Thursday, September 30, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 1:26 PM 26 comments

Hazaron khwahishen Aisi (2005) - English & Hindi

hazaaron_khwaishein_aisi_poster

 

இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்.

 

எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த 'Hazaron khwahishen Aisi' என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர் சுதீர் மிஷ்ராவினால் எடுக்கப்பட்ட இந்தப்படம், பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் (வழக்கம் போல) இந்தியாவில் படம் படு ஃப்ளாப். அவரது ஆகச்சிறந்த படம் என்று இன்றும் இப்படம் கருதப்படுகிறது.


நமது திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கே கே மேனன் மற்றும் ஷைனி அஹூஜா, சித்ராங்தா சிங் ஆகியவர்கள் நடித்து, 2005ல் வெளிவந்த இப்படத்தைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.


Hazaron khwahishen Aisi - இதன் பொருள், ஆயிரம் கனவுகள் இப்படியாக . . . உர்தூக் கவிஞர் மிர்ஸா காலிப்பின் ஒரு கவிதையில் வரும் வரி இது. சித்தார்த், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் கீதா ஆகிய மூவரும், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டு, எழுபதுகளின் முற்பகுதி. சித்தார்த் (கே கே மேனன்), புரட்சியில் மிகுந்த நம்பிக்கையுடையவன். தனது மாநிலமான பீஹாரில் புரட்சியின் மூலமாக சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஒரு சமத்துவ அரசை நிறுவ வேண்டும் என்றதீராத தாகமுடையவன். கீதா (சித்ராங்தா சிங்), லண்டனிலிருந்து வந்து, இங்கு படித்துக்கொண்டிருப்பவள். சித்தார்த்தைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். விக்ரம் (ஷைனி அஹூஜா), ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தப் புரட்சி, கிரட்சியிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன். வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதே அவனது லட்சியம். விக்ரம், கீதாவை விரும்புகிறான். அவளுக்கும் இது தெரிகிறது.


கல்லூரியிலேயே விக்ரம் கீதாவிடம் அவன் அவளை விரும்புவதாகச் சொல்ல, அவள் அதை இயல்பாக மறுத்து விடுகிறாள். ஆனால், அவள் காதலித்துக் கொண்டிருக்கும் சித்தார்த்திடம் பேசும்போதெல்லாம், காதலைவிடப் புரட்சியையே அவன் தேர்ந்தெடுக்க விரும்புவதாகச் சொல்வது, அவளை வருத்தமுற வைக்கிறது. கல்லூரி முடியும் காலத்தில், சித்தார்த்தும் கீதாவும் ஒரு பலவீனமான கணத்தில் உறவு கொள்வதை, விக்ரம் பார்த்து விடுகிறான். மனமுடைந்து போகிறான். அத்துடன் கல்லூரி வாழ்க்கை மூவருக்கும் முடிகிறது.


சில வருடங்கள் கழித்து, மூவரையும் நாம் பார்க்கிறோம். சித்தார்த், பீஹாரின் காடுகளில், புரட்சியாளனாக, ஒரு படையை வைத்திருக்கிறான். விக்ரம், டெல்லி அரசிடம் காரியம் சாதித்துக்கொடுக்கும் ஒரு தரகனாக இருக்கிறான். கீதா, ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீஸரை மணந்து கொண்டிருக்கிறாள். ஒரு விருந்தில் கீதாவும் விக்ரமும் சந்தித்துக்கொள்கிறார்கள். கீதா, இந்த ஆஃபீஸரை மணந்துகொண்டிருக்கும் காரணம், அவனிடத்தில் 'எல்லாமே' உள்ளது’ என்பதுதான் என்று விக்ரமுக்கு உணர்த்துகிறாள். ஆனால், சில நாட்களிலேயே, சித்தார்த்தை ரகசியமாக சந்திக்கிறாள். அவளுக்கு, ஆஃபீஸருடன் வாழ்வதில் விருப்பம் இல்லை. ஆனால், அவனிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால், வேறு வழியின்றி அவனோடு இருக்கிறாள்.


சித்தார்த் அவளை அவனுடனே வரச்சொல்கிறான். எனவே, கீதா, அவள் கணவனை விவாகரத்து செய்துவிடுகிறாள். அந்தச் சமயங்களில் அவளை விக்ரம் பார்த்துக்கொள்கிறான். என்னதான் அன்பாக அவள் பழகினாலும், அவளது மனம் சித்தார்த்தின் மேல் தான் இருக்கிறது என்று விக்ரம் புரிந்து கொள்கிறான். சித்தார்த்தை ரகசியமாக கீதா சென்று சந்தித்துக்கொண்டிருப்பதைப் புரிந்து கொள்கிறான்.  சித்தார்த்தையும் கீதாவையும் காட்டுக்குள் சென்று ஒரு நாள் சந்திக்கிறான்.


கீதா, சித்தார்த்துடனேயே சென்றுவிடுகிறாள். சித்தார்த் ஒளிந்துள்ள கிராமத்தில் , ஒரு ஆசிரியையாகச் சேர்கிறாள். சித்தார்த் ஒரு நக்ஸலைட் என்பதால், போலீஸ் அவனைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த நிலையில், கீதாவுக்குக் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதனை அவள் தனது பெற்றோர்கள் இருக்கும் லண்டனுக்கு, பாதுகாப்பு கருதி அனுப்பி விடுகிறாள்.


ஒருநாள், போலீஸ் சித்தார்த்தையும் கீதாவையும் அவனது சில ஆட்களையும் வளைத்துப்பிடித்து விடுகிறது. இருவரையும் ஜெயிலில் அடைத்து, கடுமையாக அடித்து விடுகிறது. சித்தார்த் தப்பி விடுகிறான். கீதாவை அவளது முன்னாள் கணவன் பெயிலில் எடுக்கிறான். தப்பிக்கும் சித்தார்த், குண்டடி வாங்கி, மருத்துவமனையில் சிறைவைக்கப்படுகிறான்.


இந்த நிலையில், நகரத்திற்கு வந்துவிடும் கீதா, சித்தார்த் இறந்துவிட்டதாக நினைத்து, வருத்தம் அடைகிறாள். அவளை விக்ரம் அடிக்கடி சென்று பார்க்கிறான். அப்போது, சித்தார்த் உயிரோடு இருப்பதை அவன் அறிந்து கொள்கிறான். அவனைச் சந்தித்து, போலீஸின் பிடியிலிருந்து, தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர்கள் மூலம் அவனை விடுவித்துவிடலாம் என்றுஎண்ணி, அவன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். செல்லும் வழியில், அவனது கார் விபத்துக்குள்ளாகி, சந்தர்ப்பவசமாக, சித்தார்த் உள்ள அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.


அங்கு வரும் சித்தார்த்தின் தோழர்கள் சித்தார்த்தை மட்டும் அங்கிருந்து கொண்டுசென்றுவிடுகின்றனர். மறுநாள் அங்கு வரும் போலீஸ், சித்தார்த்தைத் தப்புவிக்க விக்ரம் தான் சதி செய்தான் என்று எண்ணிக்கொண்டு, அவனைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இது தெரிந்த விக்ரம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிக்க முயல்கிறான். அப்போது அவனைப் பிடித்துவிடும் போலீஸ் கான்ஸ்டபிள் (ஷௌரப் ஷுக்லா - ஹே ராம் மற்றும் ஸ்லம்டாக் - ஸ்லம்டாகிலும் போலீஸ் கான்ஸ்டபிள் தான்), விக்ரமை அடி வெளுத்து விடுகிறார். அவனது தலையிலேயே மாறி மாறி அடிக்கிறார். 


சிறிது நேரத்திலேயே அங்கு வரும் விக்ரமின் நண்பரான ஒரு போலீஸ் அதிகாரி, கான்ஸ்டபிளிடமிருந்து விக்ரமை விடுவிக்கிறார். தலையில் கடுமையாக அடிபட்ட விக்ரம், மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறான்.


தப்பித்துச் சென்ற சித்தார்த், அவனது முயற்சிகளுக்கு மக்களது ஆதரவு இல்லாததைக் கண்டு, தடாலென்று மனம் மாறி, லண்டனுக்கு மருத்துவம் படிக்கச் செல்வதாக முடிவெடுக்கிறான். அவனது அப்பட்டமான இந்த பச்சோந்தித்தனமான முடிவு, கீதாவைப் பாதிப்பதில்லை. கீதாவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, சித்தார்த் லண்டன் சென்றுவிடுகிறான்.


Khwaishen aisi_end கீதா, மறுபடி அந்த கிராமத்தில் ஆசிரியை வேலையைத் தொடர்கிறாள். ஓர்நாள் அவள், யாரையோ தேடிக்கொண்டே, ஆற்றங்கரைக்கு வருகிறாள். அங்கு, விக்ரம், ஒரு பாறையில் சாய்ந்து கொண்டு, நிலைகுத்திய விழிகளோடு அமர்ந்துகொண்டிருக்கிறான். இவளைப் பார்த்தவுடன், புன்னகைக்கிறான். ஆனால்,அப்புன்னகையில் உயிரில்லை. அவனது அருகில் அமர்ந்துகொண்டு ஆதுரத்துடன் அவனைப் பார்க்கிறாள் கீதா. விக்ரம், மண்தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். தானும் அவ்விடத்தை நோக்கும் கீதாவுக்கு, மண்ணில் அவன் எழுதிய வரிகள் தென்படுகின்றன.


"நான் உன்னைக் காதலிக்கிறேன் கீதா . . . . "


இந்த வரிகளைப் பார்த்துக் கண்கலங்கும் கீதாவை நோக்கி விக்ரம் மெலிதாகப் புன்னகைக்க முயல்கிறான். அஸ்தமன சூரியனைக் காட்டும் ஒரு அற்புதமான காட்சியுடன், மிகவும் இனிமையான "பாவ்ரா மன் ( வசியப்படும் மனது)" என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, படம் முடிகிறது.


இந்த பாவ்ரா மன் பாடலை எழுதியவர் ஸ்வானந்த் கிர்கிரே. பா படத்தின் பாடல்கள் இவரது கைவண்ணம் தான். ஒரு நல்ல கவிஞர். மிகவும் அழகான இந்தப் பாடலை நீங்கள் மேலே கொடுத்துள்ள சுட்டியில் கேட்கலாம். படத்தைப் பார்க்கும் நண்பர்கள், கடைசியில் வரும் இப்பாடலை முடியும் வரைகேட்டுப்பாருங்கள்.


இப்படம் வெளிவந்த ஆண்டு 2005. பல திரைப்பட விழாக்களுக்கு (வெளிநாடுகளுக்கு) இப்படம் அனுப்பப்பட்டது. பல திரைப்பட விமரிசகர்களால் சிலாகிக்கப்பட்டது. இப்படம் எடுக்கப்பட்ட விதம் அப்படி.. நான் இப்படத்தின் கதையைத் தான் இங்கு சொல்லியிருக்கிறேனேயன்றி , இதில் வரும் ரத்தமும் சதையுமான உண்மைக் கதாபாத்திரங்கள் பற்றிச்சொல்லவில்லை. அவற்றை நீங்களே பார்த்தால் தான் நன்றாக இருக்கும். ஒரே ஒரு உதாரணத்துக்கு: சஞ்சய் காந்தி. எமர்ஜென்ஸியின் காலத்தில், அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட சஞ்சய் காந்தி செய்த அக்கிரமங்களைப் பற்றி இன்றைய மீடியா மூடி மறைத்துவிட்டது என்பதே உண்மை. ஆனால், அந்தக் காலகட்டத்தில், அவர் செய்த கொடுமைகள் எக்கச்சக்கம். குஷ்வந்த் சிங் எழுதிய சில கட்டுரைகளில் சஞ்சய் காந்தியைப் பற்றிய வெளிப்படையான கருத்துக்கள் உள்ளன. ஒரு முஸ்லிம் குடியிருப்பைய மொத்தமாகக் காலி செய்ய உத்தரவிட்டதில், பல பேர் இறந்த சமயத்தில் தான் இவரது நிஜ ரூபம் வெளிவந்தது.


இந்தப் படத்தின் பல கதாபாத்திரங்களின் வாயிலாக, எமர்ஜென்ஸியின் போது மக்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி, அக்காலத்தில் சகலருக்கும் குழந்தைக் கட்டுப்பாடு செய்ததையும் காட்டமாக விமரிசிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.


