற்றொரு மாவீரன், கிறிஸ்தவர்களின் தரப்பில் போரிட்டான்.
ஸலாதீன், ஜெரூஸலம் நகரைக் கைப்பற்றிய காலம். அவனது பிடியில் இருந்து ஜெரூஸலத்தை விடுவித்து, தங்களது பிடியில் சிக்க வைக்க நடந்த போரே மூன்றாம் புனித யுத்தத்தின் பெரும் பகுதி. இந்த ஸலாதீன் ஜெரூஸலத்தைக் கைப்பற்றிய நிகழ்வே, கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கிங்டம் ஆஃப் ஹெவன், இரண்டாம் புனிதப்போர் நடைபெறும் சூழலை நமக்குச் சொல்கிறது. அப்படத்தின் முடிவில், கதாநாயகன் பாலியன், தோல்வியுற்றுத் திரும்பும் வேளையில், அவனை வழியில் ஒரு பெரும் படை சந்திக்கும். அந்தப் படையின் தலைவன், தனது பெயர் ரிச்சர்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்வான். அவனே Richard the Lion Heart. அதுதான், மூன்றாம் புனிதப்போரின் துவக்கம்.
இந்த மூன்றாம் புனிதப் போர் உச்சத்தில் இருக்கும் காலம். அல்தாய்ர் என்பவன், ஒரு தேர்ந்த கொலைகாரன். புனித பூமியைச் சேர்ந்தவன். அவன், அல் முவாலிம் என்ற மனிதரின் கீழ் இருக்கிறான். கேம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களில், தங்களது கூட்டத்தின் மூன்று முக்கிய விதிமுறைகளை அவன் மீறிவிடுவதால் (1. அப்பாவி மக்களைக் கொல்லாதே 2. உனது அடையாளம் வெளிப்பட்டால், ஒளிந்துகொள் 3. உனது கூட்டத்தினரைக் காட்டிக்கொடுக்காதே), அவனை எச்சரித்து, தண்டிக்கும் அல் முவாலிம், அவனுக்கு ஒரு முக்கிய வேலையைக் கொடுக்கிறார். புனித பூமியில் இருக்கும் ஒன்பது துரோகிகளை இனம் கண்டு, அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அந்த வேலை. இவர்களைக் கொல்வது மூலம், ஐரோப்பியப் படைகளுக்கு உதவுவதே அல் முவாலிம்மின் நோக்கம்.
இந்த வேலைகளைச் செய்து முடிக்கும் அல்தாய்ர், ஒரு திடுக்கிடும் விஷயத்தைக் கண்டுபிடிக்கிறான். அவனது முன்னே, உலகையே கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. அதனைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அல்தாய்ர், அவற்றை அழித்தானா இல்லையா?
இந்தக் கதை முழுவதும், அல்தாய்ரின் வம்சாவழியைச் சேர்ந்த டெஸ்மாண்ட் மைல்ஸ் என்னும் மனிதனின் நினைவுகளில் நடக்கிறது. 2012ஐச் சேர்ந்த அவனைச் சிறைபிடிக்கும் ஒரு விஞ்ஞானி, அவனது நினைவுகளின் DNAக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பழைய காலத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துப் பார்க்கிறார்.
இதன் காரணம்: அந்த சக்தியை ஒளித்து வைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது. முடிவில் என்ன ஆனது? விஞ்ஞானி ஜெயித்தாரா? விடை, கேமை முழுவதும் விளையாடிப் பார்த்தால் தெரியும்.
கேமின் கண்ட்ரோல்கள் மிகச்சுலபம். அல்தாய்ரைக் கட்டுப்படுத்துவதே நமது வேலை. அவனிடம் மூன்று வகையான பிரதான ஆயுதங்கள் உள்ளன. குறுவாள், மெல்லிய - கையிலேயே ஒளித்து வைக்கக்கூடிய கத்தி மற்றும் போர்வாள். இவற்றை, சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.
நாம் கொலை செய்யப்போகும் நபரை, நகரத்தின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு, கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின், அவனை நிழலைப் போன்று பின்தொடர்ந்து, சரியான சந்தர்ப்பத்தில்….
சதக் !
அதேபோல், நகரத்தை எக்ஸ்ப்ளோர் செய்யும் விதம், அட்டகாசம் ! நகரத்தில், பல வகையான மாந்தர்கள். அதில் ஒற்றர்களும் உண்டு. அவர்கள், நமக்குப் பல வகைகளில் செய்திகள் சொல்வார்கள். அவர்களைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். போலவே, அப்பாவி மக்களை, கொடுங்கோல் காவலாளிகளிடமிருந்து அவ்வப்போது காக்கவும் வேண்டும்.
இன்னொரு படுசுவாரஸ்யமான விஷயம் – இதில் நகரங்களின் மிக உயரமான கட்டிடங்களின் மேல் ஏறி, கழுகின் பார்வையில் மொத்த நகரத்தையும் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போதே, நமது இலக்கு எங்கிருக்கிறது என்பதனையும் GPRS உதவியோடு கண்டுபிடிக்க முடியும். கட்டிடத்திலிருந்து இறங்கத் தேவையில்லை. பறவை போல் குதித்து, கட்டிடத்தின் முன் உள்ள வைக்கோல் போரினுள் விழலாம். இந்த கண்ட்ரோல், படு சூப்பர் !! மேலேஏஏஏஏ இருந்து விழுவது மிகவும் நன்றாக இருக்கிறது.
நல்ல இசை. டால்பி டிஜிட்டல். இடையிடையே ஸலாதீனைப் பற்றிய செய்திகள் வேறு நகர மாந்தர்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும். ஒரு நகரத்திலிருந்து மறு நகரத்துக்குப் போக, ஆங்காங்கே குதிரைகள் உண்டு. காவலாளிகள் பார்வையில் பட்டுவிடாமல், சாதாரண பாமரன் போல் நடந்து, உட்புக வேண்டும். அவர்கள் கண்களில் பட்டுவிட்டால், ஓட்டமாக ஓடி, ஒளிந்து கொள்ள வேண்டும் (Thief கேம் போல்).
மொத்தத்தில், படு அட்டகாசமான கேம் இது. ஆனால், நகரினுள் தொலைந்து போய்விட்டால், அம்பேல் ! சுற்றிச்சுற்றி வரவேண்டியது தான். இதைத் தவிர, கேம் சூப்பர் .
கேம் பிரியர்கள் ஆடிப்பாருங்கள். விலை ரூ. 299 /- மட்டுமே. டாரண்ட்டிலும் உள்ளது.
இதோ – Assasin’s Creed கேமின் ட்ரெய்லர் இங்கே பார்க்கலாம்
பி.கு – இந்த கேமில் ஹீரோவான அல்தாய்ரின் கெட்டப்பை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்துத்தான், விஜய் நடித்துவரும் படத்தின் போஸ்டர் உள்ளது (இயக்குநர், ராஜா !). (கருமம்டா சாமி ! இப்ப கேமையும் சுட ஆரம்பிச்சிட்டீங்களா !)