நமது உள்ளத்தைத் திருகும் விஷயம் இப்படத்தில் என்னவென்றால், சித்தார்த்தை மலை போல் நம்பும் கீதா, அவன் எப்படியும் தன்னுடைய வாழ்வை ஒளிமயமாக்குவான் என்று எண்ணி, அவன் போகுமிடத்துக்கெல்லாம் தானும் போவதே. அவளுடனேயே இருக்கும் விக்ரம், அவளை உருகி உருகிக் காதலித்தும், அக்காதலை உதாசீனம் செய்து சித்தார்த்தின் பின்னே ஓடுகிறாள் கீதா. ஆனால், சித்தார்த், அவளை விட்டுவிட்டு, தனது லட்சியங்களையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஏதும் அறியாதவன் போல மருத்துவம் படிக்கச் செல்கிறான். அப்பொழுதுதான் விக்ரமின் காதலைப் பற்றி கீதா நினைத்துப் பார்க்கிறாள்.


இப்படத்தில் பல வெளிநாட்டு டெக்னீஷியன்கள் பணியாற்றியுள்ளனர். மிக நேர்த்தியாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் தொய்வில்லாமல், நம்மை எமர்ஜென்ஸியின் காலகட்டத்துக்கே இட்டுச் செல்கிறது.


கொசுறு:- இப்படத்தை ஐ எம் டி பியில் நோண்டினீர்கள் என்றால், என்றோ ஒரு காலத்தில் (நான்கு வருடங்கள் முன்பு), இப்படம் பார்த்த புதிதில் நான் எனது இயற்பெயரில் எழுதிய விமரிசனத்தைக் காணலாம் :-) .

 

இப்படத்தில் பிஹாரைப் பற்றியும், அதன் காடுகளில் ஒளிந்து வாழும் நக்ஸலைட்டுகளைப் பற்றியும் தெளிவான பார்வை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், நமது ஊரிலும், படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கண்டபடி உளறி வைக்கும் சில ‘உலக’ இயக்குநர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் எழுதாமல் இருக்க இயலவில்லை.  இந்த அடிப்படை வசதி கூட இல்லாத மக்கள்,  இவர்களின் பார்வையில் ‘தீவிரவாதிகளாம்’. இதில், இவர்களின் ’புத்திசாலி’ மனைவிகள் வேறு , ஜால்ராவைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்.  அப்படிப்பட்ட மெத்தப் படித்த பெண்ணிய திரைமேதை ஒருவர், ஒரு சேனலில் வழங்கிவரும் திரை விமரிசன நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? கொடுமை என்பதன் மொத்த வடிவம் அது.  கடவுளே !


Hazaron khwahishen Aisi - படத்தின் டிரைலர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே, இப்படத்தின் ஒரு முக்கியக் காட்சியை இங்கே காணலாம்..

Wednesday, September 29, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 5:52 PM 16 comments

Batman: Arkham Asylum ( 2009) - The Game

Arkham-Asylum-Cover

 

கோதம் நகரின் இருண்ட தெருக்களினூடே, சரேலென்ற ஒளிவெள்ளம் பாய்ச்சியபடி, ஒரு பெரிய கருப்பு வண்டி பறந்துகொண்டிருந்தது.  அது – பேட்மொபைல். பேட்மேனின் வாகனம். பலவகையான எண்ணங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே, பேட்மேன் அந்த வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது பின்னிருக்கையில், நெளிந்தபடியே ஒரு உருவம். கட்டுண்டு கிடந்தாலும், உற்சாகத்தோடும் கிண்டலோடும் பேட்மேனிடம் பேசியபடியே இருந்த அந்த உருவம் – ஜோக்கர் !

 

தூரத்தில், அர்க்ஹாம் அஸைலத்தின் கறுத்த சுவர்கள், இருண்ட வானத்தின் பின்னணியில் பயமுறுத்த, அதன் பெரிய கேட்டுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது பேட்மொபைல். பேட்மேனின் மனமெங்கும் படர்ந்திருந்த ஒரே கேள்வி - ‘ஜோக்கர், இவ்வளவு சுலபத்தில் தன்னிடம் அகப்பட்ட காரணம் என்ன’? எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து தாக்கலாம் என்ற நிலையில், படு உஷாராக நாற்புறமும் பார்த்தபடியே பேட்மொபைலைச் செலுத்திக்கொண்டிருந்தார் பேட்மேன்.

 

அர்க்ஹாம் அஸைலம். கோதம் நகரின் அத்தனை குற்றவாளிகளும் அங்கே தான் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பல பேரை அங்கு அனுப்பி வைத்த பெருமை பேட்மேனுக்கு உண்டு. எனவே, அங்கிருக்கும் அத்தனை கைதிகளுமே பேட்மேனின் மீது கொலைவெறியில் இருந்தனர்.  மட்டுமல்லாமல், கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு தீவிபத்தின் காரணமாக, நகரின் சிறையிலிருந்தும் பல குற்றவாளிகள் அங்கே மாற்றப்பட்டிருந்தனர்.

 

ஜோக்கரை பேட்மொபைலிலிருந்து இறக்கிய பேட்மேன், அங்கிருந்த காவலாளிகளிடம் அவனை ஒப்படைத்துவிட்டு, அவர்களுடனேயே தானும் உள்ளே நடக்க ஆரம்பிக்கிறார். நுழைவாயிலிலிருந்து, ஜோக்கரின் செல் வரை, ஒரு நீண்ட பாதை. இருபுறமும் பல கைதிகள். பேட்மேனைப் பார்த்ததும், கண்டபடி கத்தியபடியே, கம்பிகளை இடிக்கின்றனர். இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத பேட்மேன், ஜோக்கரையே உற்றுப்பார்த்தபடி நடக்கிறார். ஜோக்கரின் நிலைகுத்திய விழிகள், பேட்மேனின் மீதே நிலைத்திருக்கின்றன. விகாரமான ஒரு இளிப்பு, அவனது வாயிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

 

wallpaper_batman_arkham_asylum_03_1680x1050

 

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், பேட்மேன் உள்ளே செல்ல இயலாது என்று சொல்லும் காவலாளிகள், ஜோக்கரை உள்ளே கொண்டு செல்கின்றனர். அந்த இடத்தின் கதவு மூடிக்கொள்கிறது. கண்ணாடிகளின் வழியே, பேட்மேனும், அங்கே வந்து சேர்ந்த கமிஷனர் கோர்டனும், ஜோக்கர் உள்ளே கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

அப்போது ….. திடீரென கட்டுகளை விடுவித்துக்கொண்டு, காவலாளிகளின் மீது பாயும் ஜோக்கர், அவர்களைக் கொன்று விடுகிறான். அதே நேரத்தில், அர்க்ஹாம் அஸைலத்தின் அலாரம் ஒலிக்கத் துவங்குகிறது. ஜோக்கரின் காதலி ஹார்லி க்வின், அந்த அஸைலத்தைக் கைப்பற்றி விடுகிறாள். கோர்டனும், பேட்மேனும், இன்னும் சில காவலாளிகளும், நூற்றுக்கணக்கான கொடூரமான குற்றவாளிகளுக்கு இடையே தனித்து விடப்படுகின்றனர். பெரிய டிவியில் ஜோக்கர் தோன்றுகிறான். தான் போட்ட திட்டத்தில் வலிய வந்து மாட்டிக்கொண்ட பேட்மேனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, கோதம் நகரை, இந்தக் குற்றவாளிகளின் துணையோடு கைப்பற்றப் போவதாகவும், முடிந்தால் தன்னைத் தடுக்குமாறும் பேட்மேனுக்குச்  சவால் விடுகிறான்.

 

அதே நேரத்தில், பேட்மேனைச் சுற்றிக் கதவுகள் மூடிக்கொள்ள, தனித்து விடப்படும் பேட்மேனை நோக்கி, பல கைதிகள் ஆங்காரமாகக் கத்தியபடியே ஓடிவருகின்றனர்…

 

இங்கேயிருந்து ஆரம்பிக்கிறது அதிரடி சரவெடி !

 

மேலே நான் கொடுத்துள்ளது, Batman :Arkham Asylum என்ற கேமின் இண்ட்ரோ.  நான் கேம் விளையாட ஆரம்பித்ததிலிருந்து, இவ்வளவு அட்டகாசமான கேமை ஆடியதேயில்லை. இதுவரை நூற்றுக்கணக்கான கேம்களை ஆடியிருக்கிறேன் (உடனே, நண்பர்கள், பின்னூட்டத்தில், இந்த கேம் ஆடியாயிற்றா? அந்த கேம் ஆடியாயிற்றா என்று கேம் லிஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்). ஆனால், இப்படிப்பட்ட ஒரு அதிரடியான கேம், இதுவரை பார்த்ததில்லை. ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எனது மிக மிக ஃபேவரைட்டான கேமாக மாறிவிட்டது இது.

 

arkham full தனித்து விடப்படும் பேட்மேன், அடுத்து என்ன செய்கிறார் என்பதே கேமின் முக்கியக் கேள்வி. படிப்படியாக பேட்மேனின் முன் விரியும் புதிர்கள் எப்படி அவரால் அவிழ்க்கப்படுகின்றன என்பதிலேயே, இந்தக் கேம் செயல்படுகிறது.

 

பேட்மேன் முதலில் எதிர்கொள்வது, ஸாஸ் என்ற ஸைக்கோ. அவனது பிடியில் ஒரு போலீஸ்காரர். இவனுக்கு எதிரில் பேட்மேன் தோன்றினால், போலீஸ்காரரை ஷாக் வைத்துக் கொல்லுவதாகக் கொக்கரிக்கிறான். இவனுக்குப் பின்புறம் போய், இவனை அடி பின்னியெடுத்து, மடக்க வேண்டும். இது, பேட்மேனின் முதல் சவால்.

 

அங்கிருந்து வெளியே செல்கையில், ஜோக்கர் பேட்மேனின் முன் மறுபடி தோன்றுகிறான். ஒரு விசையை அவன் இழுக்க, பிரம்மாண்டமான ஒரு ஜந்து, பேட்மேனின் மேல் பாய்கிறது. அதனை வீழ்த்த வேண்டும். இது இரண்டாவது சவால்.

 

அதன்பின், வரிசையாகப் பல சவால்கள். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு வெளியேற வேண்டும். இதன்பின், கமிஷனர் கோர்டன், ஜோக்கரால் கடத்தப்பட, அவரையும் மீட்க வேண்டும். மிகமிகப் பெரிய ஒரு கேம் இது.  படு ஜாலியாக விளையாடிக்கொண்டே இருக்கலாம். இடையிடையே ரிட்லரின் புதிர்கள் வேறு. 

 

இந்தக் கேமின் மிகப்பெரிய பலம், இதன் க்ராஃபிக்ஸ். துல்லியமான, படு சூப்பரான விஷுவல்கள். அருமையான கண்ட்ரோல்கள். இதில், பேட்மேனின் சிக்னேச்சர் மூவ்கள் பல உள்ளன. எதிராளிகளை அடி பின்னியெடுக்கும் கண்ட்ரோல்கள், மிகவும் அருமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒருவனை அடித்துவிட்டு, பின் அடுத்தவன் மேல் காற்றில் பாய்ந்து கொடுக்கும் உதைகள், டக்கரான ஸ்லோ மோஷனில் உள்ளதால், அப்படியே ஒரு காமிக்ஸ் படிக்கும் எஃபக்ட் கிடைக்கிறது. அதேபோல், உயரத்தில் இருந்து குதிக்கையில், நாம் காமிக்ஸ்களில் பார்ப்பது போலவே, தனது அங்கியை விரித்துக்கொண்டு பேட்மேன் பறந்து போய் எதிராளியை உதைப்பது அருமை.

 

Batman-Arkham-Asylum_02 இதில் வரும் வில்லன்கள் பல பேர். ஸ்கேர்க்ரோ வரும் எபிஸோட், உண்மையிலேயே சற்று பயத்தைக் கொடுக்கும். ஸ்கேர்க்ரோவின் விஷவாயுவைச் சுவாசிக்க நேரும் பேட்மேன், தனக்கு முன் இருக்கும் அத்தனையும் படு பயங்கரமான முறையில் ஹலூஸினேஷன்களாக மாற, அங்கே இருக்கும் ஸ்கேர்க்ரோவை எப்படி மடக்குகிறார் என்பதைக் கவனியுங்கள்.

 

அதே போல், பேன் என்ற மாமிசமலையை வீழ்த்துவது, மிகவும் கடினமான எபிஸோட். அவனைத் தாக்கிக்கொண்டு இருக்கையிலேயே, பல தடியர்கள் பேட்மேன் முன் குதிப்பார்கள். ஒரே சமயத்தில், அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டும். இதனிடையே, பேன் எறியும் பெரிய பெரிய கற்கள் பேட்மேனின் மீது பட்டால், பேட்மேன் காலி. அதையும் சமாளிக்க வேண்டும். இதற்கிடையில், ஜோக்கரின் காதலி ஹார்லி க்வின் வேறு !

 

சில இடங்களில், டிடக்டிவ் மோட் என்ற விஷயத்தை உபயோகித்து, சுற்றுப்புறங்களில் உள்ள தடயங்களையும், சுவர்களுக்கு அப்பால் நிற்கும் தடியர்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். துப்பாக்கி ஏந்தியவர்களைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம். அவர்களின் பின்னால் ரகசியமாகச் சென்று மடக்க வேண்டும். அல்லது, பறந்து போய் அவர்களை உதைத்தும் தள்ளலாம்.

 

இப்படிச் செல்லும் கேம், இறுதியில் எப்படி முடிகிறது என்பது சஸ்பென்ஸ். விளையாடிப் பாருங்கள்.  இந்தக் கேமை எழுதியவர், நமக்கெல்லாம் தெரிந்த பால் டினி (Paul Dini).

 

இந்த கேம், எனக்கு, பெங்களூரின் சப்னா புக் ஹௌஸில் (80 feet road, near Indira nagar) கிடைத்தது. விலை – ரூ. 700 /-. அங்கே நூற்றுக்கணக்கான கேம்கள் உள்ளன.

 

இதோ பேட்மேன்: அர்க்ஹாம் அஸைலம் டிரைலர்

 

பி.கு – இதன் இரண்டாம் பாகம், 2011ல் வெளிவருகிறது. அதன் டிரெய்லர் காண இங்கே க்ளிக்கவும்

 

batman-arkham-asylum-wallpaper-11

 

.

Saturday, September 25, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 10:28 AM 22 comments

A Perfect World (1993) – English

perfect_world


இந்தத் தளத்தைப் படித்து வரும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும் – எனக்கு மிகப்பிடித்தமான ஹாலிவுட் நடிகர், கெவின் காஸ்ட்னர் என்பது. படு கேஷுவலான நடிப்புக்குச் சொந்தக்காரர். அவரது படங்களைப் பற்றி இதுவரை மூன்று முறைகள் எழுதியாயிற்று. இன்னும் அவரைப் பற்றி எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. 

எனது பள்ளி நாட்களில், இவரது படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அன்டச்சபிள்ஸ், ஜேஎஃப்கே, பாடிகார்ட், மெஸேஜ் இன் எ பாட்டில், வாட்டர்வேர்ல்ட், டான்ஸஸ் வித் வுல்ஃப்ஸ், ரிவெஞ்ச், ராபின் ஹூட்: ப்ரின்ஸ் ஆஃப் தீவ்ஸ் போன்ற பல படங்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, படு ஃப்ளாப் ஆன ஒரு படம் – 3000 மைல்ஸ் டு க்ரேஸ்லாண்ட் – இப்படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகப்பிடித்திருந்தது. அனாயாசமான ஒரு கொடூர வில்லன் வேடம். பிய்த்து உதறியிருப்பார் காஸ்ட்னர்.  அவரது வெற்றிக்குக் காரணமே, அவரது இந்த அட்டகாசமான நடிப்புதான். சற்றும் போர் அடிக்காமல் கதையை நகர்த்துவார்.  Screen Presence என்ற வார்த்தைக்கு இவரை மிக எளிதில் உதாரணம் காட்ட முடியும். மிகத்திறமையான இயக்குநரும் கூட.

 

க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இவரைப்பற்றி என்ன சொல்வது? இவரைப்பற்றி, அத்தனை திரைப்படப் பதிவுகளிலும் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையாவது பார்க்க இயலும். இவரது டாலர் ட்ரையாலஜி படங்களை எண்ணற்ற முறைகள் பார்த்திருப்பேன். ஆனால், அவைகளை விட, டர்ட்டி ஹாரி ஸீரீஸ் தான் எனக்குப் பிடிக்கும். இவருமே, எத்தகைய வேடத்தையும் அடி தூள் பறத்துபவர்.  இவரது Bridges of Madison County’, இதுவரை நான் பார்த்த ரொமாண்டிக் திரைப்படங்களில் தலைசிறந்த ஒரு படம்.  இவரது டைரக்‌ஷன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

 

கெவின் காஸ்ட்னர் – க்ளிண்ட் ஈஸ்ட்வுட் - இந்த இரு அருமையான இயக்குநர்களும் ஒன்று சேர்ந்தால்? என்ன நடக்கும் என்பதற்குச் சிறந்த உதாரணமே A Perfect World.

 

குழந்தைகளின் உலகம் அலாதியானது. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து குழந்தைகள் எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்கின்றன. அவர்களையே தங்களது ஆதர்சமாகவும் கொண்டிருக்கின்றன. எந்த வித சந்தோஷமும் கிடைக்கப்பெறாத ஒரு குழந்தைச் சிறுவன், திடீரென எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் வாழ்வை வாழ நேர்ந்தால்?

 

அறுபதுகளின் முற்பகுதி. டெக்ஸாஸ். சிறை. புட்ச் என்ற ராபர்ட் ஹெய்ன்ஸ் (காஸ்ட்னர்), மற்றொரு கைதியுடன் சேர்ந்து, சிறையில் சுரங்கம் தோண்டித் தப்பிக்கிறான் (ஷஷான்க் ரிடெம்ப்ஷன் அல்லவே அல்ல .. ஹீ ஹீ). இந்த புட்ச், ஒரு மூளைக்காரன். டெக்ஸாஸின் ஒட்டுமொத்த ஜனங்களிலும், மிகமிகப் புத்திசாலிகளான இரண்டு பேரில், இவன் ஒருவன். இன்னொரு ஆள் யாரென்று பின்னால் பார்ப்போம்.  இவனுடன் தப்பிப்பது, டெரி என்ற முரடன். அவன் ஒரு ஸைக்கோவும் கூட. தப்பித்து வெளியேறும்போது, அங்குள்ள ஒரு போலீஸ்காரரை மடக்கி,  அவரது காரில் ஒளிந்துகொண்டு தப்பிக்கின்றனர் இருவரும். அதன்பின் அந்தப் போலீஸ்காரர், காரின் டிக்கியில் கட்டிவைக்கப்படுகிறார்.

 

சிறையிலிருந்து வெளிவரும் இருவரும்,  கார் ஒன்றைத் திருடும் நோக்கத்துடன், இரவில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நடமாடுகின்றனர்.  ஒரு குறிப்பிட்ட காரைத் திருடச் செல்லும் டெரி, பக்கத்தில் ஜன்னலில் விளக்கு எரிவதால், அங்கு செல்கிறான். அந்த வீட்டின் உரிமையாளரான பெண், சமையலறையில் போட்ட விளக்கே அது. ஸைக்கோவான டெரி, அந்தப் பெண்ணை மடக்குகிறான். அவளை வன்கலவி செய்ய முயற்சிக்கும் வேளையில், அங்கு வந்துவிடும் புட்ச்சினால் கடுமையாகத் தாக்கப்படுகிறான். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரத்தொடங்க, அங்கு மலங்க மலங்க விழித்துக்கொண்டே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிறுவனைத் தங்களுடன் பணயக்கைதியாக வைத்துக்கொள்ளலாம் என்று புட்ச் சொல்கிறான். இதனால், அந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு இருவரும் தப்பிவிடுகின்றனர்.

 

perfect world இருவரும் தப்பித்த செய்தி, போலீஸுக்கு எட்டுகிறது. டெக்ஸாஸில் ரேஞ்சராக இருக்கும் ரெட் (ஈஸ்ட்வுட்), தப்பித்த இரண்டு கைதிகளையும் பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கல்.  அன்றுதான் தனது அலுவலகத்துக்குப் புதிதாகப் பொறுப்பெடுத்துக்கொள்ள வந்திருக்கும் ஸாலி கெர்பர் (லாரா டெர்ன் – ஜுராஸிக் பார்க் கதாநாயகி) என்ற கிரிமினாலஜிஸ்ட்டின் வளவளா பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கும் கொடுமையே அது. ஏற்கெனவே கைதிகள் தப்பித்த கடுப்பில் இருக்கும் ரெட், இந்தப் பெண், தன்னைப் பேசியே கொல்லும் சித்ரவதையினால் கொலைவெறிக்கு ஆளாகும்போது, அந்த ஊரின் கவர்னருக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காரவேன் வண்டி, அவருக்குக் கிடைக்கிறது.

 

சட்டென்று அந்த வண்டியில் ஏறி, இந்த வளவளா ஸாலியோடும், இன்னும் சில போலீஸ் அதிகாரிகளோடும், தப்பித்த கைதிகளைப் பிடிக்கும் வேட்டையில் குதிக்கிறார் ரெட்.

 

அங்கே… புட்ச்சும் டெரியும், காரில் பறந்துகொண்டிருக்கின்றனர். ஒன்றுமே புரியாமல் திருதிருவென முழிக்கும் சிறுவன் பிலிப்பைன் மேல், டெரிக்கு ஒரு கண். அவன் ஒரு பீடஃபைலாக வேறு இருப்பதால், ஒரு கட்டத்தில், புட்ச் ஒரு கடைக்குச் சென்றிருக்கையில், பிலிப்பிடம் சில்மிஷம் செய்ய முற்படுகிறான். ஆனால், பிலிப் காரில் இருந்து குதித்து, பக்கத்தில் இருக்கும் ஒரு வயல்வெளியில் ஒளிய, அவனை வெறியுடன்  தேடும் டெரி, திடீரென தன்முன் யாரோ ஒளிந்து நிற்பதைக் காண்கிறான்.

 

 

டுமீல் !!!

 

 

டெரி இறந்து விழுகிறான். சுட்டது, புட்ச்.

 

சிறுவன் பிலிப்புடன், ஓட்டத்தைத் தொடர்கிறான் புட்ச். பிலிப்புக்குத் தேவையான உடைகளை வாங்கிக்கொடுக்கிறான். அவனுடன் மிக நட்பாகப் பேசுகிறான். ஒரு படு சீரியஸான, இதுவரை வாழ்க்கையில் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்கத் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பிலிப், தனது வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க நேர்கிறது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், வாழ்வை அனுபவித்துச் செல்லும் புட்ச், அவனுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கமாக இருக்கிறான். எனவே, மிக மெதுவாக, வாழ்வை ரசிக்கத் துவங்குகிறான் சிறுவன் பிலிப்.  படத்தின் இந்தக் கட்டத்தில், புட்ச், பிலிப்புடன் நிகழ்த்தும் உரையாடல்கள் மிக அருமையானவை. தனது வழிகாட்டியாக – நேவிகேட்டராக பிலிப்பை அமர்த்தும் புட்ச், ஒவ்வொரு விஷயத்தையும் அவனது கருத்தையும் கேட்டே முடிவு செய்கிறான்.  தானும் ஒரு முக்கியமான விஷயமாக இருப்பது, பிலிப்புக்குப் பிடித்திருக்கிறது.

 

வழியில் இருக்கும் ஒரு வீட்டில் உள்ள காரைத் திருடுகிறார்கள் இருவரும். அப்போது, தங்களிடம் எதுவுமே இல்லாத நிலையில், உயிர் வாழ்வதற்காக, திருடுவது தப்பில்லை என்று புட்ச் பிலிப்பிடம் சொல்கிறான். இது, பிலிப்பின் மனதில் பதிந்து விடுகிறது. பின்னால் ஒரு கடையில், தனக்குப் பிடித்த ஹாலோவீன் காஸ்ட்யூம் ஒன்றை – கேஸ்பர் என்ற அன்பான பேயின் உடையை (பை த வே – காஸ்பர் படம் பார்த்திருக்கிறீர்களா? கடைசியாக, அண்மையில் 2000ல் HBOவில் பார்த்தது. அதன் க்ளைமேக்ஸ், என் மனதை உருக்கியது) பிலிப் திருடுவதற்கு, இந்த வாக்கியம் தூண்டுகோலாக அமைகிறது.

 

perfect_world_a_1993_685x385 கேரவேனில், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் கூட்டணி, இவர்களின் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறது. வரும் வழியில், சிறுவயதில் குற்றங்கள் புரியும் குழந்தைகள் பற்றிப் பேச்சு வருகிறது. அப்போது, ரெட், தனது இளமைப்பருவத்தில் நடந்த ஒரு கதையை ஸாலிக்குச் சொல்கிறார். தண்டனை அனுபவிக்க இருந்த புட்ச் என்ற சிறுவனை, நீதிபதியிடம் சென்று பேசி, பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த உண்மை அவரது வாயிலிருந்து வெளிவருகிறது. அந்த புட்சைத்தான் இப்போது தாங்கள் துரத்திக்கொண்டிருக்கிறோம் என்பது ஸாலிக்குப் புரிகிறது.

 

ஊரெங்கும் போலீஸ் புட்சைத் தேடுவதால், சாதுர்யமாக இன்னொரு குடும்பத்தின் காரில் லிஃப்ட் கேட்டு வாங்கிக்கொண்டு தங்களது பயணத்தைத் தொடர்கிறது புட்ச் கூட்டணி.  அலாஸ்கா சென்று அடைய வேண்டும் என்பது புட்ச்சின் எண்ணம்.

 

வழியில், ஒரு இரவு விடுதியில், உணவு உண்ண நேர்கிறது. அங்கே இருக்கும் பெண், புட்ச்சுக்கு சிக்னல்கள் கொடுத்தபடி இருக்க, சிறுவன் பிலிப்பை வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பெண்ணும் புட்ச்சும் கில்மா செய்ய, அதனை ஜன்னலில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிறான் பிலிப். இதனைக் கண்டவுடன், அவளை விட்டுவிட்டு, பிலிப்புடன் கிளம்பிவிடுகிறான் புட்ச்.  பிலிப்பின் மீது எந்தக் கோபமும் இல்லை என்று சொல்கிறான்.

 

இரவைக் கழிக்க, ஒரு வயல்வெளியில் தூங்கும் புட்ச்சையும் பிலிப்பையும், அங்கு வரும் ஒரு டிராக்டர் எழுப்புகிறது. அந்த வயலை உழ வரும் ஆள், இவர்களைக் கண்டு, இவர்கள் களைப்புடன் இருப்பதைப் புரிந்துகொண்டு, தனது வீட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறான். அவனுக்கு ஒரு பேரன். சற்று மந்தமாக இருப்பவன். அந்தப் பேரனை, எப்பொழுது பார்த்தாலும் அடித்த வண்ணமே இருக்கிறான் அந்த ஆள். இது, புட்ச்சுக்குக் கோபத்தை வரவழைக்கிறது.  தனது துப்பாக்கியை மெதுவாக வெளியே எடுக்கிறான் புட்ச்.

 

இதன்பின் என்ன ஆனது? புட்ச் என்ன செய்தான்? அவர்களைத் துரத்தி வரும் ரெட் கும்பலால் புட்ச்சைப் பிடிக்க முடிந்ததா? படத்தைக் காணுங்கள்.

 

எனக்குத் தெரிந்து, நான் இதுவரை பார்த்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களிலேயே , எனக்கு மிகவும் பிடித்தவைகளில் இது தலையாய ஒன்று. மிக அருமையான படமாக்கம்.  காஸ்ட்னரும் சரி.. ஈஸ்ட்வுட்டும் சரி.. பின்னியெடுத்திருக்கிறார்கள். குறிப்பாக காஸ்ட்னர்.  சிறுவன் பிலிப்பின் கண்களில், ஒரு பிரம்மாண்ட இன்ஸ்பிரேஷனாக மெல்ல மெல்ல மாறும் அந்த நடிப்பு, அபாரம்.

 

அதே போல், ஈஸ்ட்வுட். வழக்கப்படி, தனது டர்ட்டி ஹாரி கதாபாத்திரத்தின் உணர்வுகளை இங்கே வழங்கியிருக்கிறார். அனாயாசமான கோபம்,  டக் டக்கென்று அவர் உதிர்க்கும் பன்ச்சுகள் ஆகியவை சூப்பர்.

 

இப்படம், ஒரு ஜாலியான ரோலர்கோஸ்டர் ரைட் என்று சொல்லலாம். அதே சமயம், மனதில் ஒரு கனத்தை உணர்வீர்கள்.

 

A Perfect World படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

.

 

Friday, September 17, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 5:12 PM 21 comments

A Tale of Two Sisters (2003) – South Korean

sisters01


நல்ல த்ரில்லர்கள் என்றால் எங்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில், ஷ்ரீயின் செலக்‌ஷன் இப்படம். பொதுவாகவே, பேய்ப்படங்களைப் பார்க்கையில் நான் எந்த நிலையில் இருப்பேன் என்பதை, எனது முதல் பதிவான ‘Drag me to hell’ விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன். கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில் தயாராக வைத்துக்கொண்டு (டக்கென்று கண்ணைப் பொத்திக்கொள்ள வசதியாக), எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு, ஒரு கெரில்லா ரேஞ்சுக்குப் பார்ப்பது என் வழக்கம். திடீரென்று பயமுறுத்தும் ஷாட்டுகளோ காட்சிகளோ வந்தால், அம்பேல் ! ஆனாலும், இத்தகைய ஒரு பய உணர்வைத் தூண்டிவிடும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வப்போது இது போன்ற படங்களை நாங்கள் பார்ப்போம்.

 

அப்படிப் பார்த்த இப்படம், சில காட்சிகளில் என்னை மிகவும் பயமுறுத்தி விட்டது. கடைசியாக இப்படி பயந்தது, க்ரட்ஜ் பார்க்கையில் (அதற்கு முந்தி பயந்தது, ஷைனிங்).

 

இன்னொரு விஷயம். இது போன்ற பேய்ப்படங்களில், கொரிய, ஜப்பானியப்படங்கள் தலைசிறந்தவை. எனது ஆடிஷன் விமர்சனம் படித்துப் பாருங்கள்.

 

மருத்துவமனை. ஒரு சிறுபெண், மௌனமாக அமர்ந்திருக்கிறாள். அவள் எதிரே மருத்துவர். அவளிடம், எதாவது பேசச்சொல்லிக் கேட்கிறார். மௌனமே பதிலாகக் கிடைக்கிறது. ஒரு புகைப்படத்தை அவளிடம் காட்டுகிறார். அவளது பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட படம். அவளது வீட்டில் நடந்தவைகளைப் பற்றி மறுபடியும் மருத்துவர் கேட்க, காட்சிகள் மெதுவே மாறுகின்றன.

 

pl35a2d7 ஒரு கார், அழகிய வயல்வெளிகளும், மரங்களும் நிரம்பிய சாலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு வீட்டின் முன் நிற்கிறது. இறங்கும் மனிதன், பின் சீட்டில் இருக்கும் எவரிடமோ, இறங்கச் சொல்கிறான். இரண்டு சிறு பெண்கள் இறங்குகின்றனர். ஒரு பெண், சூ-மி. இன்னொருவள், சூ-யோங்.  இருவரும் இறங்கி, பக்கத்தில் இருக்கும் குளத்தை நோக்கி ஓடிவிடுகின்றனர். அங்கே, இருவரும் , குளக்கரையில், அந்த அழகிய சூழலை ரசித்துக்கொண்டே வெகுநேரம் அமர்ந்திருக்கின்றனர்.

 

வீட்டினுள் இருவரும் நுழைய, அங்கு அவர்களின் எதிரே, அவர்களது சித்தி – மாற்றாந்தாய் யூன் – ஜூ. அவர்களைப் பார்த்து அவள் பேசப்பேச, இருவரும் அவளிடம் பேச இஷ்டமில்லாமல், மேலே தங்களது அறைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். அன்று இரவு, உணவு உண்ணுகையில், யூன் – ஜூவிடம் இருக்கும் வெறுப்பில், சூ-மி எழுந்து சென்றுவிடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து, சூ-யோங்கும் போகிறாள். தனியே அமர்ந்திருக்கும் யூன் – ஜூ, மெதுவே உண்ணத் தொடங்குகிறாள்.

 

அன்று இரவு. சூ- யோங்கின் அறை. மிக மெதுவாக எழும் காலடி ஒலிகள், அவளை எழுப்பிவிடுகின்றன. மிக மிக மெதுவாக, அவளது அறைக்கதவு திறக்கப்படுகிறது.

 

க்றீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்……..

 

அங்கே .. !!

 

ஓடிவரும் சூ-யோங்கை, அரவணைத்துக்கொள்கிறாள் அவளது அக்கா சூ-மி. தான் இருக்கையில், அவள் எப்போதும் கவலைப்படக்கூடாதென்றும், அவளுடனேயே எப்பொழுதும் இருப்பதாகவும் சொல்லி, சூ-யோங்கைத் தூங்க வைக்கிறாள்.

 

மறுநாள் காலை. விழித்துக்கொள்ளும் சூ-மி, தனது கால்மாட்டில், கட்டிலருகே எதுவோ நகர்வதைக் காண்கிறாள். மிக மெதுவாக நகரும் அந்த உருவம், மெல்ல இவளை நோக்கித் திரும்புகிறது. அப்போது…

 

!!

 

அன்று காலையில், தனது தங்கை சூ-யோங், அவளது periods தொடங்க, அதே நேரத்தில் அவர்களது மாற்றாந்தாய் யூன் – ஜூவுக்கும் periods தொடங்குவது சூ-மிக்குத் தெரிகிறது. இவர்கள் வந்த ஒரே நாளில் இப்படிப்பட்ட அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பது, சகோதரிகள் இருவருக்கும் பயத்தை உண்டுபண்ணுகிறது.

 

a-tale-of-two-sisters-geongyoung-moon1 அன்று, தோட்டத்தில் இருக்கும் ஒரு பழைய அறையில், இவர்களது தாயின் புகைப்படங்கள் சூ-மிக்குக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாப் புகைப்படங்களிலும், தங்களது பெற்றொர்களுடன், மாற்றாந்தாய் யூன்- ஜூவும் நிறபது புரிகிறது. தங்களது தந்தை ஒரு மருத்துவர் என்றும், யூன் – ஜூவும் தங்களது தந்தையுடன் பணிபுரிந்த ஒரு மருத்துவர் என்றும் சகோதரிகளுக்குத் தெரியவருகிறது. அப்போது, தனது தங்கை சூ- யோங்கின் கைகளில், அடிவாங்கிய தழும்புகள் காண்கிறாள் சூ – மி. அடித்தது யூன் – ஜூ என்பது அவளுக்குப் புரிகிறது. இதனால், மாற்றாந்தாயின் மேல் அவளது கோபம் அதிகரிக்கிறது.

 

இரவு, யூன் – ஜூவின் தம்பியும் அவனது மனைவியும் இவர்களது வீட்டில் உணவு உண்ண வருகின்றனர். உண்கையில், அனைவரும் மயான அமைதியோடு இருக்கவே, யூன் – ஜூ, தனக்கும் தனது தம்பிக்கும் இடையே சிறுவயதில் நடந்த சம்பவங்களை உரத்த குரலில் சொல்லிக்கொண்டே, சிரிக்கிறாள். ஆனால், கனத்த மௌனத்தில் இருக்கும் மற்றவர்கள், எந்த விதமான பதிலும் கொடுப்பதில்லை. அந்நிகழ்ச்சிகள் எதுவுமே தனக்கு நினைவில்லையென்று தம்பி சொல்கிறான்.

 

ataleoftwosisterspicjr4 அப்போது, திடீரென, தம்பியின் மனைவிக்கு மூச்சு அடைக்கிறது. பலத்த அலறலோடு தரையில் விழும் அவள், பயங்கரமாகத் துடிக்க ஆரம்பிக்கிறாள். வெகு நேரம் நீடிக்கும் இந்தத் துடிப்பு, சில மாத்திரைகள் உண்டதும் சரியாகி விடுகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில், தம்பியின் மனைவி, தான் தரையில் விழுந்து துடிக்கையில், என்ன நடந்தது என்று சில்லிடும் உண்மைகளை வெளியிடுகிறாள்.

 

அந்த வீட்டில், இந்த இரு சகோதரிகளும் வந்ததில் இருந்து, அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அதிகமாக நடப்பதாக, யூன் – ஜூ தனது கணவனிடம் முறையிடுகிறாள். ஆனால், சூ-மியோ, மாற்றாந்தாய் யூன் – ஜூ தான் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரணம் என்று தந்தையிடம் சொல்கிறாள். மேலும், தந்தையின் மேலும் அவளுக்குக் கோபம் இருக்கிறது. இனி இந்த வீட்டில் நிகழும் சம்பவங்களுக்கெல்லாம் பொறுப்பு, தங்களது தந்தைக்கே என்று கோபத்துடன் சொல்லிவிட்டு, அகன்றுவிடுகிறாள்.

 

அன்று, இவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சூ-யோங்கின் அறைக்கு வரும் யூன் – ஜூ, அவளது படுக்கையில், தனது செல்லக் குயில் இறந்து கிடப்பதைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறாள். சூ – யோங்கை இழுத்துக்கொண்டு போய், அந்த அறையில் இருக்கும் பெரிய அலமாரியில் அடைத்துவிடுகிறாள்.

 

சத்தம் கேட்டு அங்கு வரும் சூ- மி, தனது தங்கையை அலமாரியிலிருந்து விடுவிக்கிறாள். அங்கிருந்து நேரே தனது தந்தையிடம் சென்று, மாற்றாந்தாய் யூன் – ஜூவின் கொடுமைகளைப் பற்றிக் கோபத்துடன் முறையிடுகிறாள். அப்போது அவளது தந்தை அவளிடம் பேசும் காட்சி, படத்தின் மிக முக்கியமான காட்சி. இதனைத் தவறவிட்டால், படமே புரியாது.

 

A-Tale-Of-Two-Sisters அதன்பின் தூங்கி எழும் சூ- மி, தனது தங்கையை, யூன் – ஜூ , ஒரு சாக்குப்பையில் போட்டு, அடிப்பதைக் காண்கிறாள். பதறியெழும் யூன் – ஜூ, அந்த இடத்துக்கு ஓடுகிறாள்….

 

இதன் பின் என ஆயிற்று? சாக்குப்பையில் இருக்கும் சூ- யோன், என்ன ஆனாள்? யூன் – ஜூவால் தனது தங்கையைக் காப்பாற்ற முடிந்ததா? அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தி, எது?

 

இந்தக் கேள்விகளுக்கு விடையாக, படத்தைப் பாருங்கள்.

 

சமீப காலங்களில்,ஷட்டர் ஐலாண்டுக்கு அடுத்தபடி, என்னை சஸ்பென்ஸின் உச்சிக்கே கொண்டுசென்ற படம் இது என்று தயங்காமல் கூறுவேன். அவ்வளவு அட்டகாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

 

படம் முழுதும், ஒருவித பயம் நம்மைச் சூழ்கிறது. எந்நேரமும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒரு எண்ணம் நமக்கு வந்துவிடுவதால், ஒருவித ‘பக் பக்’ உள்ளத்துடனேயே இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.  ஏனெனில், படத்தில், கோர்வையான காட்சிகள் மிகக் குறைவு. எந்தக் காட்சியுடன் எதனைச் சேர்த்துப் பார்க்கவேண்டும் என்பதே தெரியாமல், எதுவோ ஒரு கனவு உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வினை, இப்படம் முழுவதும் இதன் இயக்குநர் கிம் – ஜி – வூன் கொடுத்திருக்கிறார்.

 

பேய்ப்படங்கள் ஒரு வகை. சஸ்பென்ஸ் படங்கள் ஒரு வகை. இரண்டும் சேர்ந்தது இப்படம். அது ஒரு புது வகை.

 

A Tale of Two Sisters படத்தின் டிரய்லர் இங்கே காணலாம்.

 

பி.கு 1 – இப்படம், ஆங்கிலத்தில், The Uninvited என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

 

பி.கு 2 – படம் பார்த்து, பயத்துக்குப் பதில் கோபம் (என்மேல்) வந்தால், அதற்கு இப்பதிவு பொறுப்பாக மாட்டாது ;-)

.

 

Wednesday, September 15, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 10:23 PM 28 comments

Breath (2007) – South Korean

2007_breath_soom


கடைசியாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதியது, போன மாதம் என்று நினைக்கிறேன். மங்கோல். அதன்பின்பு, அடுத்த திரைப்படம் இது.  இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாஸன், கொடைக்கானல் என்று பிஸியாக இருந்துவிட்டேன்.

 

சரி. இந்த ‘ப்ரெத்’ என்பது, கிம் கி டுக் இயக்கிய ஒரு திரைப்படம். நாம் பார்க்கும் ஐந்தாவது கிம் கி டுக் திரைப்படம் இது. இன்னும் மிகச்சில கிம் கி டுக் படங்களே இருக்கின்றன. அவற்றையும் மெதுவாகப் பார்த்து விடுவோம். அவ்வப்போது எழுதுகிறேன்.

 

ஏற்கெனவே நாம் பார்த்தபடி, கிம் கி டுக் படங்கள் என்பது ஒரு தனி அனுபவம். அவற்றில் இருந்து நாம் பெறும் செய்திகள் ஏராளம். நிகழ்கால உலகில், நம்மைச் சுற்றி நடமாடும் மாந்தர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், அவர்களின் குணங்கள் என்னென்ன, சமுதாயத்துடன் அவர்கள் ஒத்திசைந்து வாழ்கிறார்களா அல்லது அவர்களுக்குள் இருக்கும் ஒரு தனி உலகில் வாழ்கிறார்களா, தனிமை, சோகம், வெறுப்பு, பொறாமை, காமம், ஆகிய குணங்களின் வெளிப்பாடு போன்ற பல விதமான கலவைகளை இவரது படங்களில் பார்க்க்கிறோம். அவரது பாணி என்னவெனில் - ‘என்னால் முடிந்த படத்தைக் கொடுத்தாயிற்று.. அதில் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீயே கண்டுபிடித்துக்கொள். நான் அடுத்த படம் இயக்கச் செல்கிறேன்’ என்பதே. பார்வையாளன், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை, பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே வந்து பார்த்துவிட்டுச் சென்றுவிடுவதில்லை. அவனும் படத்தின் கதைமாந்தர்களுடன் வாழ்கிறான். இறுதியில் என்ன நடக்கிறது என்பதில், அவனுக்கும் ஏராளமான ஊகங்கள் இருக்கின்றன. எப்படி நடந்தாலும், அவனால், தனது மனதில் எழும் முடிவுகளைக் கோர்த்துப் பார்க்க முடிகிறது.

 

எனவே, கிம் கி டுக்கின் படங்கள், பார்வையாளனைச் சிந்திக்க வைக்கின்றன. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நமது மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளில் பலவற்றுக்குப் பதிலே இருக்காது. நமது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களிலிருந்தே இக்கேள்விகளுக்குப் பதில் கிடைக்கப்பெறும். அந்த நேரத்தில், சடாரென்று நமது வாழ்வுக்கும் கிம் கி டுக் எடுக்கும் படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியும். இருண்ட சாலையில் நடக்கையில், பளாரென்று இருட்டில் நமக்கு ஒரு அடி விழுந்தால் எப்படி இருக்கும்?

 

சிறை.. அதன் எண்ணற்ற அறைகளில் ஒன்று. டூத் ப்ரஷ்ஷின் மறுமுனையைச் சுவற்றில் தேய்த்துத் தேய்த்துக் கூராக்கி, அதன்மூலம் சுவற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறான் ஒரு கைதி. அவனருகே, அவன் வரையும் படத்தையே உற்று நோக்கிக்கொண்டு மற்றொரு கைதி நின்றுகொண்டிருக்கிறான். திடீரென்று, பிரஷ்ஷைப் பிடுங்கி, தனது கழுத்தில் குத்திக் கொள்கிறான் அவன். கூட இருக்கும் கைதியின் முகத்தில் ரத்தம் தெறிக்கிறது. அவனது அலறல், சிறையெங்கும் எதிரொலிக்கிறது.

 

யோன் என்பவள், தனது குழந்தை மற்றும் கணவனுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண். அற்புதமான களிமண் சிலைகளைச் செய்பவள். தனது கணவனின் மேல் அவளுக்கு ஆறாத கோபம் ஒன்று இருக்கிறது. கணவன், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றி வருவதே அது. எப்பொழுதும் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறாள். தனது ரணத்தை, சிலைகள் செய்வது மூலம் போக்கிக்கொள்ள முயல்கிறாள்.

 

ஒரு நாள், தொலைக்காட்சியில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று, அந்தப் பிணங்களிடையே படுத்துக்கொண்டிருந்த ஜாங் ஜின் என்ற மரண தண்டனைக் கைதி, தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டு, அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி ஓடுகிறது. அவனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையின் மேல் இருந்த பயத்தின் காரணமாகவே அவன் இவ்வாறு செய்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

 

அந்தச் செய்தியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறாள் யோன். அவளது கணவனுக்கு இது பிடிப்பதில்லை.

 

மறுநாள், கணவனின் காரில் ஒரு ஹேர் க்ளிப் இருப்பதைப் பார்க்கும் யோன், அந்தக் க்ளிப்பை எடுத்து வைத்துக் கொள்கிறாள். அதனை, தான் செய்துகொண்டிருக்கும் பெண் சிலையின் தலையில் சொருகிப் பார்க்கிறாள். கணவன் வருகையில், அவனது கண்ணில் படுமாறு அந்தக் க்ளிப்பைத் தனது தலையில் அணிந்து கொள்கிறாள். அங்கு வரும் கணவன், அதனைப் பிடுங்க முயல, கோபத்தின் எல்லையில், யோன் அவளது வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

 

வெளியே வந்து, டாக்ஸியைப் பிடிக்கும் யோன், எங்கு செல்வதென்றே தெரியாமல், எங்காவது போகச் சொல்கிறாள். உடனே மனம் மாறி, சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறாள்.

 

இரவு முழுதும் சிறையின் முன்னே கழிக்கும் யோன், மறுநாள் காலையில், அவள்  ஜாங் ஜின்னின் முன்னாள் காதலி என்றும், அவனைப் பார்க்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. மனமுடைந்து, செய்வதறியாது நின்றுகொண்டிருக்கும் யோனை, காமெரா மூலம் சிறையதிகாரி பார்க்கிறார். அவளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 

soom தன்னைப் பார்க்க ஒரு விஸிட்டர் வந்திருப்பதை அறியும் ஜாங் ஜின், அவளைப் பார்க்க வருகிறான். எந்த அறிமுகமும் இன்றி, யோன், அவனிடம் பேசத் துவங்குகிறாள். தனது சிறிய வயதில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிவிட்டு, அங்கிருந்து செல்கிறாள். ஜாங் ஜின்னுக்கோ, இத்தனை காலம் தனிமையில் அடைபட்டுக் கிடந்த துயரம், ஒரே நொடியில் மறைந்தது போல் ஒரு மகிழ்ச்சி. அவளது ஒரே ஒரு முடியை மட்டும் பிய்த்து எடுத்துக்கொள்ளும் ஜாங் ஜின், அதனை, சிறையினுள் சென்றதும் விழுங்கி விடுகிறான்.

 

மறுநாள், சந்தோஷமாகக் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கும் யோன், நல்ல வெயில் காலத்தில் அணியும் உடைகளை அணிந்துகொண்டு (அந்தக் கொட்டும் பனியில்), சிறைக்குச் செல்கிறாள். ஜாங் ஜின்னுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அவள் வாங்கிய பூச்செண்டுகளை வெளியே எடுக்கிறாள். அவளுடன் இருக்கும் காவலாளி அதனைத் தடுக்க முயல, காமெராவில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் உயரதிகாரியிடம் இருந்து ஃபோன் வருகிறது, அவளை விட்டுவிடச் சொல்லி (இந்த அதிகாரியின் முகத்தை நாம் பார்ப்பதே இல்லை. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பத்தையே பார்க்கிறோம். அது, கிம் கி டுக்கே தான்)..

 

ஜாங் ஜின், இம்முறை வெகு சந்தோஷத்துடன் வருகிறான். விஸிட்டர் அறையினுள் நுழையும் அவன், ஒரு கணம் திகைத்துப் போகிறான். அவனைச் சுற்றிலும், எல்லாச் சுவர்களிலும், குளுமையான கடலின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. குழந்தையைப் போல் ஒரு சிறு உடையை அணிந்திருக்கும் யோன், அவனுக்காக ஒரு பாடலைப் பாடத் துவங்குகிறாள். வெயில்காலத்தில் காதலிக்கும் இருவரைப் பற்றிய பாடல் அது. குதூகலமாக அப்பாடலைப் பாடியவாறே, ஆடவும் தொடங்குகிறாள் யோன். ஜாங் ஜின்னுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.

 

பாடலைப் பாடி முடித்தவுடன், தனது புகைப்படம் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, அவனை முத்தமிட யோன் நெருங்குகையில், மணி ஒலிக்கிறது. காமெராவில் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரி மூலமாக. ஜாங் ஜின் மறுபடி சிறையில் அடைக்கப்படுகிறான்.

 

யோன், இப்படி ஒரு உடையைக் குளிர்காலத்தில் அணிந்திருப்பதைப் பார்க்கும் அவளது கணவன், அவளை விசாரிக்கிறான். ஆனால், பதிலேதும் சொல்லாத யோன், தூங்கிவிடுகிறாள்.

 

0211_breath மறுநாள். இலையுதிர் காலத்தில் அணியும் உடைகளை எடுத்துக்கொண்டு, இலையுதிர் காலத்தின் போஸ்டர்களை விஸிட்டர் அறையெங்கும் ஒட்டுகிறாள் யோன். இம்முறையும் ஜாங் ஜின்னுக்காக ஒரு பாடல். இலையுதிர்காலத்துக் காதலைப் பற்றி. முடிந்தவுடன், ஒரு புகைப்படம்.

 

இம்முறை வீட்டுக்குச் செல்லும் யோனை, அவளது கணவன் சந்தேகிக்கிறான். அதனாலேயே, குற்றவுணர்வில், தனது ரகசியக் காதலியை மறுதளித்து விடுகிறான். மறுநாள், இளவேனில் கால உடைகள். போஸ்டர்கள். இம்முறை, தனது நிர்வாணப் புகைப்படம் ஒன்றை ஜாங் ஜின்னுக்கு அளிக்கிறாள் யோன்.

 

ஒவ்வொரு நாள் இரவிலும், ஜாங் ஜின் தூங்குகையில், அவனுடனேயே இருக்கும் கைதி ஒருவன், இந்தப் புகைப்படங்களையெல்லாம் கிழித்துத் தின்று விடுகிறான். அவனுக்கு ஜாங் ஜின் மேல் உள்ள ஈர்ப்பே காரணம். எப்போதும் ஜாங் ஜின்னுடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தக் கைதியால், யோன், ஜாங் ஜின்னுக்கு அளிக்கும் மகிழ்ச்சியைத் தாங்க முடிவதில்லை.

 

ஜாங் ஜின்னின் மரண தண்டனை நெருங்குகிறது. மறுநாள் அவனுக்குத் தண்டனை. இப்படி இருக்கையில், அவனைத் தேடி ஒரு விஸிட்டர் வந்திருப்பதாகக் காவலாளி சொல்ல, ஆவலோடு வரும் ஜாங் ஜின்னுக்கு அதிர்ச்சி. அங்கு அமர்ந்திருப்பது, யோனின் கணவன்.

 

இதன் பின் என்ன நடந்தது? ஜாங் ஜின்னுக்கு மரண தண்டனை கிடைத்ததா? யோன் என்னவானாள்? அவளது கணவனுடன் அவளால் வாழ முடிந்ததா? ஜாங் ஜின்னுக்கும் யோனுக்கும் அவர்களது காதல் திரும்பக் கிடைத்ததா?

 

படத்தைப் பாருங்கள்.

 

கிம் கி டுக் படம் என்றாலே, காமெரா மாயாஜாலம் செய்யும். ஆனால், அந்தக் காமெரா அற்புதங்கள், கதையின் போக்கைத் தடுக்காது. கதையின் ஒரு பங்காகவே கேமரா செயல்படும். இப்படத்திலும் அப்படித்தான். படத்தின் ஆரம்பத்தில், யோன் வாழும் வீட்டைக் காண்பிக்கும் ஒரே ஷாட்டில், அவளது சோகத்தைக் காண்பித்து விடுகிறார் கிம் கி டுக்.

 

அதே போல், இப்படத்திலும், வழக்கப்படி வசனங்கள் கம்மி. ஆனால், கிம் கி டுக்கின் மற்ற படங்களை ஒப்பிடும்போது, வசன மழை பொழிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வழக்கப்படி இல்லாமல், இதில் கதாநாயகி, பாடல்களே பாடிவிடுகிறாள். ஆனால், ஹீரோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. படம் நெடுகிலும்.

 

இப்படமும், மனித உணர்ச்சிகளில் ஒளிந்துள்ள புதிர்களை அவிழ்க்கும் கிம் கி டுக்கின் மற்றொரு நல்ல முயற்சியாக விளங்குகிறது. ஆனால், கிம்மின் மற்ற படங்களை ஒப்பிட்டால், இதில் காரம் கம்மி என்றுதான் சொல்லவேண்டும். பின்னே? தவளையை உயிரோடு பிய்ப்பதில்லை. கழுத்தைக் கிழித்துக்கொள்வதில்லை. மொத்தத்தில், எந்த விதமான வன்முறையும் இல்லையே.. Too bad.

 

இப்படம், வழக்கப்படியே, பல உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தேர்வு செய்யப்பட்டது.

 

Breath படத்தின் டிரெய்லர் இங்கே க்ளிக்கவும்.

 

பி.கு – ஈரோட்டிலும் மதுரையிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளைப் பற்றிச் சில ரசமான தகவல்கள், நமது நண்பர் திரு. ஹாலிவுட் பாஸ்கரன் உபயத்தில் வந்துள்ளன. அவைகளைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும். எழுதிவிடுகிறேன்

.

Sunday, September 12, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:37 AM 162 comments

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் பலரும் ஒவ்வொரு பதிவு எழுதி,  கமல் ஒரு கலைத்தெய்வம் என்ற விஷயத்தை (கஷ்டப்பட்டு) நிரூபிக்க முயற்சி செய்துள்ளனர். அவற்றைப் படித்த பின் தான், அவர்கள் அதில் போட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது. உண்மையை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் , அவர்கள் கொடுத்திருக்கும் விஷயங்கள் – Totally illogical to the core என்று சொல்லலாம். அவற்றின் இணைப்புகளை இங்கே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். இதோ அவற்றில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு எனது பதில்.

 

மயில்ராவணன் – இப்பதிவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் ;-). யாரோ கோகுல் என்ற நபர், எனது கட்டுரையைப் படித்து, ரத்தக்கொதிப்பில் அவசர அவரசமாக எழுதிக்கொடுக்க, அதனை நண்பர் மயில்ராவணன் தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நான் சில கேள்விகளைப் பின்னூட்டத்தின் வாயிலாகக் கேட்டிருந்தேன். அவைகளுக்கு இன்று வரை பதிலில்லை.  அந்த கோகுல் என்னும் நபர், ஏதோ நாவல் படித்துக்கொண்டிருக்கிறாராம். முடித்து விட்டு, ‘நேரமிருந்தால்’ வந்து பதில் சொல்கிறேன் என்று மறைந்து விட்டார். என் பதிவைப் படித்து, அவசரமாக ஒரு பதிவு எழுதிக்கொடுக்க நேரமிருக்கையில், கேள்வி கேட்டால் பதில் சொல்ல நேரமில்லை என்று அவர் சொல்லிவிட்டு மறந்து போனது, ஒரு நல்ல நகைச்சுவை சம்பவம்.

 

மோகன் – எனது பதிவுக்கு வந்த முதல் பதில் பதிவு இதுதான்.

 

நாஞ்சில் பிரதாப் – இதுவும் ஒரு பதில் பதிவுதான்.

 

ஜாக்கி சேகர் – இப்பதிவை, இன்று காலை பார்த்தேன்.

 

சரி. இப்பொழுது, இவர்கள் பதிவுகளில், எனது பதிவில் நான் சொல்லியிருந்த (கமல் ஈயடிச்சாங்காப்பி அடித்தது தவறு) விஷயங்களுக்கு, இவர்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதன்பின், எனது கருத்தைச் சொல்கிறேன்.

 

1. ஒரு ஹோட்டலில் உள்ள உணவை, இன்னொரு ஹோட்டல்காரன் செய்துவிட்டு, இது அதன் காப்பி என்று நாம் வாதம் செய்தால் சரியா? அதனை எல்லாரும் ஒத்துக்கொள்வார்களா? ஒரு கட்டிடத்தைப் போல் இன்னொரு கட்டிடம் கட்டிவிட்டு, இது அதன் காப்பி என்று சொன்னால் சரியா? பரிட்சையில் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து வாந்தியெடுத்தால் தான் அதிக மதிப்பெண் கிடைக்கிறது.  ஒரு பாடலை எப்படியே பாடிக்காண்பிப்பவர் தான் சிறந்த பாடகர். இப்பெடியெல்லம் இருக்கையில், சினிமாவில் மட்டும் காப்பியடித்தால் அதனை ஏன் எதிர்க்கிறாய்? எனவே, கமல் செய்தது தப்பு இல்லை.

 

பதில் – இவையெல்லாம் லாஜிகல் உதாரணங்கள் தானா?  Copyright என்று ஒரு விஷயம் இருப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? எந்தத் துறையில் ஈயடிச்சாங்காப்பிக்கு மரியாதை இருக்கிறது? உணவை ஒரே மாதிரி செய்வதுதான் முறை. பொங்கலில் இனிப்பு கலந்து சாப்பிடுவீர்களா? அய்யா புத்திசாலிகளே – உணவையும் கலைத்திருட்டையும் ஒப்பிடுவதே கோமாளித்தனம் இல்லையா? அதே போல் இந்த பரிட்சை உதாரணம். இதெல்லாம் ஒரு உதாரணமா? பரிட்சையில் எல்லாக் கேள்விகளுக்கும் புத்தகத்தில் உள்ளதற்கு மாறாக ‘பிம்பிளிக்கி பிளாப்பி’ என்று எழுதித்தான் பாருங்களேன் :-). இதைப்போன்றதே தான் அந்தப் பாடகரின் உதாரணமும் ;-) .

 

ஒரு நிகழ்ச்சி, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்தது நாமெல்லாருக்கும் நினைவிருக்கலாம். நண்பர் ஜாக்கி சேகரின் சில கட்டுரைகள், வேறு ஒருவரின் பெயரில் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்தன. உடனே ஜாக்கி என்ன செய்தார் என்பதை யோசியுங்கள். அவர், ‘ஆஹா.. நாம் சமைத்த அதே உணவு பாக்யாவில் வந்திருக்கிறதே ! என்ன ஒரு ஆச்சரியம் ! எனக்கு மெத்த மகிழ்ச்சி. நான் இதைக்குறித்துப் புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அந்த நண்பருக்கு வாழ்த்துகள்’ என்றா எழுதினார்? அப்பட்டமான கலைத்திருட்டு இது என்று வன்மையாக இதை அவர் கண்டிக்கவில்லையா? பாக்யாவுக்கே தொடர்பு கொண்டு, இதனைப்பற்றி அவர் எடுத்துரைக்கவில்லையா? நாம் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம் அல்லவா? அதுதான் சரியும் கூட.

 

சில நாட்களுக்கு முன்னர், தனது பதிவு காப்பியடிக்கப்பட்டதை வன்மையாக எதிர்த்த அதே ஜாக்கி தான், இன்று கமல் காப்பியடித்தது தவறில்லை என்று பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, ஜாக்கிக்கு நேரும் அநீதி, தவறு. ஆனால், அதுவே ‘ஒலக நாயகன்’ மற்றொருவருக்குச் செய்யும்போது, அது முற்றிலும் சரி !

 

இது என்ன வகை நடுநிலைமையைச் சேர்ந்தது  என்று நண்பர்கள் யாராவது எனக்குத் தெரிவியுங்கள் .

 

ஜாக்கியின் பதிவில், இதைப்போன்ற மொண்ணையான உதாரணங்களே நிறைந்துள்ளன.  சில உதாரணங்கள் இங்கே.

 

”காமெரா ஆங்கிள்கள் கூட, ஒரே போன்ற ஆங்கிள்கள்தான் வைக்கின்றனர். நெருப்பைக் கண்டுபிடித்தவன் ஒருவன் தான். ஆனால், அதில் இருந்து விதவிதமான உணவு வகைகளைச் சமைக்கிறோம். ஆதாம் ஏவாள் ஒருவர்தான். அவரில் இருந்து தோன்றிய காப்பிகள் தான் நாமும் இத்யாதி இத்யாதி..” – அடக்கொடுமையே! :-). copyright வாங்கிவைத்திருக்கும் ஒரு விஷயத்தை, இவைகளைப் போன்ற, யாரும் செய்யக்கூடிய ஒரு சாதாரண விஷயத்தோடு ஒப்பிடுவது லாஜிகலே இல்லை என்று ஜாக்கிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

 

2. சுட்டு எடுத்தால் என்ன சுடாமல் எடுத்தால் என்ன? ருசியாக இருந்தால் மட்டும் போதும். அந்தவகையில் கமல் ஒரு சகாப்தம்தான்

 

பதில் – மேலே ஜாக்கிக்குக் கொடுத்த அதே உதாரணம் தான் இங்கும். இப்படி எழுதும் உங்களின் பதிவை, யாராவது சுட்டால், இதே போல் எழுதுவீர்களா? அந்தச் சமயத்தில் ‘வீறுகொண்டு’ எழ மாட்டீர்கள்? :-)

 

3. சில இடங்களில், காப்பியடித்ததற்கு நன்றி கூறி க்ரெடிட் கொடுப்பது  தேவையற்ற ஒன்றாகிறது. உழைப்பு என்ற ஒன்றுக்கு அங்கீகாரம் வேண்டுமெனில் அங்கு தன்பெயர் அவசியமாகிறது

 

பதில் - உழைப்புக்கு அங்கீகாரம் எல்லாம் சரிதான். ஆனால், அதற்கு, சொந்தமாகப் படம் எடுத்துவிட்டுப் போகலாமே. அதற்கு ஈயடிச்சாங்காப்பி அடித்து, அதற்குத் தனது பெயரைப் போடவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கேள்வியே.

 

4. கமல் , காப்பியடித்த படங்களுக்குக் கிரெடிட் போடாதது ஏனெனில், இந்தியா முழுவதும் இப்படித்தான் காப்பியடிப்பது நடந்து கொண்டிருக்கிறது. எனவே, கமல் செய்தது சரி.

 

பதில் – ஓஹோ ;-) . நான் கேட்பது என்னவெனில், விஜய், ராமநாராயணன், பேரரசு போன்றவர்கள் எடுக்கும் படங்களைப் பற்றி நாம் விவாதிப்பதில்லையே. ’ஒலகநாயகன்’ என்ற ஒரு பெயரால் விளிக்கப்பெறும் ஒரு ஆள், ‘ஆஸ்கர் வந்து விட்டது’, ‘எனது படங்கள் நல்ல படங்கள்’ போன்ற மாயைகளை மக்களுக்கு மத்தியில் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், நைஸாகப் பல படங்களில் இருந்து  ஈயடிச்சாங்காப்பி அடித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதைப் புரிவிக்க வேண்டும் என்பதனாலேயே எனது பதிவை எழுதினேன்.  அப்படி இருக்க, அவர் காப்பியடித்ததில் தவறில்லை என்று வாதிட்டால், எனது பதில் – ஒரு சிரிப்பு மட்டுமே ;-).

 

இதைத்தவிர, மேலே பதிவு எழுதியிருக்கும் நண்பர்கள் எல்லாமே, காட்ஃபாதர் படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ’அது கமலே சொல்லிவிட்டுச் செய்த ஒன்றுதான். அதில் தப்பில்லை’ என்று மட்டுமே எழுதியிருக்கின்றனர். நான் குறிப்பிட்டிருக்கும் மற்ற ஈயடிச்சாங்காப்பிப் படங்களைப் பற்றிப் பேச்சு மூச்சே காணவில்லை.

 

மட்டுமல்லாமல், இன்னொரு விஷயமும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ’கமல் கொஞ்சமாகத்தான் ஈயடிச்சாங்காப்பி அடித்தார். மற்றதெல்லாம் அவரது சொந்தச் சரக்கு’ என்று எழுதியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் ஒரு பதில் என்றே கூறமுடியுமா? :-) கண்டபடி காப்பியடித்திருக்கும் கமல், இடையிடையே சொந்தச் சரக்கு வைக்காமல் இருந்திருந்தால், ஃபீல்டை விட்டே ஓரம்கட்டப்பட்டிருப்பார். அது அவரது குயுக்தி.

 

அதே போல், இன்னொரு விஷயம் என்னவெனில், நல்ல படம் என்று எடுத்து, எங்களைப்போன்றவர்களின் ரசனையை மாற்றிய கமலுக்கு நன்றிகள் ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி என்ற ஒரு விஷயத்தையும் பார்த்தேன்.

 

அது என்னங்க அது? கமல் படம் பார்க்கவில்லையெனில், நீங்கள் மாறியே இருக்கமாட்டீர்களா? நீங்கள்தான் உலகப்படங்களைப் பற்றிப் பலருக்கும் எழுதிப் புரியவைத்துக்கொண்டிருக்கிறீர்களே? கமல் படங்களைப் பார்க்காமல் இருந்திருந்தாலும், நீங்கள் இப்படித்தான் உலகப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்பதே உண்மை. மட்டுமல்லாமல், மிக மிக எளிதாக இப்போதெல்லாம் உலகப்படங்கள் கிடைக்கின்றன. எனவே, அவைகளைப் பார்க்கப் பொறுமை இல்லை என்பதே தகுந்த காரணமாக இருக்க முடியுமே தவிர, வேறு எதுவும் இல்லை.  ஒருவேளை, கமல் அடித்த காப்பிகளைப் பார்த்து, நெட்டில் தேடினால், அவைகளின் ஒரிஜினல் படங்கள் கிடைத்து, அதன் மூலம் உலக சினிமா அறிவை விருத்தி செய்துகொண்டிருந்தால், அப்போது அதிக உலகப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் :-).

 

என்னுடைய வாதம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு படங்களை ஈயடிச்சாங்காப்பி அடித்துக் கொண்டிருக்கும் கமல் ஹாசன் என்ற நடிகர், உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்பதே தெரியாமல், இப்பொழுது தெரிந்த பின்னும், முரட்டுத்தனமாக (எந்த சாரமான காரணமும் இல்லாமல்) வக்காலத்து வாங்கும் மக்களைப் பார்க்கையில், வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்படும் பலியாடுகளைப் பற்றிய சிந்தனை ஏனோ என் மனதில் எழுகிறது.

 

ஆயிரம் நல்ல இயக்குநர்கள், நடிகர்கள் உலகில் உண்டு. வெளியே வாருங்கள் நண்பர்களே. உங்களது வீட்டு வாசலிலேயே உலகின் சிறந்த படங்கள் கிடைக்கின்றன. அவைகளை எந்தத் தடையுமில்லாமல் உங்களால் பார்க்க முடியும். எனவே, அதை விட்டுவிட்டு, காப்பிகளை அடித்து, போலிப்புகழைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகரின் பின்னால் சென்று, அதனை நியாயப்படுத்தும் வேலை எதற்கு?

 

பி.கு  - எனது தளத்தில் நான் எழுதிவரும் கட்டுரைகள், எந்தச் சார்பு நிலையும் இல்லாமல், நடுநிலையாகவே வந்துகொண்டிருப்பது நண்பர்களுக்குத் தெரியும். இனியும் அப்படித்தான்.  எந்தச் சாதி மற்றும் மதச் சாயமும் அவைகளுக்கு இருக்கப்போவது இல்லை. எனவே, எனது விவாதத்தை, ஆரோக்கியமான ஒன்றாகப் பாவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஜாக்கி,  நாஞ்சில் பிரதாப், மயில்ராவணன், மோகன் மற்றும் பலரும் எனது நண்பர்களே

.

Sunday, September 5, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 11:57 PM 312 comments

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

panchathanthiram    picverybadthings

 


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.


தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.


ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.


ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…


இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?


சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்.  கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.


இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.


இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.


நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.


ராஜபார்வை –
கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.


சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம்.  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.


இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.


அதேபோல், ‘The Graduate' (1967) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் கிளைமேக்ஸை, ராஜபார்வையின் கிளைமேக்ஸுடன் சற்றே ஒப்பிட்டால்கூட, மிக எளிதாக, ராஜபார்வையின் க்ளைமேக்ஸ் காப்பியடிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்.


இதில் ஆரம்பித்த கமலின் காப்பி சரித்திரம், எப்படித் தொடர்கிறது என்று பார்க்கலாம்.


எனக்குள் ஒருவன்  –
கமல்ஹாஸனின் குரு என்று அவராலேயே குறிப்பிடப்பெறுபவர் , கே. பாலசந்தர். இவருக்கு, ’இயக்குநர் சிகரம்’ என்று ஒரு பட்டம் இருப்பது தெரிந்ததே. ஆனால், இந்த பாலசந்தர், இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கின் ‘மேகே தக்க தாரா’ படத்தை மொத்தமாக அட்டைக்காப்பி அடித்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தை எடுத்து, படத்தின் அத்தனை புகழையும் தனக்கே உரியதாகக் காட்டிக்கொண்டது பல நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதைப்பற்றிய எனது பழைய பதிவைப் படித்துப் பாருங்கள்.


பாலசந்தர் தயாரிக்க, கமல் நடித்த படமே ‘எனக்குள் ஒருவன்’. படத்தின் கதை: சென்னையில் வாழ்ந்துவரும் ஒரு டிஸ்கோ நடனக்கலைஞனுக்கு, திடீரென பூர்வஜென்ம நினைவு வந்துவிடுகிறது. அதனையடுத்து, பூர்வஜென்மத்தில் தான் வாழ்ந்த இடத்துக்குச் சென்று, தனது பூர்வஜென்ம வாழ்க்கையில் சம்மந்தப்பட்டிருப்பவர்களிடம் பேசி, தனது மரணத்துக்குக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதே இதன் கதை.


இப்போது, ’The Reincarnation of Peter Proud (1975) என்ற ஆங்கிலப்படம்.  இதிலும், ஹீரோவுக்கு போனஜென்ம நினைவுகள் பொங்கி வருவதால், அந்த நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு அவன் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் போன ஜென்மக் கணவன் தான் இந்தப் பீட்டர் ப்ரௌட் என்பது தெரிகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.


இதுதான் எனக்குள் ஒருவனின் கதை என்பது மேலே கொடுத்துள்ள சுருக்கத்தைப் படித்தாலேயே தெரியும்.


இந்திரன் சந்திரன் –
கமல் நடித்த நகைச்சுவைப் படம். மேயராக ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு சாதாரண ஆளின் கதை.


’Moon Over Parador (1988)
என்ற ஆங்கிலப்படத்தின் கதையைக் கவனியுங்கள். ஒரு ஊரில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜாக், அந்த ஊரின் ஜனாதிபதி திடீரென்று இறந்துவிடுவதால், அந்த ஜனாதிபதியின் முக்கிய அடியாளால் அழைக்கப்பட்டு, ஜனாதிபதி போல் வேடம் போட்டு, அதன்பின் மக்களாலேயே நம்பப்பட்டு, இறந்த ஜனாதிபதியின் மனைவியே இவனை நம்பும் அளவு போய், அதன்பின் இந்த சிக்கலிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதே படம்.


இந்திரன் சந்திரன், இந்த மூன் ஓவர் பேரடார் படத்தின் காப்பியா இல்லையா?


அதிலும், இந்த இரு படங்கள் வெளிவந்த ஆண்டுகளைக் கவனியுங்கள். சுடச்சுட காப்பியடிக்கப்பட்டது தெரியவரும்.


வெற்றிவிழா –
இந்த விஷயம், நமது நண்பர்கள் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.. ‘Bourne Identity’ நாவலே தமிழில் வெற்றிவிழாவாக மாறியது.


குணா –
இன்றும், கமலின் ரசிகர்களால் மறக்கவியலாத படம் இது. அவ்வளவு அருமையான படம். ஒரு மனநலன் குன்றிய நபர், தனக்கு இன்னொருவரால் கற்பிக்கப்பட்ட ‘அபிராமி’ என்ற கற்பனைப் பெயரின்மீது பைத்தியமாகி, பின் ஒரு பெண்ணை, அபிராமி என்றே நினைத்து, கடத்தி, பின் இருவரும் இறந்துபோவது,குணாவின் கதை.


உலக சினிமா ரசிகர்களுக்கு, பெத்ரோ அல்மதோவார் (Pedro Almodóvar) பற்றித் தெரிந்திருக்கும். மறக்கவியலாத பல அருமையான படங்களை இயக்கியவர். தற்கால உலக சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்.


இவர், 1990ல் இயக்கிய ஒரு ஸ்பானிஷ் படமே, ‘Tie me up tie me down !’. இதன் கதை, வேறொன்றுமில்லை. ’மரீனா’ என்ற ஒரு நடிகை மீது பைத்தியமாக இருக்கும் ரிக்கி என்ற மனநலம் குன்றிய இளைஞன், அவளைக் கடத்தி, சிறை வைத்து, அவளைத் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு கடத்தியதாகச் சொல்ல, முதலில் அவனை வெறுத்து, அவனிடமிருந்து தப்பித்து, அதன்பின் அவனால் கவரப்பட்டு, காதலில் விழுந்து, பின் இருவரும் இணைவதே கதை.


குணா - Tie me up tie me down ! படத்தின் அப்பட்டமான காப்பி என்பது இப்போது புரிகிறதா?


மகளிர் மட்டும்  –
இது, கமல்ஹாஸன் தயாரித்த படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கம். ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களைப் பற்றிய கதை.


சரி. அருமையான படம்தான். இப்போது, Nine to Five (1980)’ என்ற படத்தின் கதையைப் பார்ப்போம். தங்களது ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களின் கதை தான் இது. அடடே ! மேலே மகளிர் மட்டும் படத்தின் கதைச் சுருக்கத்தையே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறதே !! (ஆச்சரியக்குறி).


நம்மவர் –
இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது.  ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.


To Sir with Love (1967)
படத்தைப் பார்ப்போம். இது, மிகப் பிரபலமான ஹாலிவுட் கறுப்பின நடிகர் சிட்னி பாய்ட்டியர் (பல இன்னல்களைக் கடந்து வந்து சூப்பர் ஸ்டார் ஆனவர்) நடித்தது. சில ரவுடி மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வரும் ஒரு வாத்தியாரின் மீது கோபம் கொள்ளும் மாணவர்கள், எதிர்வினை புரிவதும், இதனால் பாதிக்கப்படும் வாத்தியார், தனது பிரத்யேக வழிமுறைகளினால் அவர்களை வழிக்குக் கொணர்வதே கதை. வாத்தியார், மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் படலம் கூட இதில் உண்டு. (கேன்சர் மட்டும் கமலின் கைவண்ணம்).


சதி லீலாவதி –
நகைச்சுவை நடிப்பில் கமல் முத்திரை பதித்த படம். கதை என்ன? மனைவி குண்டாக, கவர்ச்சியற்று இருப்பதால், இன்னொரு பெண்ணுடன் பழகும் ஒருவனை, அவனது நண்பன் திருத்துவதே கதை.


She – Devil (1989)
என்ற படம், இதே கதையோடு வந்திருக்கிறது. கதை? ரூத் என்பவள், ஒரு மிகக்குண்டான பெண். தனது கணவன் பாப்பை அன்புடன் கவனித்துக் கொள்பவள். ஆனால், பாப்புக்கு மனைவி குண்டாக இருப்பது பிடிக்கவில்லை. எனவே, தான் சந்திக்கும் ஒரு எழுத்தாளினியோடு காதல் வசப்பட்டு, அவளுடனே போய்விடுகிறான். மனது நொறுங்கும் அந்த மனைவி, திட்டம் போட்டு பாப்பைத் திருத்துவதே கதை. ஆனால் இதில், நண்பன் கதாபாத்திரம் இல்லை. மூலப்படத்தில் மனைவி செய்த விஷயங்களை, தனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கமல் நடித்தார்.


அவ்வை சண்முகி –
இப்படம், Mrs. doubtfire படத்தின் தழுவல் என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், இது ‘Tootsie (1982)’ படத்தின் அட்டைக்காப்பி என்பது, ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறேன். முடிந்தால் டூட்ஸியின் கதையை, மேலே க்ளிக்கிப் படிக்கவும். படத்தைப் பார்த்தால், இன்னும் உத்தமம்.


பஞ்ச தந்திரம் –
ஐந்து நண்பர்கள். இடையே ஒரு விலைமாது. குழப்பங்கள்.


இப்போது, ’Very bad things (1988)’ என்ற படம். ஃபிஷர், தனது நான்கு நண்பர்களுடன், திருமணத்துக்கு முந்தைய பேச்சிலர் பார்ட்டியை, லாஸ் வேகாஸில் கொண்டாடுகிறான். அப்போது, போதையில், அங்கு நடனமாடும் பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதனை மறைத்து, ஹோட்டல் ரூமில் ஒளித்து வைக்கப்படும் பிணத்தை, அவனது நண்பன் பாய்ட் டிஸ்போஸ் செய்து, அதன்பின் நடக்கும் குழப்பங்களையும் சமாளிக்கிறான்.  இந்த நண்பர்களில் சிலருக்கு ஏற்படும் நடுக்கத்தால், மெல்ல மெல்ல விஷயம் வெளியே கசிகிறது. ஆனால், ஃபிஷர், ஹோட்டலில் ஒரு விலைமாதுவுடன் ஏற்பட்ட கசமுசாவாக ஒரு பொய்யை ஜோடித்து, அதன்மூலம் கதையைத் திசைதிருப்புகிறான். பின் நடக்கும் குழப்பங்களே கதை.


இது காப்பியா இல்லையா?


தெனாலி –
இது, ‘What about Bob’ படத்தின் காப்பி. பாப் என்பவன், பல ஃபோபியாக்களைத் தனக்குள் வைத்திருக்கும் ஒரு பயந்தாங்குள்ளி. லியோ என்ற மருத்துவரிடம் வருகிறான். ஆனால், அப்போது, அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிடுகிறார். பாப்பை லியோவிடம் அனுப்பியது, லியோவின் போட்டி மருத்துவர் ஃபென்ஸ்டர்வால்ட்.


சுற்றுலா சென்ற இடத்துக்கு, பாப், தனது மருத்துவரைத் தேடி வர, கடுப்பாகும் லியோ, பாப்பை ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்ப முயல்கிறார்.  போகும் பாப், மறுபடி மறுநாள் அங்கேயே வந்துவிடுகிறான்.  லியோவின் குடும்பத்துக்கு பாப்பை மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால், லியோ பாப்பை வெறுக்கிறார். லியோ கொடுக்கும் தொலைக்காட்சிப் பேட்டியில் கூட, பாப் குறுக்கே வந்துவிடுவதால், பாப்பே பேசிப் பிரபலமாகிவிட, லியோவின் கடுப்பு எகிறுகிறது.  அவனை இழுத்துக்கொண்டு ஒரு பைத்தியக்கார விடுதிக்குச் செல்லும் லியோ, அங்கேயே அவனை விட்டுவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், மறுநாள்  அங்கிருந்து அவனை அழைக்கும் நிர்வாகிகள், பாப் சொல்லிய நகைச்சுவைக் கதைகளால் கவரப்பட்டு, அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லி, விடுவித்துவிடுகின்றனர். கடுப்பாகும் லியோ, பாப்பை குண்டுக்கட்டாகக் கடத்தி, காட்டில் விட்டுவிட்டு வர, அதிலிருந்தும் மீண்டுவிடுகிறான் பாப். கடைசியில், லியோவின் ஈகோ, பாப்பினால் எப்படித் திருத்தப்படுகிறது என்பதே கதை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெனாலி இந்த ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி.


அன்பே சிவம் –
இதுவும், பல பேருக்குத் தெரிந்திருக்கும். ‘Planes, Trains and Automobiles’ என்ற ஆங்கிலப்படத்தின் புத்திசாலித்தனமான காப்பி. புத்திசாலித்தனம் என்று ஏன் சொன்னேன் எனில், மேல் பார்வைக்கு, இது அப்படித் தெரியாது. ஆனால், ஊன்றிக் கவனித்தால், காப்பியடித்தது தெரியும்.


ஹே ராம் –
கமலின் மிகச்சிறந்த படமாக இன்றும் சொல்லப்படும் படம் இது (ஆனால், இப்படத்திலும், வழக்கப்படி தனது இந்துத்துவ ஈடுபாட்டையும், முஸ்லிம் வெறுப்பையும் கமல் வெளிப்படுத்தியிருப்பார் என்பது வேறு விஷயம்).


‘Barabbas (1961)’
என்று ஒரு படம். இது, ஒரு பைபிள் கதை. ஏசுவைச் சிறைபிடிக்கும் அரசு, ஏசு அல்லது பரப்பாஸ் என்ற கைதி – இருவரில் ஒருவரைத்தான் விடுவிக்க முடியும் என்று சொல்ல, மக்கள் தேர்ந்தெடுப்பது பாரப்பாஸை. விளைவாக, ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். ஏசுவுக்குப் பதிலாகத் தான் ஏன் விடுவிக்கப்பட்டோம் என்ற கேள்வி, பாரப்பாஸை, படம் முழுக்க அலைக்கழிக்கிறது.


இதில், பாரப்பாஸ் ஒரு குருட்டுப் பிச்சைக்காரியை எதிர்கொள்ளும் காட்சி, ஹேராமில் அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டதைக் காணலாம். மட்டுமில்லாமல், சற்றே யோசித்துப்பார்த்தால், காந்திக்குப் பதில் ஏசு, பாரப்பாஸுக்குப் பதில் ராம் என்ற ஒற்றுமையைப் புரிந்துகொள்ளலாம்.


மற்றபடி, நாயகன், தேவர் மகன் (காட்ஃபாதர்), விருமாண்டி (திரைக்கதை உத்தி – ரஷோமோன் & படத்தின் தீம் – Life of David gale) போன்ற படங்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


இந்த காப்பியடித்த பட்டியலைப் பார்த்தால், கமல் ஒரிஜினலாக நடித்த படங்கள் மிகக்குறைவே என்பது தெரிகிறது. அவரது ஒரிஜினல் கதைகளுக்கு, தசாவதாரம் போன்ற குப்பைகளை உதாரணமாகக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.


இப்பொழுதும் சொல்கிறேன். கமல் எண்பதுகளில் ரஜினியுடன் போட்டிபோட்டு மசாலாப்படங்களில் நடித்தபோது, நான் அவருக்கு ரசிகன் தான். ஆனால், அவர் காப்பியடிக்க ஆரம்பித்து, அதைப்பற்றி நான் தெரிந்துகொண்டவுடன், அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது.  இந்த அசூயை ஏனெனில், plagiarism என்பது மன்னிக்க முடியாத குற்றம். தன்னை ஒரு அறிவுஜீவியாக, பெரியாரின் வழித்தோன்றலாகக் காண்பித்துக் கொள்ளும் ஒரு மனிதர், இப்படி சரமாரியாகப் பிற படங்களைச் சுட்டுப் படங்கள் எடுத்து, அதனை இவரே சொந்தமாகச் செய்ததுபோல் ஜம்பம் அடித்து (இதில் ஆஸ்கர் ஆஸ்கர் என்ற கூக்குரல் வேறு) விளம்பரப்படுத்துவதைக் கண்டிப்பாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.


இன்னொரு விஷயம்: பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா?


கட்டுரை நீண்டுவிட்டதால், இத்துடன் முடிக்கிறேன். மீண்டும், நேரம் கிடைத்தால், தொடருவோம்.


பி.கு  1– என்னதான் காப்பியடிப்பதைப் பற்றி நான் எழுதினாலும், நான் ரஜினி ரசிகன்; ஆகவே கமலைத் திட்டுகிறேன்.. கமல் நடிப்புக் கடவுள்.. இத்யாதி ரீதியிலான பின்னூட்டங்கள் வரத்தான் போகின்றன என்பது தெரியும். இருந்தாலும், கமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் இந்தக் காப்பியடிக்கும் வேலையைச் சொல்லாமல் இருப்பது சரியாக இருக்காது என்பதனாலேயே இதனை எழுதினேன்


பி.கு 2 – இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. இந்தத் தளத்தில், விடியோ காட்சிகளுடன் ஆதாரங்கள் உள்ளன. நான் கமல் அல்ல என்பதால், ஒரிஜினல் பதிவை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை


பி.கு 3 – நமது சாரு, இந்தியா டுடேவில் சென்ற வருடம் கமலைப் பற்றி எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நிகழ மறுத்த அற்புதம்’. அதுதான் இக்கட்டுரையின் தலைப்பும் கூட

.